Header Ads



புத்தளம் - கொழும்பு வீதியில் ஆர்ப்பாட்டம், அடிபணிந்தனர் பொலிஸார்

புத்தளம் - கொழும்பு வீதியின் தூரப் பயணச் சேவை பஸ்களின் பயணிகளும், பஸ் சாரதிகளும் புத்தளம் சிராம்பியடி பிரதேசத்தில் சுமார் இரண்டு மணி நேரமாக வீதியை மூடி போக்குவரத்துப் பொலிஸாருக்கு எதிர்ப்பைத் தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இன்று (21) இடம்பெற்ற குறித்த ஆர்ப்பாட்டம் காரணமாக அவ்வீதியின் வாகனப் போக்குவரத்துக்கு பாதிப்பு ஏற்பட்டது.

புத்தளம் அநுராதபுரம் வீதியில் பயணிக்கும் யாழ்ப்பாணம் கொழும்பு, மன்னார் கொழும்பு, அநுராதபுரம் கொழும்பு போன்ற தூரப் பயண பஸ்களில் அதிகளவு பயணிகள் ஏற்றப்பட்டதற்காக தண்டப் பண பத்திரம் வழங்கியமைக்கு எதிர்ப்புத் தெரிவித்தே குறித்த ஆர்ப்பாட்டம் இடம்பெற்றதைத் தொடர்ந்து அங்கு பதற்ற நிலை தோன்றியது.

இன்று (21) காலை 8.30 மணியளவில் ஆரம்பித்த இந்த எதிர்ப்பு நடவடிக்கை காலை 10.30 மணி வரையில் இடம்பெற்றது.

எவ்வாறாயினும் அவ்விடத்திற்கு சென்ற புத்தளம் பொலிஸ் நிலைய பெறுப்பதிகாரி, பிரதான பொலிஸ் பரிசோதகர் அநுர குணவர்தன உள்ளிட்ட சுமார் 30 பேரளவிலான பொலிஸார் நிலைமையினைக் கட்டுப்படுத்த பாரிய முயற்சிகளை மேற்கொண்டதைக் காண முடிந்தது.

இன்றைய தினம் பொலிஸாரால் வழங்கப்பட்ட தண்டம் செலுத்துவதற்கான பத்திரத்தை ரத்துச் செய்து தமது சாரதி அனுமதிப் பத்திரங்களை மீள ஒப்படைத்தால் மாத்திரமே இந்த எதிர்ப்பு நடவடிக்கையிலிருந்து விலகிச் செல்வதாக பஸ் சாரதிகளும், பயணிகளும் தெரிவித்தனர்.

இதனையடுத்து அனைத்து சாரதிகளையும் புத்தளம் பொலிஸ் அத்தியட்சகர் அலுவலகத்திற்கு வருமாறும் அங்கு வைத்து இது தொடர்பில் சுமுகமான தீர்மானம் ஒன்றை மேற்கொள்ளலாம் என பொலிஸ் பொறுப்பதிகாரி தெரிவித்ததையடுத்து சாரதிகளும் பயணிகளும் எதிர்ப்பு நடவடிக்கையினைக் கைவிட்டு விட்டு அங்கிருந்து விலகிச் செல்வதற்கு இணக்கம் தெரிவித்தனர்.

No comments

Powered by Blogger.