Header Ads



பொதுசிவில் சட்டம் ஏற்புடையதல்ல - முஸ்லீம் தனிநபர் சட்ட வாரியம்

நாடு முழுவதும் ஒரே மாதிரியான சட்டம் கொண்டு வர மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இது தொடர்பாக மத்திய அரசு, மத்திய சட்டதுறை அமைச்சகத்திற்கு கடிதம் அனுப்பி உள்ளது. மேலும் இந்த திட்டத்தின் சாதக, பாதகங்கள் குறித்து சட்ட கமிஷன் ஆய்வு செய்து வருகிறது. நாடு முழுவதும் ஒரே சிவில் சட்டம் கொண்டு வர உள்ளதாக பா.ஜ., ஏற்கனவே கூறி உள்ளது.

இந்நிலையில், பொதுசிவில் சட்டம் நம்முடைய நாட்டிற்கு ஏற்புடையதல்ல என்று அனைத்திந்திய முஸ்லீம் தனிநபர் சட்ட வாரிய தலைவர் ஹஸ்ரத் மவுலானா வாலி ரஹ்மானி கருத்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், 

பொதுசிவில் சட்டம் நம்முடைய நாட்டிற்கு நல்லது அல்ல. நம்முடைய நாட்டில் பல்வேறு கலாச்சாரங்கள் உள்ளது. அதற்கு நாம் மதிப்பளிக்க வேண்டும். அரசியலமைப்பு சட்டம் கொண்டு வந்த ஒப்பந்தங்களின் மூலம் நாம் வாழ்ந்து வருகிறோம். அரசியலமைப்பு சட்டம் வாழ்வதற்கும், மத நம்பிக்கைகளை கடைப்பிடிப்பதற்கும் எங்களுக்கு வழி வகை செய்துள்ளது. நாடு முழுவதும் பொதுசிவில் சட்டத்தை நாங்கள் எதிர்ப்போம்.

திசைதிருப்பும் தந்திரங்களை மோடி அரசு தொடர்ந்து உபயோகித்து வருகிறது. எங்கள் மத நெறிமுறைகளில் நாங்கள் திருப்தியாக உள்ளோம். ஒவ்வொரு மதத்தினரும் தங்களது மத நம்பிக்கைகளுடன் வாழவே விரும்புகின்றனர். முஸ்லீம்களும் விடுதலை போராட்டத்தில் சம அளவில் பங்கெடுத்துள்ளனர். ஆனால் அவர்களது பங்கெடுப்பு தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வருகிறது. 3 முறை தலாக் சொல்லும் முறை மற்றும் இஸ்லாமியர்களிடையே நிலவும் பெண்களுக்கு எதிரான நடைமுறைகள் பற்றி பொது கருத்து கேட்கப்பட்டு வருவதாக கூறுவது பொய்யானது. இந்த தகவலை நாங்கள் திட்டவட்டமாக மறுக்கிறோம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.