Header Ads



முஸ்லிம்கள் பற்றிய பிரச்சாரத்தால், சிங்களவர்கள் அஞ்சுகின்றனர் - விஜேதாஸ

நாட்டின் புலனாய்வு – பாதுகாப்பு விடயங்கள் தொடர்பான தகவல்கள் அனைத்தும் அமைச்சர் ராஜித சேனாரட்னவுக்கு மாத்திரமே தெரியும் என்ற நிலைப்பாட்டில் அவர் உள்ளார். அவர் தொடர்பிலோ அல்லது அவரது கருத்து தொடர்பிலோ எனக்கு  கருத்துத் தெரிவிக்க முடியாது என நீதி மற்றும் புத்த சாசன அமைச்சர் விஜேதாஸ ராஜபக்ஷ தெரிவித்தார். அவருடனான நேர்காணலை இங்கு தருகின்றோம்.

நேர்காணல்:- மாவனல்லை ராயிஸ் ஹஸன் 

எங்கள் தேசம்:- முஸ்லிம் தனியார் சட்டம் தொடர்பில் பிரச்சினைகள் எழுந்துள்ளன. இது தொடர்பில் அமைச்சரவைக் குழு மற்றும் 2009ஆம் ஆண்டு நியமிக்கப்பட்ட முன்னாள் நீதிபதி சலீம் மர்சூக் தலைமையிலான குழு ஆகிய இரு குழுக்கள் ஆராய்ந்து வருகின்றன. இச்சட்டம் எவ்வாறு திருத்தியமைக்கப்படும்?

விஜேதாஸ ராஜபக்ஷ: முஸ்லிம் தனியார் சட்டத்தில் ஏராளமான பிரச்சினைகள் உள்ளன. இதனை சீர்த்திருத்துமாறு மகளிர் அமைப்புக்கள், மனித உரிமை அமைப்புக்கள் மற்றும் சில முஸ்லிம் அமைப்புக்களும் நீண்டகாலமாக கோரிக்கைவிடுத்து வந்துள்ளன. ஆனால், ஏனைய சட்டமூலங்களைப் போன்று இதனை எம்மால் கையாள முடியாதுள்ளது. எனவே, இந்த விடயத்தில் முஸ்லிம் உலமாக்கள் மற்றும் நியமிக்கப்பட்டுள்ள குழுக்களின் ஆலோசனை- அறிக்கைகளுக்கு அமையவே எமது அடுத்த கட்ட நடடிக்கையினை மேற்கொள்வோம். மதம் சார்ந்த ஒரு நடவடிக்கை என்பதால் இதனை அவர்களிமேயே நாங்கள் கையளித்துள்ளோம். இது தொடர்பில் ஆராய்வதற்கு நியமிக்கப்பட்டுள்ள அமைச்சரவைக் குழுவில் 5 முஸ்லிம் எம்.பிக்கள் உள்ளனர். பெண்கள் மற்றும் சிறுவர்களது பிரச்சினை சார்ந்த விடயங்கள் தொடர்பில் ஆராயும் போது பெண்கள் பிரதிநிதித்துவமும் இருக்க வேண்டும் என்ற காரணத்தினால் இரண்டு சிங்கள பெண் எம்.பிக்களும் அந்த குழுவில் இடம்பெற்றுள்ளனர்.

அத்துடன் 2009ஆம் ஆண்டு நியமிக்கப்பட்ட முன்னாள் நீதிபதி சலீம் மர்சூக் தலைமையிலான 15 பேர் கொண்ட குழுவும் இந்த விடயத்தை ஆராய்ந்து வருகின்றது. அக்குழுவில் முஸ்லிம் உலமாக்கள், புத்திஜீவிகள், மகளிர் அமைப்பு பிரதிநிதிகள் என ஏராளமானவர்கள் உள்ளனர்.

இந்த விடயம் மிகவும் கவனமாக கையாளவேண்டியுள்ளதால் இந்த இரு குழுக்களினதும் இறுதி அறிக்கை கிடைத்த பின்னரே நாங்கள் எமது நடவடிக்கைகளை ஆரம்பிப்போம். இது தொடர்பில் எனது தனிப்பட்ட கருத்துக்களை நான் தெரிவிக்கவிரும்பவில்லை. அது வேறுவிதத்தில் திரிவுபடுத்தப்பட்டு விடும்.

