Header Ads



முஸ்லிம்களை ஏமாற்றிய மைத்திரி, ஜனாதிபதி செயலகத்தை முற்றுகையிடுவோம் என றிசாத் எச்சரிக்கை

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனாவினால் இந்நாட்டு முஸ்லிம்களுக்கு ஏதேனும் நன்மை கிடைத்ததா, முஸ்லிம் பகுதிகளில் அபிவிருத்தி செய்யப்பட்டதா, முஸ்லிம்களுக்கு எதிரான இனவாத நடவடிக்கை தடுக்கப்பட்டதா, முஸ்லிம்கள் வணங்கி வழிபடும் அல்லாஹ்வையும் புனித அல்குர்ஆனையும் இழிவுபடுத்தியதற்காக ஞானசாரர் கைது செய்யப்பட்டாரா என அடுக்கடுக்காக கேள்விகளை எழுப்பிய  அமைச்சர் றிசாத் பதியுதீன், இனவாதிகளை வழிநடத்துவதில் ஜனாதிபதியின் மறைகரம் உள்ளது எனவும் சீற்றத்துடன் குறிப்பிட்டார்.

ஜப்னா முஸ்லிம் இணையத்திடம் நல்லாட்சி அரசாங்கம் மற்றும் ஜனாதிபதி மைத்திரியின் காய்நகர்த்தல்கள் பற்றி ஆக்ரோஷமாக பேசிய றிசாத் மேலும்  தெரிவித்ததாவது,

மஹிந்தவினதும், கோத்தாவினதும் அடாவடிகள் உச்சத்திலிருந்த போதும், பசில் ராஜபக்ஸ மகிவும் நெருக்கமாக செயற்பட்ட போதும் அத்தனை சலுகைகளையும், சுகபோகங்களையும் தூக்கியெறிந்துவிட்டு முஸ்லிம்களுக்காக மஹிந்த அரசாங்கத்திலிருந்து வெளியேறிவன் நான். 

ஒருவேளை சாப்பாட்டுக்காக அகதி முகாமில் வரிசையில் நின்ற நான், இந்த அரசாங்கத்திலிருந்து வெளியேறுவது ஒன்றும் கடினமானதல்ல. அன்றும் முஸ்லிம் சமூகத்திற்காகவே செயற்பட்டேன், இனியும் முஸ்லிம் சமூகத்திற்காகவே செயற்படுவேன்.

ஜனாதிபதி மைத்திரிபால தற்போது பௌத்த இனவாதிகளின் பைப்பிள்ளையாகியுள்ளார். அவரது அலோசகர்களாக பௌத்த வெறிபிடித்தலையும் விஜயதாசா, தயா கமகே மற்றும் ஞானசாரர் ஆகியோர் உள்ளனர். அவர்களின் நிகழ்ச்சி நிரலில்தான் ஜனாதிபதி இயங்குகிறார்.

இவர்களுடைய வஞ்சகத்திட்டத்தின் அடிப்படையில் வடக்கு கிழக்கில் உள்ள முஸ்லிம்களின் பாரம்பரிய காணிகள் சுவீகரிக்கப்படவுள்ளது. அந்த அடிப்படையில் 250 வருட பழமைவாய்ந்த முஸ்லிம்களின் பள்ளிவாசல் தொல்பொருள் இடமாக பிரகடனப்படுத்தபட்டு, தற்போது அந்த பள்ளியில் முஸ்லிம்கள் தொழமுடியாதபடி முடக்கப்பட்டுள்ளனர்.

இதுகாலவரையும் வில்பத்துவை முஸ்லிம்கள் ஆக்கிரமித்துவிட்டனர் என கதறிய ஜனாதிபதி, தற்போது வில்பத்துக்கு அருகிலுள்ள பகுதிகள் வனத்திணைக்களத்திற்கு உரியவை என பிரகடனம் செய்யுமாறு உத்தரவிட்டுள்ளார்.

ஜனாதிபதியின் இந்த அறிவிப்பானது, மிகக் கொடூரமானது. அங்கு எனக்கு ஒரு அடி நிளமேனும் இல்லை. எனது வாழைமர தோட்டமும் அங்கு இல்லை. ஆனால் முஸ்லிம்கள் வாழ்கின்றனர். பயங்கரவாதப் புலிகளினால் பாதிக்கப்பட்ட அந்த முஸ்லிம்கள்,நல்லாட்சி என நடித்து, ஏமாற்றி பதவிக்குவந்த மைத்திரிபாலவினாலும் வஞ்சிக்கப்படவுள்ளனர்.

குறித்த பகுதியிலிருந்து முஸ்லிம்களை துரத்தியடிப்பதுதான் ஜனாதிபதியின் திட்டம். இந்த திட்டத்தை செயற்படுத்தவே புதிய வர்த்தமானி அறிவித்தல் துணைநிற்கப் போகிறது. பொலநறுவையில் உள்ள ஜனாதிபதியின் மைத்திரியின் வீடும், வளவும் முஸ்லிம்களின் புனிதப் பகுதி என கூறினால், அது எப்படியிருக்கும்..?

முஸ்லிம்களின் வாழ்விடங்களை புனிதப் பிரதேசங்களாக பிரகடனப்படுத்தி, அதனை சுவீகரிப்பது கோழைத்தனமானது. முஸ்லிம்களுடன் ஜனநாயக ரீதியாக மோதமுடியாதவர்களின் கீழ்த்தர செயற்பாடாகவே இதனை நோக்குகிறோம்.

முஸ்லிம்களின் வாழ்வாதாரத்தை, அவர்களின் வாழ்விடங்களை அழித்தொழிக்கும் ஜனாதிபதியின் செயற்பாட்டுக்கு நாம் ஒருபோதும் அனுமதிக்கமாட்டோம்.

அவசியப்பட்டால் முஸ்லிம்களை திரட்டிக்கொண்டு வந்து, ஜனாதிபதி மாளிகையை முற்றுகையிடவும் தயங்கமாட்டேன். 2012 ஆம் ஆண்டு வர்த்தமானி மூலம் இரகசியமாக முஸ்லிம்களிடம் இருந்து சுவீகரிக்கப்பட்ட காணிகளை விடுவிப்பதுடன், புதிய வர்த்தமானி மூலம் முஸ்லிம்களிடமிருந்து சுவிகரிக்கத் திட்டமிடும் ஜனாதிபதியின் உத்தரவும் உடனடியாக வாபஸ் பெறப்பட வேண்டும்.

இந்த 2 விவகாரங்களிலிருந்தும் உடனடியாக பதில் வேண்டும். 

ஜனாதிபதி மீது எமக்கு நம்பிக்கை இல்லை. அவர் முஸ்லிம்களை ஏமாற்றிவிட்டார். 

எனவே இதுவிடயத்தில் பிரமர் ரணிலுடன் பேச திட்டமிட்டுள்ளோம். பிரதமர் ரணில் ஜனாதிபதியுடன் பேசுவார் என நம்புகிறோம்.  ஜனாதிபதியிடமிருந்து பெற்று, பிரதமர் எமக்கு கூறப்போகும் பதிலுக்காக காத்திருக்கிறோம். எனவும் றிசாத் மேலும் கூறினார்.

4 comments:

  1. keep it up for our muslim ummah.....dont stop it

    ReplyDelete
  2. statement is a exellent, still waiting for action. northern muslim community waiting for your instruction. we do follow you and voted for you.

    ReplyDelete
  3. We salute you sir... dont worry allah will help u and will bless u more n more

    ReplyDelete
  4. If you can speak all these in the parliament, which is almost equal to fifty per cent action.

    ReplyDelete

Powered by Blogger.