Header Ads



"ஒரு முஸ்லிம் தம் சகோதரரிடம் 3 நாள்களுக்கு மேல் பேசாமல் இருப்பது அனுமதிக்கப்பட்டதன்று"

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் துணைவியாரான ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா அவர்களின் தாய்வழிச் சகோதரர் ஹாரிஸ் அவர்களின் புதல்வரான அவ்ஃப் இப்னு மாலிக் இப்னி துஃபைல் ரஹ்மதுல்லாஹி அலைஹி கூறினார்கள்:

ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா (தம் வீடு ஒன்றை) 'விற்றது தொடர்பாக' அல்லது 'நன்கொடையாக வழங்கியது தொடர்பாக' (அவர்களின் சகோதரி அஸ்மா ரளியல்லாஹு அன்ஹா அவர்களின் புதல்வர்) அப்துல்லாஹ் இப்னு ஸுபைர் ரளியல்லாஹு அன்ஹு (அதிருப்தியடைந்து) 'அல்லாஹ்வின் மீதாணையாக! ஆயிஷா (தம் முடிவைக்) கைவிடவேண்டும். அல்லது தான் அவரைத் தடுத்து நிறுத்துவேன்' என்று கூறினார்கள் என ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா அவர்களிடம் தெரிவிக்கப்பட்டது.

அதற்கு ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா, 'அவரா இப்படிக் கூறினார்?' என்று கேட்டார்கள். மக்கள், 'ஆம்' என்றனர். அப்போது ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா, 'இனி நான் இப்னு ஸுபைரிடம் ஒருபோதும் பேசமாட்டேன் என அல்லாஹ்வின் மீது ஆணையிட்டுச் சத்தியம் செய்கிறேன்' என்று கூறிவிட்டார்கள்.

நீண்ட நாள்கள் பேச்சு வார்த்தை நின்றுபோனபோது ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா அவர்களிடம் (தமக்காகப்) பரிந்து பேசுமாறு (முஹாஜிர்களை) இப்னு ஸுபைர் ரளியல்லாஹு அன்ஹு கேட்டுக்கொண்டார்கள். (அவ்வாறே அவர்கள் பரிந்து பேசியபோது) ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா, 'முடியாது. அல்லாஹ்வின் மீதாணையாக! அவர் விஷயத்தில் ஒருபோதும் நான் (எவருடைய) பரிந்துரையையும் ஏற்றுக்கொள்ளவுமாட்டேன். என் சத்தியத்தை நான் முறித்துக் கொள்ளவுமாட்டேன்' என்று கூறிவிட்டார்கள்.

ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா இப்னு ஸுபைர் அவர்களிடம் பேச்சை நிறுத்தி நீண்ட நாள்களாகி விட்டபோது, பனூ ஸுஹ்ரா குலத்தைச் சேர்ந்த மிஸ்வர் இப்னு மக்ர மா ரளியல்லாஹு அன்ஹு, அப்துர் ரஹ்மான் இப்னு அஸ்வத் இப்னி அப்தி யகூஸ் ரளியல்லாஹு அன்ஹு ஆகிய இருவரிடமும் இப்னு ஸுபைர் ரளியல்லாஹு அன்ஹு, 'அல்லாஹ்வை முன்வைத்து உங்கள் இருவரிடமும நான் வேண்டுகிறேன். என்னை (என் சிறிய தாயார்) ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா அவர்களிடம் அழைத்துச் செல்லக்கூடாதா? என் உறவை முறித்துக் கொள்வதாக அவர்கள் செய்துள்ள சத்தியம் அவர்களுக்கு அனுமதிக்கப்பட்டதல்லவே!' என்று கூறினார்கள்.

