Header Ads



மட்டையின் ஒய்வும், மனசின் வலியும்...!!


-ரீ.எல்.ஜவ்பர்கான்- 

நான் சிங்கத்தின் வெற்றி முகர்பவன்
ஆனாலும்
உன்னோடும் அடிக்கடி உலாவருகிறேன்...
கிரிக்கட் சோற்றை
தின்னப்பழகிய காலத்தில்
மியன்டாட்டின் மட்டைப்பீங்கான்தான்
என்னைப் பசியாறவைத்தது...
பின்னர் உன்ஆட்டம் குசிபாடவைத்தது
எங்களிடமும் நீயிருந்தாய்
சனத்களாக..
நம்மின் இருதேசங்களும் மோதும்போது
எங்கள் பூமி வெற்றியைத்தொட
கனவுசுமப்பேன்..
ஆனால் உன் ஆறுகளைக்காண
தவப்பாய் விரிப்பேன்....
உன்பாதங்கள் ஆடுகளத்தை முத்தமிட்டால்
எந்த கங்காருக்கும் காய்ச்சல்வரும்...
எவரெஸ்டாய் மாறிப்போகும்
உன் மட்டைபீச்சும் ஆறுகள்..
நயாக்ராவாய் அகன்று படுக்கும்
உன் துடுப்பு துப்பும் நாலுகள்..
உனக்கு ஆடத்தெரியாது
அடிக்கத்தான் தெரியும்...
நீ எல்லா மொழிகளையும் சுமக்கும்
முழமையான மனிதனைப்போல..
அடிப்பாய்..எறிவாய்..தடுப்பாய்..
நீ இலங்கையின் சனத்
இந்தியாவின் சச்சின்...
கங்காருவின் பொண்டிங்
கிவியின் பிளேமிங்...
வருத்தத்தால் மனசு வலிக்கிறது..
அப்ரிடி
நீ இனி ஆடுகளம் வரமாட்டாய் என்று...

No comments

Powered by Blogger.