Header Ads



'எதுவுமே நம் கட்டுப்பாட்டில் இல்லை'

 ‘லேட்டாச்சு, லேட்டாச்சு!’ இக்பால் பதற்றத்துடன் குதித்தார். ‘சீக்கிரமாக் கிளம்பு-ன்னு எத்தனைவாட்டி சொன்னேன்? இப்படிக் கடைசி நேரத்தில கழுத்தை அறுக்கறியே!’

’கிளம்பிகிட்டுதாங்க இருக்கேன்!’ என்றார் அவருடைய மனைவி. ‘இதோ, எல்லாரும் ரெடியாகிட்டோம். பஸ் ஏறவேண்டியதுதான் பாக்கி!’

ஆனாலும் இக்பால் புலம்பிக்கொண்டேதான் வந்தார். பஸ்ஸில் ஏறி உட்கார்ந்ததும் கடிகாரத்தைப் பார்த்தார் ’ஆறு மணிக்குப் ப்ரொக்ராம். இங்கயே அஞ்சரை ஆகிடுச்சு. இனிமே இந்த பஸ்காரன் நிதானமா வண்டியை ஓட்டி நாம அங்கே போய்ச் சேருறதுக்குள்ள ஆறரை ஆகிடும்!’ என்றார்.

எதிர் சீட்டில் அவருடைய எட்டு வயது மகன் சிராஜ் ஒரு லாலிபாப்பைச் சுவைத்துத் தின்று கொண்டிருந்தான். ‘சூப்பர் டேஸ்ட்ப்பா’ என்றான்.

‘நீ வேற நேரம் காலம் தெரியாம கடுப்பேத்தாதேடா!’ என்று கத்தினார் இக்பால். ‘ப்ரொக்ராமுக்கு லேட்டாச்சேன்னு நான் டென்ஷன்ல குதிச்சுகிட்டிருக்கேன். நீ கொஞ்சம்கூட கவலைப்படாமல் சாக்லேட் மென்னுகிட்டிருக்கியே. உனக்குக் கொஞ்சமாவது அறிவிருக்கா?’

சிராஜ் லாலிபாப்பை இன்னொருமுறை சுவைத்துவிட்டுக் கூலாகச் சொன்னான். ‘அப்பா, நீங்க டென்ஷனாகிக் கத்தறதால மட்டும் இந்த பஸ் வேகமாப் போகப்போகுதா என்ன?’

அவ்வளவுதான். இக்பால் திகைத்துப்போய் உறைந்துவிட்டார். தன் மகனையே ஆச்சர்யமாகப் பார்த்துக்கொண்டு வாயடைத்து நின்றார் அவர்.

இதில் இரண்டு விஷயங்கள் அடங்கியுள்ளன.

ஒன்று,

எல்லாமே நம் கட்டுப்பாட்டில் இருப்பதாக நினைத்துக்கொண்டு வாழ்வது, ஒரு சின்னக் குறை நேர்ந்துவிட்டால்கூடப் பதற்றப்பட்டுக் கத்துவது, அதைச் சரிசெய்தே தீரவேண்டும் என்று துடிப்பது!  

இரண்டாவது,

எதுவுமே நம் கட்டுப்பாட்டில் இல்லை என்பதைப் புரிந்துகொள்வது.

நாம் இங்கே இல்லாவிட்டாலும்கூட இந்தப் பூமி அதன்போக்கில் சுற்றிக்கொண்டுதான் இருக்கும் என்கிற கசப்பான உண்மையை ஏற்றுக்கொள்வது,

நாம் டென்ஷனாகிப் பிரயோஜனமே இல்லை என்பதை உணர்வது!

அதன்பிறகு, நமக்கு எதைப்பற்றியும் கவலையோ, கோபமோ, பதற்றமோ வராது, நம்முடைய பொறுப்பில் இருக்கும் வேலையை மட்டும் ஒழுங்காகச் செய்துவிட்டு மிச்சத்தை ஒரு பார்வையாளரைப் போல் உட்கார்ந்து வேடிக்கை பார்க்கமுடியும்!

இதில் இக்பால் முதல் வகை. அவர் மகன் சிராஜ் இரண்டாம் வகை. நீங்கள்?

posted by: Abu Safiyah

No comments

Powered by Blogger.