மோட்டார் சைக்கிளுக்கு தவணைப் பணம் செலுத்த, 7 யுவதிகளின் தொலைபேசிகள் கொள்ளை
(ரெ.கிறிஷ்ணகாந்)
தனது மோட்டார் சைக்கிளுக்கு தவ ணைப் பணம் செலுத்துவதற்காக வீதியில் சென்று கொண்டிருந்த மருத்துவ கல்லூரி மாணவி உட்பட ஏழு யுவதிகளின் கைத் தொலைபேசிகளை கொள்ளையிட்டு பல்வேறு நபர்களுக்கு விற்பனை செய்த சந்தேக நபர் ஒருவரை கைது செய்துள்ளதாக அநுராதபுரம் பொலிஸ் தலைமையக குற்றப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
ரஜரட்ட பல்கலைக்கழக மருத்துவபீட மாணவி, அநுராதபுரம் தாதியா் பயிற்சி கல்லூரியில் பயிற்சி பெறும் மாணவிகள் இருவர், ஆடைத்தொழிற்சாலை ஒன்றின் பணி புரியும் பெண்ணொருவர் ஆகியோர் உள்ளடங்களாக எழுவரினால் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாட்டுக்கமைய சுமார் ஒரு மாதகாலமாக முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் மூலம் கற்குளம் பகுதியில் வைத்து குறித்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபர் நவீனரக மோட்டார் சைக்கிளொன்றில் வந்து, கைத்தொலை
பேசியில் உரையாடிக்கொண்டு வீதியில் செல்லும் யுவதிகளை வழிமறித்து, வீதியில் முறையாக நடந்து செல்ல தெரியாதா? என கேட்டவாறு அவர்களை திட்டுவதை போன்று அவர்களிடமிருந்து கைத்தொலைபேசிகளை பறித்துச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இருபதாயிரம் மற்றும் முப்பதாயிரம் ரூபாவுக்கிடைப்பட்ட பெறுமதியுடைய கைத்தொலைபேசிகள் சந்தேக நபரினால் கொள்ளையிடப்பட்டுள்ளதுடன் இவற்றின் மொத்தப் பெறுமதி 2 இலட்சம் ரூபாவுக்கும் அதிகம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தான் தவணைக்கட்டண அடிப்படையில் பெற்றுக் கொண்ட மோட்டார்சைக்கிளுக்கு தவணைப்பணம் செலுத்த இயலாமல் போனமையினால் அதற்கான பணத்தினை திரட்டிக்கொள்ளும் நோக்கிலேயே இவ்வாறு குறித்த கைத்தொலைபேசிகளை கொள்ளையிட்டதாக சந்தேகநபர் பொலிஸாரிடம் வாக்குமூலம் வழங்கியுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் 21 வயதான திருமணமான ஒருவர் எனவும் அவர் அநுராதபுரம் நீதிவான் மன்றில் ஆஜர்படுத்தப்பட்டதன் பின்னர் எதிர்வரும் 16 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறும், அன்றைய தினம் சந்தேக நபரை அடையாள அணிவகுப்புக்கு உட்படுத்துமாறும் உத்தரவு பிறப்பிக்கப் பட்டுள்ளது.
Post a Comment