முஸ்லிம் மையவாடியை மீட்டுத்தந்து, நீதியை பெற்றுத்தாருங்கள் - ஜனாதிபதிக்கு கடிதம்
மாளிகாவத்தை முஸ்லிம் மையவாடி காணி தனியார் ஒருவரினால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு சட்டவிரோதமாக கட்டடமொன்று நிர்மாணிக்கப்பட்டு வரும் விவகாரத்தில் தலையிட்டு நீதி பெற்றுத்தருமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இலங்கை முஸ்லிம் மத உரிமைகள் சங்கம் இக்கோரிக்கையை ஜனாதிபதியிடம் விடுத்துள்ளதுடன் இது தொடர்பாக விளக்கமளிப்பதற்கு விரைவில் சந்திப்பொன்றினை ஏற்படுத்தி தருமாறும் வேண்டியுள்ளது. இலங்கை முஸ்லிம் மத உரிமைகள் சங்கம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு அனுப்பிவைத்துள்ள 07.10.2016 ஆம் திகதியிட்ட கடிதத்திலே இவ்வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
முஸ்லிம் மையவாடிக் காணி ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு சட்டவிரோத கட்டடமொன்று நிர்மாணிக்கப்பட்டு வரும் விடயம் தொடர்பாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் கடிதம் ஒன்று அனுப்பிவைத்துள்ளதாகவும் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
குறிப்பிட்ட இந்த மையவாடிக் காணி ஆக்கிரமிப்பு 2007 ஆம் ஆண்டு இடம்பெற்றது. அன்று முதல் கொழும்பு மாநகர அதிகார சபை அதிகாரிகள் மூலம் கட்டட நிர்மாணப் பணிகளை இரு தடவைகள் எம்மால் நிறுத்த முடிந்துள்ளது.
அக்காலங்களில் மாநகர சபை முதல்வர்களாக பிரசன்ன குணவர்தனவும் முஸம்மிலும் இருந்தார்கள். மாவட்ட நீதிமன்றிலும் மேன்முறையீட்டு நீதிமன்றிலும் எம்மால் சட்ட நடவடிக்கைகளையும் எடுக்க முடிந்தது.
தற்போது மையவாடிக் காணி விவகாரம் தொடர்பில் மாவட்ட நீதிமன்றில் வழக்கொன்றும் விசாரணையின் கீழ் உள்ளது.
இவ்வாறான எமது முயற்சிகள் மூலம் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ள மாளிகாவத்தை முஸ்லிம் மையவாடிக் காணியை எம்மால் திருப்பிப் பெற முடியாமற் போயுள்ளது. இதற்கான காரணம் காணியை ஆக்கிரமிப்பு செய்துள்ளவர் முன்னாள் பாதுகாப்புச் செயலாளரின் நண்பர் என்பதாகும்.
இந்தக் குறிப்பிட்ட கட்டடத்தின் நிர்மாண அனுமதிப்பத்திரம் 2013 இல் காலாவதியானாலும் அது மீள புதுப்பிக்கப்படவில்லை. 2014 ஆம் ஆண்டு வரை கட்டட நிர்மாண அனுமதிப்பத்திரம் புதுப்பிக்கப்படாமல் நிர்மாண வேலைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டன.
கொழும்பு மாநகர சபையும் மாளிகாவத்தை பொலிஸ் சுற்றாடல் பிரிவும் சட்டவிரோத நிர்மாணத்துக்கு எதிராக எதுவித நடவடிக்கைகளும் எடுக்கவில்லை. நகர அபிவிருத்தி அதிகாரசபையின் உத்தரவின் படியே இந்த நிர்மாணம் மேற்கொள்ளப்பட்டு வந்தது எனக் கருதுகிறோம்.
2015 ஆம் ஆண்டு ஆட்சி மாற்றம் ஏற்பட்டு நல்லாட்சி அமைக்கப்பட்ட போது நாம் மகிழ்ச்சியடைந்தோம். சட்டமும் ஒழுங்கும் நிலைநாட்டப்படுமென எதிர்பார்த்தோம். உங்கள் நிர்வாகத்தின் கீழ் எமக்கு நியாயம் கிடைக்குமென எண்ணினோம்.
2016 ஆம் ஆண்டு மாநகரசபை முதல்வருடன் இந்தச் சட்ட விரோதக் கட்டடம் தொடர்பாக பல கட்ட பேச்சுவார்த்தைகளை நடத்தினோம். இதன் பலனாக மாநகரசபை முதல்வர் சட்டவிரோத கட்டடத்துக்கு எதிராக வழக்கொன்றினைத் தாக்கல் செய்தார். வழக்கு விசாரணைக்கெடுத்துக் கொள்ளப்பட்டது.
இரு தரப்பும் தங்கள் தரப்பு அறிக்கைகளை சமர்ப்பித்தனர். வழக்கின் தீர்ப்பு 24.08.2016 இல் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. என்றாலும் அன்றைய தினம் வழக்கினை மாநகர ஆணையாளர் வாபஸ் பெற்றுக் கொண்டுவிட்டதாக அறிவிக்கப்பட்டது.
இது தொடர்பாக நாம் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எழுத்து மூலம் அறிவித்திருக்கிறோம். மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சரை நேரில் சந்தித்து முறையிட்டோம்.
மாநகர சபை தொடர்ந்த வழக்கினை மாநகர சபையே வாபஸ் பெற்று கொண்டமை தொடர்பில் வினவினோம். மாநகர சபை ஆணையாளர் முதலமைச்சர் கேட்டுக் கொண்டதற்கிணங்கவே வழக்கினை வாபஸ் பெற்றுக் கொண்டதாக தெரிவித்தார்.
பின்பு நாம் முதலமைச்சரைச் சந்தித்தோம். தான் மாளிகாவத்தை மையவாடிக் காணி தொடர்பாக விரிவாக தெளிவுபடுத்தப்படவில்லை. என்று கூறியதுடன் இது தொடர்பாக விசாரணையொன்று ஏற்பாடு செய்வதாக உறுதியளித்தார். ஆனால் இதுவரை எதுவும் நடைபெறவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Post a Comment