எனவே, மிஸ்வர் ரளியல்லாஹு அன்ஹு அவர்களும் அப்துர் ரஹ்மான் ரளியல்லாஹு அன்ஹு அவர்களும் தம் மேலங்கிகளை அணிந்துகொண்டு இப்னு ஸுபைர் ரளியல்லாஹு அன்ஹு அவர்களுடன் ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா அவர்களிடம் சென்றார்கள். (அங்கு சென்ற) உடனே 'அஸ்ஸலாமு அலைக்க வரஹ்மத்துலலாஹி வபரகாதுஹு' என்று சலாம் சொல்லிவிட்டு, 'நாங்கள் உள்ளே வரலாமா?' என்று அனுமதி கேட்டனர். அதற்கு ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா, 'உள்ளே வாருங்கள்' என்று அனுமதி வழங்கினார்கள். அப்போது அவர்கள் (மூவரும்) 'நாங்கள் அனைவரும் உள்ளே வரலாமா?' என்று கேட்டனர். ஆயிஷா ரளில்லாஹு அன்ஹா, 'ஆம்; அனைவரும் உள்ளே வாருங்கள்' என்று அவர்கள் இருவருடனும் இப்னு ஸுபைர் ரளியல்லாஹு அன்ஹு இருப்பதை அறிந்து கொள்ளாமலேயே கூறினார்கள்.

அவர்கள் மூவரும் உள்ளே நுழைந்ததும், இப்னு ஸுபைர் ரளியல்லாஹு அன்ஹு (தம் சிறிய தாயாரான ஆயிஷா இருந்த) திரைக்குள் நுழைந்து அவர்களைத் தழுவிக்கொண்டு அவர்களிடம் முறையிட்டு அழத் தொடங்கினார்கள். மிஸ்வர் ரளியல்லாஹு அன்ஹு அவர்களும் அப்துர்ரஹ்மான் ரளியல்லாஹு அன்ஹு அவர்களும் (வெளியே இருந்தபடி) இப்னு ஸுபைர் ரளியல்லாஹு அன்ஹு அவர்களிடம் பேசியே தீரவேண்டும் என்றும் அவருக்காகத் தாங்கள் செய்யும் பரிந்துரையை ஏற்றுக்கொள்ள வேண்டுமென்றும் ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா அவர்களிடம் வேண்டிக் கொண்டிருந்தனர்.

மேலும், அவர்கள் இருவரும், 'ஒரு முஸ்லிம் தம் சகோதரிடம் மூன்று நாள்களுக்கு மேல் பேசாமல் இருப்பது அனுமதிக்கப்பட்டதன்று' என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தடை விதித்துள்ளதை தாங்கள் அறிந்தே உள்ளீர்கள்' என்று கூறினார்கள்.

ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா அவர்களிடம் (உறவைப் பேணுவதன் சிறப்பு குறித்து) நினைவூட்டியும் அவர்கள் அதிகமாகப் பேசியபோது (தாம் செய்த சத்தியத்தைப் பற்றி) அவர்கள் இருவருக்கும் நினைவூட்டியவாறு ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா அழலானார்கள். மேலும், '(நான் அவரிடம் பேசமாட்டேன் என) சத்தியம் செய்து விட்டேன். சத்தியம் மிகவும் கடுமையானதாகும்' என்று (அவர்கள் இருவரிடமும் திரும்பக் திரும்பக்) கூறிக் கொண்டிருந்தார்கள். அப்போது ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா அவர்களிடம், இருவரும் (தங்கள் கருத்தை) வலியுறுத்திக்கொண்டேயிருந்தனர். இறுதியில் ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா (தம் சகோதரியின் புதல்வர்) இப்னு ஸுபைரிடம் பேசிவிட்டார்கள். தம் சத்தியத்தை முறித்துவிட்டதற்குப் பரிகாரமாக நாற்பது அடிமைகளை விடுதலை செய்தார்கள். அதற்குப் பிறகும் கூடத் தம் சத்தியத்தை நினைவுகூர்ந்து தம் முகத்திரை நனையுமளவிற்கு அவர்கள் அழுவார்கள். (நூல்: புகாரி 6073)

No comments

Powered by Blogger.