வடக்கில் சிங்கள மாணவர்கள், அடித்து விரட்டப்படுகின்றனர் - மஹிந்த
சுதந்திரக்கட்சியையும் ஐ.தே.கட்சியையும் கலைத்துவிட்டு ஸ்ரீலங்கா ஐக்கிய தேசிய சுதந்திரக் கட்சி என்ற பெயரில் புதிய கட்சியை ஆரம்பிக்க வேண்டுமென ஆலோசனை வழங்கியுள்ள முன்னாள் ஜனாதிபதியும் குருநாகல் மாவட்ட எம்.பி.யுமான மஹிந்த ராஜபக் ஷ நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை ஒழிக்கும் போர்வையில் நாட்டைப் பிரிக்கும் யோசனைகளை நிறைவேற்ற முயற்சிப்பதை எதிர்க்கின்றோம் என்றும் தெரிவித்தார்.
பொது எதிர்க்கட்சியின் கூட்டத்தில் கலந்துகொண்டு உறையாற்றுகையிலேயே முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ இவ்வாறு தெரிவித்தார். இங்கு அவர் மேலும் உரையாற்றுகையில்,
ஐ.தே.கட்சியின் கொள்கைகளை எதிர்த்து எஸ்.டபிள்யூ.ஆர்.டி.பண்டாரநாயக்க அக்கட்சியை விட்டு வெளியேறி ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை உருவாக்கினார்.
இன்று சுதந்திரக்கட்சியை உருவாக்கிய ஸ்தாபகத் தலைவரின் மகள் ஐ.தே.கட்சியின் 70ஆவது சம்மேளனத்தில் கலந்து கொண்டுள்ளார். பண்டாரநாயக்க, ஸ்ரீமாவோ ஆகியோர் சுதந்திரக்கட்சியின் கொள்கைகளைப் பாதுகாத்தனர். அதன் பின்னர் நாம் கட்சியைப் பாதுகாத்து பலப்படுத்தினோம்.
ஆனால் இன்று சுதந்திரக்கட்சியின் முக்கியஸ்தர்கள் ஐ.தே.கட்சியுடன் இணைந்து கட்சியின் கொள்கைகளைக் காட்டி கொடுத்துள்ளனர். ஐ.தே.கட்சியிடம் சுதந்திரக் கட்சி இன்று மண்டியிட்டுள்ளது.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 65 ஆவது சம்மேளனம் ஐ.தே.கட்சிக்காரர்களுடன் இணைந்து கொண்டாடப்பட்டது. அதேபோன்று ஐ.தே. கட்சியின் 70 ஆவது சம்மேளனம் சுதந்திரக் கட்சியினருடன் இணைந்து கொண்டாடப்பட்டுள்ளது.
எனவே இவ்விரண்டு கட்சிகளையும் கலைத்துவிட்டு புதிய கட்சியை இவர்கள் உருவாக்க வேண்டும். அதற்கு ஸ்ரீலங்கா ஐக்கிய தேசிய சுதந்திரக் கட்சியென பெயரிடலாம்.
விடுதலைப்புலிகளை நாம் ஒழித்தோம். ஆனால் தேசிய பாதுகாப்பில் கவனம் செலுத்தினோம். படை முகாம்களை அகற்றவில்லை. படையினரைக் குறைக்கவில்லை. ஏனென்றால் புலிகள் மீண்டும் எப்போதாவது தலையெடுப்பார்கள் என்றே பாதுகாப்பை பலப்படுத்தினோம்.
ஆனால் இன்றைய அரசாங்கம் தேசிய பாதுகாப்பு தொடர்பில் அக்கறை செலுத்தவில்லை. இன்று புலிகள் மீண்டும் தலைதூக்குவதை மலேஷியாவில் கண்டுகொண்டோம்.
வடக்கில் பல்கலைக்கழகங்களிலிருந்து சிங்கள மாணவர்கள் அடித்து விரட்டப்படுகின்றனர். மலேஷியாவில் இலங்கைத் தூதுவர் தாக்கப்படுகின்றார். எனவே அரசு பாதுகாப்பில் அக்கறை செலுத்த வேண்டும். நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை ஒழிப்பதில் எதுவிதமான பிரச்சினையும் எமக்கில்லை.
ஆனால் இதன் போர்வையில் நாட்டைப் பிரிக்கும் யோசனைகள், திருத்தங்களை முன்வைப்பதை கடுமையாக எதிர்க்கின்றோம்.
நான் 9000 மில்லியன் ரூபா கடன் வாங்கியதாக அரசு எந்த நாளும் குற்றம் சாட்டுகிறது. ஆனால் இன்றைய அரசு இப்போதே 9000 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமாக கடனைப் பெற்றுள்ளது என்றும் மஹிந்த ராஜபக் ஷ தெரிவித்தார்.
Post a Comment