எங்கள் தேசம்:- நீங்கள் அண்மையில் நாடாளுமன்றத்தில் வெளியிட்டிருந்த கருத்து முஸ்லிம் தரப்பினரிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. இதன் போது நீங்கள் இஸ்லாமிய இயக்கங்கள், ஐ.எஸ் மற்றும் சர்வதேச பாடசாலைகள் தொடர்பில் வெளியிட்ட கருத்துக்கள் உண்மைத்தன்மை என்ன?

விஜேதாஸ ராஜபக்ஷ: நான் யாருக்கும் இடையூறுகளை ஏற்படுத்த வேண்டுமென்றோ அல்லது உள்நோக்கத்துடனோ அன்றைய தினம் நாடாளுமன்றத்தில் உரையாற்றவில்லை. நடைமுறையில் உள்ள பிரச்சினைகளையே நீண்ட நேரம் பேசியிருந்தேன். ஆனால், அதில் இந்த மூன்று விடயங்களை மாத்திரமே அனைவரும் பேசுபொருளாக்கினர். எனினும், இவை புதியவிடயங்கள் அன்று ஏற்கனவே பல தரப்பினரால் முன்வைக்கப்பட்ட விடயங்களே. இந்நாட்டில் சிங்கள – முஸ்லிம், சிங்கள – தமிழ், தமிழ் – முஸ்லிம் மக்களிடையே புரிந்துணர்வை ஏற்படுத்த வேண்டுமாயின் அம்மக்களிடையே நிலவுகின்ற சந்தேகங்கள் தீர்க்கப்பட வேண்டும். நான் குறிப்பிட்ட இந்த விடயங்கள் சிங்கள மக்கள் மத்தியில் ஆழமாக பரப்பப்பட்டு வந்த அம்மக்கள் உறுதியான நம்புகின்ற விடயங்களே.
இதனை நான் பகிரங்கமாக நாடாளுமன்றத்தில் பேசியிருக்காவிட்டால் இந்த விடயங்கள் மக்கள் மனங்களிலேயே ஆழமாக பதியப்பட்டு விடும். இதனால் ஒருவரை ஒருவர் சந்தேகத்துடன் பார்க்கும் நிலையே உருவாகும்.

ஐ.எஸ் அமைப்பில் இலங்கையர்கள் ஆயிரக்கணக்கானவர்கள் இணைந்துள்ளதாக சிங்கள மக்கள் மத்தியில் பொய்பிரசாரங்கள் மேற்கொள்ளப்பட்டள்ளன. அதால் அம்மக்கள் அச்சத்தில் உள்ளனர். அதேபோன்று, சிங்கள தேசியவாத அமைப்புக்கள் அதிகரித்துள்ளதாகவும் அதனால் எதிர்காலத்தில் தமது பள்ளிவாசல்கள் மற்றும் வியாபார நிலையங்கள் அழிகப்படுவதற்கான அபாயம் உள்ளதாகவும் முஸ்லிம்கள் அச்சத்தில் உள்ளனர். எனவே, இந்த இருதரப்புக்குமிடையில் அவநம்பிக்கை, ஒருவர் இன்னொருவரை சந்தேகத்துடன் பார்க்கும் நிலையே ஏற்பட்டுள்ளது. இந்த பிரச்சினையை பகிரங்கமாக பேசாது மறைத்து மறைத்து வைத்தால் 1983 கலவரம் போன்று ஏற்பட்டுவிடும். நான் இரு தரப்பையும் ஓரிடத்துக்கு கொண்டுவருவதற்காகவும், சந்தேகங்களை தீர்த்து வைப்பதற்காகவும் இதனை பகிரங்கமாக பேசினேன்.

