Header Ads



வடக்கு - கிழக்கு இணைப்பு தொடர்பான, இந்திய தீர்மானத்தை வரவேற்கும் அஸ்வர்

வடகிழக்கு இணைப்பைப்பற்றி இந்தியா இலங்கை அரசுக்குக்கு அழுத்தம் கொடுக்காது என்று இந்திய வெளிநாட்டு வெளியுறவு செயலாளர் ஜெய்சங்கர் தெரிவித்திருப்பதையிட்டு நாம் மிக்க மகிழ்ச்சியடைகிறோம் என முஸ்லிம் முற்போக்கு முன்னணியின் செயலதிபர் ஏ.எச்.எம். அஸ்வர் தெரிவித்தார்.

எதிர்க்கட்சி கூட்டணியின் ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றும் போது அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

வடக்கையும் கிழக்கையும் இணைக்க வேண்டும் என்று  ஒரு பெரும் முயற்சியில் சம்பந்தனும் அவர்களுடைய தோழர்களும் முயற்சித்து வருகின்றனர். இது எதிர்காலத்தில் இன்னுமொரு புலி இராச்சியத்தை உருவாக்கும் செயற்றிட்டமாகும். இந்த விடயத்தில் முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் மிகவும் அவதானமாக இருக்க வேண்டும். நாம் அன்று எதைக் கூறினோமோ அதனைத்தான் இன்று இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் பிரஸ்தாபித்திருக்கிறார். எனவே அன்று இலங்கை - இந்திய ஒப்பந்தம் ஏற்படுவதற்கு, இந்தியா இலங்கை ஜே.ஆர் ஜெயவர்தன அரசுக்கு அழுத்தம் கொடுத்தது போன்று இப்பொழுது அழுத்தம் கொடுப்பது இல்லை. என்பதை அழுத்தம் திருத்தமாக ஜெய்சங்கர் கூறியிருப்பது எமக்கெல்லாம் நிம்மதியைத் தருகின்றது.

எனவே வடக்கு வேறு மாகாணமாக இருக்க வேண்டும். கிழக்கு வேறு மாகாணமாக இருக்க வேண்டும் என்பதுதான் எங்களுடைய கோரிக்கையாக இருக்கின்றது. அது நியாயபூர்வமானது என்பதை இந்தியா இப்போது ஏற்றுக் கொண்டுள்ளதையிட்டு, நாம் உண்மையை உணர்ந்ததற்காக அவர்களுக்கு எமது நன்றியினைத் தெரிவித்துக் கொள்கின்றோம் என்று நவமணிப் பத்திரிகையை தூக்கிக்காட்டி பேசிய அஸ்வர், நவமணியின் ஆசிரியர் தலையங்கத்தை வாசித்துக் காட்டி, கேப்பாப்புலவு மக்களின் போராட்டம் வெற்றி பெறட்டும் என்று எழுதியிருக்கிறார்கள் என்பதைக் குறிப்பிட்டு நெடுங்காலமாக அரசாங்கம் தமிழர்களையும் ஏமாற்றி வருகின்றது; முஸ்லிம்களையும் ஏமாற்றி வருகின்றது. எனவே, தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்ற முல்லைத்தீவு மாவட்ட கேப்பாப்புலவு மக்களின்  போராட்டம், இன்றுடன் 23 நாட்களு க்கு மேலாக இடம்பெறுகின்றது. என்பதை சுட்டிக்காட்டிய அவர், இதற்கொரு தீர்வு காண வேண்டும் என்பதையும் அழுத்திக் கூறினார்.

‘எழுக தமிழ்’ என்ற போராட்டதை கிழக்கில் நடத்திக் கொண்டு செல்கின்ற விக்னேஸ்வரன், அதில் எழுக தமிழ், முஸ்லிம்கள் என்று கூட சும்மாவாவது முஸ்லிம்களைச் சேர்த்துக் கொள்ளவில்லை. அது தனித் தமிழை, தமிழ் உரிமையை மட்டும்தான் பேசியிருக்கின்றார்கள். எனவே முஸ்லிம்கள் அவர்களின் மீது எந்தவிதமான எதிர்பார்ப்பும் வைக்க முடியாது.

அதேபோன்று, ஆசிரியர்கள் 4000 பே ர் நியமிக்கப்படவிருப்பதாக கல்வி அமைச்சர் கூறியிருக்கின்றார். எனவே நியமிக்கப்பட இருக்கின்ற  4000 ஆசிரியர்களுள் மௌலவி ஆசிரியர்களையும் நியமிக்க, கட்டாயம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதையும் முஸ்லிம் முற்போக்கு முன்னணி வற்புறுத்திக் கேட்டுக்கொள்கிறது. 

No comments

Powered by Blogger.