Header Ads



பள்ளிகளுக்கு வரும் பெண்கள் அணியும் ஆடை சர்ச்சை: கல்வி அமைச்சு சுற்றிக்கை

அரசு மற்றும் தனியார் பள்ளிக்கூடங்களுக்கு வருகை தரும் பெற்றோர் அணியும் ஆடை தொடர்பாக அண்மைக்காலமாக எழுந்துள்ள சர்ச்சையையடுத்து, அது தொடர்பாக பள்ளிக்கூட அதிபர்களுக்கு பணிப்புரை விடுக்கும் சுற்றறிக்கை ஒன்றை மத்திய கல்வி அமைச்சு வெளியிட்டுள்ளது.

பெற்றோர் அணியும் ஆடை தொடர்பாக தளர்வு நிலையை கடைப்பிடிப்பது தொடர்பாக பள்ளி அதிபர்களுக்கு இலங்கை கல்வி அமைச்சு அறிவுறுத்திருக்கிறது

அந்த சுற்றறிக்கையின்படி பெற்றோர் அணியும் ஆடை தொடர்பாக தளர்வு நிலையை கடைப்பிடிப்பதற்கு பள்ளி அதிபர்களுக்கு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது

தனியார் பள்ளிக்கூடங்களுக்கு வருகை தரும் பெற்றோர் அணிய வேண்டிய ஆடைகள் தொடர்பாக சில அரச மற்றும் தனியார் பள்ளிக் கூட நிர்வாகங்களினால் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

தலைநகர் கொழும்பிலுள்ள பிரபல தனியார் பள்ளிக்கூடம் ஒன்றின் நிர்வாகத்தினால், குறிப்பாக பெண்கள் அணிந்து வர வேண்டிய ஆடைகள் என்றும், தடை செய்யப்பட்ட ஆடைகள் என்றும் வகைப்படுத்தி வைக்கப்பட்டிருந்த அறிவுறுத்தல் பதாகை பெரும் சர்ச்சையை தோற்றுவித்திருந்தது.

பெற்றோரின் ஆடையணிகள் தொடர்பாக அசௌகரியத்துக்கு உள்ளாக்கும் அறிவித்தல்களை தவிர்க்க கேட்டுகொள்ளப்பட்டுள்ளது

குறிப்பாக, வார்ப்பட்டை மேலுடைகள், குட்டைப் பாவடை மற்றும் கை இல்லாத ஆடைகள் அணிந்து வருவதற்கு தடை விதிக்கும் வகையில் அந்த அறிவித்தல் பதாகையில் படங்கள் இருந்தன.

இது தொடர்பாக எழுந்த சர்ச்சைகளை அடுத்து கல்வி அமைச்சின் செயலாளரால் வெளியிடப்பட்டுள்ள சுற்றறிக்கையில் அது போன்ற அறிவிப்புகளை வைக்க வேண்டாம் என பள்ளிக் கூட அதிபர்ககளுக்கு அறிவுறுத்தலும் வழங்கப்பட்டுள்ளது.

பிள்ளைகளை பாடசாலைக்கு காலையில் அழைத்து வரும் வேளையிலும், வேறு தேவைகளுக்காக பாடசாலைக்கு வரும் போதும் தங்களுக்கு வசதியான ஆடை அணிந்து வருவதற்குரிய வாய்ப்புகளை ஏற்படுத்தி தருமாறு பெற்றோரால் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளதாக அந்த சுற்றறிக்கை கூறுகின்றது.

''பிள்ளைகளின் தேவைகளுக்காக பாடசாலைகளுக்கு பெற்றோர் வருகை தரும் போது பாடசாலை ஒழுக்கம் மற்றும் பெற்றோரின் கௌரவத்தை பாதுகாக்கும் வகையிலான ஆடைகளை அணிவதற்கும், உரிய நிகழ்வுகளில் கலந்து கொள்வதற்கும் அனுமதிக்கப்பட வேண்டும்.

பெற்றோரின் ஆடையணிகளை குறிப்பிட்டு அவர்களை அசௌகரியத்துக்கு உள்ளாக்கும் வகையில் அறிவித்தல்கள் வைக்கப்படுவதை தவிர்க்க வேண்டும்'' என பள்ளிக்கூட அதிபர்களுக்கு அந்த சுற்றறிக்கையில் மத்திய கல்வி அமைச்சு செயலாளரினால் அறிவிக்கப்பட்டுள்ளது..

No comments

Powered by Blogger.