தற்போது நான் அவ்விரண்டு தரப்புடனும் பேசி ஒரே நிலைப்பாட்டுக்கு கொண்டுவந்துள்ளேன். அதன் பின்னர், “வீதி இரங்குவதாலோ இனவாதத்தினாலோ எதனையும் வெல்ல முடியாது. புரிந்துணர்வுடனேயே உரிமைகளை வெல்ல முடியும்” என பொதுபல சேனா அறிவித்திருந்தது.

எங்கள் தேசம்:- இஸ்லாமிய இயக்கங்கள் தொடர்பில் நீங்கள் வெளியிட்டிருந்த கருத்துக்கு முஸ்லிம் தரப்பு கடும் எதிர்ப்பினை வெளியிட்டுள்ளது அல்லவா?

விஜேதாஸ ராஜபக்ஷ: நான் தெரிவித்த கருத்தில் எந்த தவறும் இல்லை. இதனை நடுநிலையான முஸ்லிம்கள் ஏற்றுக் கொள்வார்கள் என எண்ணுகின்றேன். முஸ்லிம் மக்களிடையே தப்லீக், ஜமாஅத்தே இஸ்லாமி, தவ்ஹீத் என ஏராளமான இயக்கங்கள் உள்ளன. சில சில விடயங்களில் அவர்களுக்கிடையில் கொள்கை வேறுபாடுகளும் காணப்படுகின்றன. கடந்த காலங்களில் முஸ்லிம் இயக்கங்களிடையே சண்டை – சச்சரவுகள் ஏராளம் ஏற்பட்டுள்ளன. இதன் போது சில இடங்களில் கொலைச்சம்பங்களும் பதவாகியுள்ளன. இது தொடர்பான முறைப்பாடுகள் பொலிஸ் நிலையங்களில் பதிவாகியுள்ளன.

இவ்வாறான பிரச்சினைகள் அனைத்து முஸ்லிம்களிடையேயும் உள்ளதாக நான் கூறவில்லை. ஆனால், சில தரப்பினரிடையே இவ்வாறான பிரச்சினைகள் உள்ளன.

அரசின் நிலைப்பாடு மற்றும் என்னுடைய தனிப்பட்ட கருத்து என்னவென்றால் நாட்டில் இனங்களுக்கிடையில் மாத்திரமல்ல சமாதானம் – நல்லிணக்கம் இருக்க வேண்டும். மாறாக, அந்ததந்த இனங்களுக்குள்ளும் சமாதானம் நிலவ வேண்டும். அவர்களுக்கிடையில் பிரிந்து சண்டைப் பிடிப்பார்களாயின் அது நாட்டின் முன்னேற்றத்துக்கும் – அபிவிருத்திக்கும் தடையாக அமையும்.

எங்களுக்கு அனைவரினதும் பாதுகாப்பு முக்கியம். அந்த அடிப்படையிலேயே நான் அவ்வாறான கூற்றினை தெரிவித்திருந்தேன். இது தொடர்பில் பொறுப்புள்ள முஸ்லிம் தலைவர்கள் எதிர்காலத்தில் ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை முன்னெடுப்பார்கள் என நம்புகின்றேன்.
எங்கள் தேசம்:- சர்வதேச பாடசாலைகள் தொடர்பில் நீங்கள் வெளியிட்ட கருத்து உண்மையானது என்றால் சட்ட நடவடிக்கை எடுத்திருக்க வேண்டுமல்லவா?
விஜேதாஸ ராஜபக்ஷ: சர்வதேச பாடசாலைகளுக்கு சுற்றுலா விசாவில் வருபவர்கள் – போகின்றவர்கள் தொடர்பில் பெரும்பான்மை மக்கள் மத்தியில் சந்தேகங்கள் உள்ளன.
தற்போது எகிப்துடன் ஒப்பந்தம் அடிப்படையில் இவ்வாறு சிலர் இலங்கை வருகின்றனர். ஆனால், அவர்கள் மத விடயங்களை போதிக்கவே வருகின்றார்கள் என முஸ்லிம்தரப்பு எனக்கு விளக்கம் வழங்கியிருந்தனர். ஆனால், இது தொடர்பில் சிங்கள மக்கள் மத்தியில் ஏற்கனவே பல சந்தேகங்கள் உள்ளன. அவை நிவர்த்தி செய்யப்பட வேண்டும் என்பதே எனது எதிர்பார்ப்பாகும்.
இது தொடர்பில் சரியான விளங்களைள முன்னிறுத்தி இரகசியமாக செய்வதை தவிர்ந்து பகிரங்கமாக செய்தால் சந்தேகங்கள் – பிரச்சினைகளை தவிர்ந்து கொள்ளலாம்.
எங்கள் தேசம்:- நீங்கள் ஐ.எஸ். தொடர்பில் வெளியிட்ட கருத்தானது புலனாய்வு பிரிவின் தகவல் அல்ல எனவும், அரசின் நிலைப்பாடு அல்ல என்றும் அது உங்களது தனிப்பட்ட கருத்தே எனவும் அமைச்சர் ராஜித குறிப்பிட்டிருந்தார் அல்வா?
விஜேதாஸ ராஜபக்ஷ: நாட்டின் புலனாய்வு – பாதுகாப்பு விடயங்கள் தொடர்பான தகவல்கள் அனைத்தும் அமைச்சர் ராஜித சேனாரட்னவுக்கு மாத்திரமே தெரியும் என்ற நிலைப்பாட்டில் அவர் உள்ளார். அவர் தொடர்பிலோ அல்லது அவரது கருத்து தொடர்பிலோ எனக்கு கருத்துத் தெரிவிக்க முடியாது. அவர் கூறுவது போன்று ஆட்சி செய்தால் சிறப்பாக அமையும் (சிரிக்கிறார்…)

