பள்ளிவாசல்கள் தொடராக தாக்கப்படுவது குறித்து, முஸ்லிம் அமைச்சர்கள் சந்தேகம்
-ARA.Fareel-
குருநாகல் மாவட்டத்தில் தொடராக அடுத்தடுத்து பள்ளிவாசல்கள் தாக்குதல்களுக்குள்ளாகியிருப்பது பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்தியிருக்கிறது.
அதனால் குருநாகல் மாவட்ட பள்ளிவாசல்களுக்கு பாதுகாப்பு வழங்கும் விசேட திட்டமொன்றினை அமுல்படுத்துமாறு சட்டமும் ஒழுங்கும் அமைச்சர் சாகல ரத்நாயக்கவிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக முஸ்லிம் சமய விவகார மற்றும் தபால், தபால் சேவைகள் அமைச்சர் எம்.எச்.ஏ. ஹலீம் தெரிவித்தார்.
தெலியாகொன்ன மற்றும் நிக்கவரெட்டிய பள்ளிவாசல்களின் தாக்குதல்கள் தொடர்பில் வினவிய போதே அமைச்சர் ஹலீம் இவ்வாறு கூறினார்.
அவர் தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில் அண்மைக்காலமாக பள்ளிவாசல்கள் மீதான அசம்பாவிதங்கள் அதிகரித்துள்ளன.
இதன் பின்னணியில் யார் செயற்படுகிறார்கள் என்பதை அறிந்து கொள்வதில் அரசாங்கம் தீவிர கவனம் செலுத்தி வருகிறது. இது தொடர்பாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் கவனத்திற்கும் கொண்டு வரப்பட்டுள்ளது.
மீண்டும் நாட்டில் இன முறுகல்களை ஏற்படுத்தி அரசியல் லாபம் தேட முயற்சிக்கப்படுகிறதா? என்பது பற்றியும் ஆராய வேண்டியுள்ளது. குருநாகல் மாவட்டத்தில் அடுத்தடுத்து இரு பள்ளிவாசல்கள் தாக்கப்பட்டிருப்பது மக்கள் மத்தியில் பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளது. அதனால் குருநாகல் மாவட்ட பள்ளிவாசல்களை தாக்குதல்களிலிருந்தும் பாதுகாப்பதற்குவிசேட வேலைத்திட்டமொன்றினை வகுக்குமாறு அமைச்சர் சாகல ரத்நாயக்கவிடம் கோரிக்கை விடுத்திருக்கிறேன் என்றார்.
அமைச்சர் ரவூப் ஹக்கீம்
பள்ளிவாசல்கள் தாக்குதல் சம்பவம் தொடர்பாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் நீர்வழங்கல் வடிகாலமைப்பு மற்றும் நகர் திட்டமிடல் அமைச்சர் ரவூப் ஹக்கீமை ‘விடிவெள்ளி’ தொடர்பு கொண்டது. அவர் பின்வருமாறு கருத்து தெரிவித்தார்.
பள்ளிவாசல்கள் தாக்குதல்களுக்குள்ளாகி வருகின்றமை முஸ்லிம்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பில் பதில் பொலிஸ்மா அதிபர் சிரில் விக்கிரமரத்னவை தொடர்பு கொண்டு புலன்விசாரணைகளை மேற்கொண்டு குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்தும் படி கோரியுள்ளேன்.
வடமேல் மாகாணத்துக்குப் பொறுப்பான பிரதி பொலிஸ் மா அதிபரையும் தொடர்பு கொண்டு பள்ளிவாசல்களுக்கு உரிய பாதுகாப்பினை வழங்குமாறும் கோரியிருக்கிறேன். இது விடயத்தில் அரசாங்கத்திற்கும் அழுத்தங்களைக் கொடுப்பேன் என்றார்.
Post a Comment