ஓரு எழுத்தை மாற்ற 10.000 ரூபா, இலஞ்சம் பெற்ற அதிகாரி சிக்கினார்
(எம்.செல்வராஜா)
காணி உரிமைப் பத்திரம் ஒன்றில் காணி உரிமையாளரின் பெயரின் ஓர் எழுத்தை மாற்றுவதற்கு பத்தாயிரம் ரூபாவை அரச அதிகாரி ஒருவர் இலஞ்சமாகப் பெற்றுள்ளமை தெரிய வந்துள்ளதாக மொனராகலை மாவட்ட அரச அதிபர் பத்மா சகலசூரிய தெரிவித்துள்ளார்.
மொனராகலை மாவட்டத்தைச் சேர்ந்த கதிர்காமம் பகுதியிலேயே இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக அவர் தெரிவித்தார்.
கதிர்காமப்பகுதியின் தயாகமகே கேட்போர் கூடத்தில் நடைபெற்ற காணி உரிமைப் பத்திரங்கள் வழங்கும் நிகழ்வு அமைச்சர் ரஞ்ஜித் மத்தும பண்டார தலைமையில் நடைபெற்ற போது மொனராகலை மாவட்ட அரச அதிபர் பத்மாசகல சூரிய மேற்கண்ட தகவலை வெளியிட்டார்.
அத்துடன், மாவட்ட காணி அலுவலகத்தில் காணி உரிமைப் பத்திரங்கள் வழங்கும் விடயங்களில் இலஞ் சஊழல்கள் அதிகம் காணப்படுகின்றன. இதனை பொறுப்புடனேயே இங்கு தெரிவித்துக் கொள்கிறேன். குற்றமிழைத்தவர்கள் தண்டனை அனுபவிக்கவே வேண்டும் என்றார்.
இதற்கு பதிலளித்த அமைச்சர் ரஞ்ஜித் மத்தும பண்டார, மாவட்ட அரச அதிபர் இங்கு முன்வைத்த இலஞ்ச ஊழல் தொடர்பான விடயங்கள் குறித்து கூடியகவனம் எடுக்கப்படும். தவறிழைத்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டியவர்களாவர்.
அரச ஊழியர்கள் மக்கள் தேவைகள் அறிந்து, அவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை நிவர்த்தி செய்ய வேண்டும். அதற்கென மக்களின் வரிப்பணம் மூலம் அரச ஊழியர்களுக்கு போதிய சம்பளம் வழங்கப்படுகின்றது.
இந்நிலையில் மக்களின் தேவைகளை நிவர்த்தி செய்யும் போது அவர்களிடம் இலஞ்சம் பெறுவது குற்றமாகும். இலஞ்சம் பெற்றமை குறித்து உடன் விசாரணைகள் மேற்கொள்ளப்படும் என்றார்.
Post a Comment