3 comments:

  1. கடைசிக்கேள்விக்கும் சிரிக்காமல் 'இது எனது சொந்தக்கருத்தல்ல, அரசின் உனமை நிலைப்பாடு' என்றால் நீர் ஆதாரபூர்வமாக அதற்கு பதில்தரவேண்டும்???

    ReplyDelete
  2. தேரர்களும், சிங்கள குண்டர்களும் மாற்று இனத்தவர்களை அச்சுறுத்தி அவர்களது அன்றாட வாழ்க்கைகளில் தலையிட்டு இனரீதியான ஒரு வன்முறையை ஏட்படுத்துவதட்கு முனையும் சந்தர்ப்பங்களில் அரசாங்கமும் அதன் போலீசும் ( இவர்கள் பெரும்பான்மை இனத்தை மிகவும் அதிகம் கொண்டவர்கள்) சட்டத்தையும் ஒழுங்கையும் நிலைநாட்ட தவருகின்றனரே ( போலீஸின் முன்னாடியே அனைத்து அடாவடித்தனங்களும் அரங்கேறுகிறது), போலீஸின் செயட்பாடுகள் இனரீதியாக அமைந்துள்ளது என்று கருத வேண்டியுள்ளதே? போன்ற கேள்வியையும் அதட்கான பதிலும் பிரசுரித்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். அதை விடுத்து அரைச்ச மாவையே திரும்பவும் அரைக்கப்பட்டுள்ளது.

    ReplyDelete
  3. தேரர்களும், சிங்கள குண்டர்களும் மாற்று இனத்தவர்களை அச்சுறுத்தி அவர்களது அன்றாட வாழ்க்கைகளில் தலையிட்டு இனரீதியான ஒரு வன்முறையை ஏட்படுத்துவதட்கு முனையும் சந்தர்ப்பங்களில் அரசாங்கமும் அதன் போலீசும் ( இவர்கள் பெரும்பான்மை இனத்தை மிகவும் அதிகம் கொண்டவர்கள்) சட்டத்தையும் ஒழுங்கையும் நிலைநாட்ட தவருகின்றனரே ( போலீஸின் முன்னாடியே அனைத்து அடாவடித்தனங்களும் அரங்கேறுகிறது), போலீஸின் செயட்பாடுகள் இனரீதியாக அமைந்துள்ளது என்று கருத வேண்டியுள்ளதே? போன்ற கேள்வியையும் அதட்கான பதிலும் பிரசுரித்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். அதை விடுத்து அரைச்ச மாவையே திரும்பவும் அரைக்கப்பட்டுள்ளது.

    ReplyDelete

Powered by Blogger.