5 கோடி ரூபா ஹெரோயினை கரைத்துஇ இறப்பர்களிடையே ஒட்டி கடத்தல் - கட்டுநாயக்காவில் ஒருவர் கைது
ஹெரோயின் போதைப் பொருளை கரைத்து இறப்பர்களிடையே ஒட்டி விரிப்புக்களை செய்து இறப்பர் விரிப்புக்களை கொண்டுவரும் போர்வையில் 5 கிலோவுக்கும் மேற்பட்ட ஹெரோயினை நாட்டுக்குள் கடத்தி வந்த பாகிஸ்தானிய பிரஜை ஒருவரை பொலிஸ் போதைப் பொருள் தடுப்புப் பிரிவினர் கைது செய்துள்ளனர்.
இந்நிலையில் அவரை 7 நாள் தடுப்புக் காவலில் வைத்து விசாரணை செய்து வருவதாக பொலிஸ் போதைப் பொருள் தடுப்புப் பிரிவினர் தெரிவிக்கின்றனர்.
இது தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது, நேற்று முன்தினம் அதிகாலை கட்டுநாயக்க விமான நிலையத்துக்கு வந்த கியூ. ஆர். 668 எனும் விமானத்தில் கத்தாரிலிருந்து பாகிஸ்தான் பிரஜை ஒருவர் வந்துள்ளார்.
கத்தார் உள்ளிட்ட மத்திய கிழக்கு விமான நிலையங்களை போதைப் பொருள் கடத்தலுக்கு சூட்சுமமாக பயன்படுத்துகின்றமை தொடர்பில் போதைப் பொருள் தடுப்புப் பிரிவினர் பல்வேறு தகவல்களை பெற்றிருந்தனர்.
இந்த நிலையில் கட்டுநாயக்க விமான நிலைய போதைப் பொருள் தடுப்புப் பிரிவினர், கத்தாரிலிருந்து வந்த பாகிஸ்தான் பிரஜையில் சந்தேகம் கொண்டு அவரது பயணப் பெட்டியை சோதனை செய்துள்ளனர். இதன் போதே அந்த பெட்டியில் ஹெரோயின் கலந்து செய்யப்பட்ட இறப்பர் விரிப்புக்கள் மூன்று இருப்பதை பொலிஸார் கண்டறிந்தனர்.
ஹெரோயினை கரைத்து இரு இறப்பர் விரிப்புக்களுக்கு நடுவே வைத்து ஒட்டி அவ்விரு விரிப்புக்களும் ஒட்டப்படுகின்றன. பின்னர் அந்த விரிப்புக்கள் சந்தையில் விற்கப்படுவதுடன் போதைப் பொருள் பயன்பாட்டாளர்களின் தேவைக்கு அமைய விரிப்புக்கள் துண்டு துன்டாக வெட்டப்பட்டு விற்பனை செய்யப்படுகின்றன.
குறித்த இறப்பர் விரிப்புத் துண்டை எரிப்பதன் ஊடாக ஹெரோயினைப் பெற்று பயன்படுத்த முடியுமாக இருக்கும் என்பதையும் பொலிஸார் கண்டறிந்துள்ளனர்.
இத்தகைய முறையில் கடத்தப்படும் ஹெரோயின் போதைப் பொருளை கைப்பற்றும் முதல் சந்தர்ப்பம் இதுவென பொலிஸ் போதைப் பொருள் தடுப்புப் பிரிவினர் சுட்டிக்காட்டுகின்றனர். கைப்பற்றப்பட்ட போதைப் பொருளின் பெறுமதி 5 கோடி ரூபா என மதிப்பிடப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் பொலிஸ் போதைப் பொருள் தடுப்புப் பிரிவின் பிரதானி பிரதிப் பொலிஸ் மா அதிபர் கமல் சில்வாவின் ஆலோசனைக்கு அமைவாக மேலதிக விசாரணைகள் இடம்பெறுகின்றன.
சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட நபரை நீர்கொழும்பு பதில் நீதவான் கே.ஜி. குணதாச முன்னிலையில் சந்தேக நபர் ஆஜர் செய்யப்பட்டார். சந்தேக நபரை எதிர்வரும் 10 ஆம் திகதி வரை கொழும்பு போதைப் பொருள் ஒழிப்புப் பிரிவில் தடுத்து வைத்து மேலதிக விசாரணை செய்ய நீதிவான் உத்தரவிட்டார்.
Post a Comment