சவூதி அரேபியா, ஈரானுக்கு பதிலடி
புனித ஹஜ் கடமையை நடாத்தும் பொறுப்பிலிருந்தும் மக்கா,மதீனா ஆகிய புனித தலங்களை நிர்வகிக்கும் பொறுப்பிலிருந்தும் சவூதி அரேபிய அரசாங்கம் விலக வேண்டும் என ஈரானின் ஆன்மிகத் தலைவர் ஆயதுல்லா அலி கொமைனி வேண்டுகோள் விடுத்துள்ள நிலையில், புனிதமிக்க ஹஜ் யாத்திரையை ஈரான் அரசியல்மயப்படுத்த முனைவதாக சவூதி அரேபிய முடிக்குரிய இளவரசர் முஹம்மத் பின் நாயிப் குற்றம்சாட்டியுள்ளார்.
இதனையடுத்து இந்தவருட ஹஜ் யாத்திரை தொடர்பில் இவ்விரு நாடுகளுக்குமிடையில் ஏலவே ஏற்பட்டுள்ள முறுகல் மேலும் வலுப்பெற்றுள்ளது.
இவ்வருட ஹஜ் யாத்திரை தொடர்பில் ஈரானின் ஆன்மீகத் தலைவர் ஆயதுல்லா அலி கொமைனி நேற்று முன்தினம் விசேட அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார்.
அதில் அவர் சவூதி அரேபியா மீது கடுமையான விமர்சனங்களையும் குற்றச்சாட்டுக்களையும் முன்வைத்துள்ளார்.
''சவூதி அரசாங்கம் கடந்த வருடம் மினாவில் யாத்திரிகர்களை கொலை செய்தது. 'இதயமற்ற கொலைகார சவூதியர்கள்' காயமடைந்த ஆயிரக் கணக்கான யாத்திரிகர்களுக்கு மருத்துவ சிகிச்சைகளை வழங்குவதற்குப் பதிலாக உயிரிழந்தவர்களுடன் சேர்த்து கொள்கலன்களில் அடைத்தனர் என ஆயத்துல்லா கொமைனி தனது அறிக்கையில் பாரிய குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
அத்துடன் சவூதி அரேபியாவை 'குட்டிச் சாத்தான்' என வர்ணித்துள்ள அவர், சவூதி அரேபியா ஹஜ் யாத்திரிகர்களின் நலன்களை கவனிப்பதற்கும் அவர்களை பாதுகாப்பதற்கும் பதிலாக 'பெரிய சாத்தானாகிய' அமெரிக்காவின் நலன்கள் தொடர்பிலேயே அக்கறையாக இருப்பதாகவும் தனது அறிக்கையில் சாடியுள்ளார்.
எனினும் ஈரான் ஆன்மீகத் தலைவர் ஆயதுல்லா அலி கொமைனியின் மேற்படி குற்றச்சாட்டுக்களை மறுத்துள்ள சவூதி அரேபிய உள்துறை அமைச்சர் முடிக்குரிய இளவரசர் முஹம்மத் பின் நாயிப், புனித ஹஜ் யாத்திரையை அரசியல்மயப்படுத்த முனைய வேண்டாம் என வேண்டுகோள்விடுத்துள்ளார்.
அத்துடன் ஈரானின் இந்த கோபமூட்டும் செயற்பாடு யாத்திரிகர்களின் பாதுகாப்பை கேள்விக்குள்ளாக்கும் என்றும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ஈரானிய அதிகாரிகள் தாமாக உருவாக்கிக் கொண்ட காரணங்களினால் ஈரானிய யாத்திரிகர்கள் ஹஜ் கடமைக்காக சவூதிக்கு வருவதை தடுத்துவிட்டதாகவும் இளவரசர் முஹம்மத் பின் நாயிப் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஹஜ் கடமையை அரசியலாக்குவதானது இஸ்லாத்தின் போதனைக்கு எதிரானது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
கொமைனியின் குற்றச்சாட்டுக்களை நிராகரித்துள்ள இளவரசர், சவூதி அரேபியா ஒருபோதும் ஈரானிய யாத்திரிகர்களை ஏனைய நாடுகளின் யாத்திரிகர்களிலிருந்து வேறுபடுத்தி நோக்குவதில்லை எனவும் ஆனால் ஈரானியர்களே ஹஜ்ஜின் சட்டதிட்டங்களை மதிக்காது நடந்து கொண்டதாவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
ஹஜ்ஜின் போதுஆர்ப்பாட்டங்கள் நடத்துவதும் கோஷங்களை எழுப்புவதும் இஸ்லாத்தின் போதனைகளை மீறும் செயற்பாடாகும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். ஹஜ் கடமைக்காக வரும் யாத்திரிகர்களின் பாதுகாப்பை சகல விதத்திலும் உறுதிப்படுத்துவதானது தமது புனித கடமை என்றும் இளவரசர் நாயிப் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த வருட ஹஜ் யாத்திரையின் போது மினாவில் ஏற்பட்ட சன நெரிசல் காரணமாக 2426 பேர் உயிரிழந்ததாக உத்தியோகப்பற்றற்ற அறிக்கைகள் கூறும் நிலையில் 769 பேர் மாத்திரமே உயிரிழந்ததாக சவூதி கூறி வருகிறது.
இந்நிலையில் இஸ்லாமிய நாடுகளால் நியமிக்கப்படும் சுயாதீன குழு ஒன்று இவ் அனர்த்தம் தொடர்பில் விசாரணைகளை நடத்த அனுமதிக்க வேண்டும் என ஈரான், சவூதியிடம் வேண்டுகோள் விடுத்திருந்தது.
இதனை சவூதி அரேபியா நிராகரித்ததைத் தொடர்ந்து இரு நாடுகளுக்குமிடையிலான இராஜதந்திர முறுகல் மேலும் வலுப் பெற்றது. இதனையடுத்து இவ்வருடம் ஈரானுக்குள் வசிக்கும் ஈரானியர்கள் ஹஜ் யாத்திரையில் பங்கேற்கமாட்டார்கள் என ஈரான் கடந்த மார்ச் மாதம் அறிவித்தது.
இதற்கமைய இவ்வருடம் ஈரானிலிருந்து எந்தவொரு யாத்திரிகரும் ஹஜ் யாத்திரைக்காக சவூதிக்கு வரவில்லை. எனினும் ஈரானுக்கு வெளியே ஐரோப்பா மற்றும் ஆபிரிக்க நாடுகளில் வசிக்கும் ஈரானியர் தாம் வாழும் நாடுகள் மூலமாக இம் முறை ஹஜ் யாத்திரைக்கு சமுகமளித்துள்ளதாக சவூதி ஹஜ் விவகார அமைச்சர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment