Header Ads



'அரசாங்கத்திற்கும், மஹிந்தவிற்கும் இடையிலான டீல் வெளிச்சமாகின்றது'


அரசாங்கம் சலுகைகள் வரப்பிரசாதங்களை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவிற்கு வழங்கி வருவதனால், வரவு செலவுத் திட்ட வாக்கெடுப்பில் அவர் பங்கேற்கவில்லை என ஜே.வி.பி கட்சி குற்றம் சுமத்தியுள்ளது.

வரவு செலவுத் திட்டத்திற்கு எதிராகவும், நம்பிக்கையில்லாத் தீர்மான யோசனைக்கு எதிராகவும் மஹிந்த வாக்களிக்கவில்லை என ஜே.வி.பி.யின் பிரச்சார செயலாளர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் உரையாற்றிய போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.அவர் மேலும் கூறுகையில்…

தற்போதைய அரசாங்கம் முன்னாள் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தை புனரமைப்பதற்கு ஐந்து கோடி ரூபாவிற்கும் மேல் ஒதுக்கீடு செய்துள்ளது.

மக்களின் பிரச்சினைகளுக்கு முக்கியத்துவம் அளிக்காது மஹிந்தவின் வீட்டை புனரமைப்பதற்கும் கட்டிடமொன்றை நிர்மாணித்துக் கொடுப்பதற்கும் அரசாங்கம் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.

இதன் ஊடாக அரசாங்கத்திற்கும் மஹிந்தவிற்கும் இடையிலான டீல் வெளிச்சமாகின்றது.

இதற்கு முன்னரும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க, மஹிந்தவின் வாகனங்களுக்கு புதிய டயர்களை போடுவதற்கு நிதி ஒதுக்கீடு செய்திருந்தார்.

இவை அனைத்துமே சலுகைகள் வரப்பிரசாதங்களாகும்.

கடந்த அரசாங்க ஆட்சிக் காலத்தில் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைக் காரியாலயம் அமைந்துள்ள சிறிகொத்த வீதியை புனரமைப்புச் செய்வதற்கு மஹிந்த நடவடிக்கை எடுத்திருந்தார்.

அந்த நன்றிக்கு பிரதி உபகாரமாக பிரதமர் ரணில் தற்போது மஹிந்தவிற்கு சலுகை வழங்கி வருகின்றார் என விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.