Header Ads



புத்தளத்தில் முஸ்லிம் சிறுவன் கடத்தல், புதுத் தகவல்கள் வெளியாகின

புத்தளம் வான் வீதியில் வைத்து கடந்த வெள்ளிக்கிழமை பகல் நான்கு வயதுச் சிறுவன் ஒருவனைக் கடத்திய சம்பவம் தொடர்பில் இந்திய பிரஜை ஒருவர் மற்றும் இரு பெண்களை 14ஆம் திகதி வரை விளக்க மறியலில் வைக்குமாறு புத்தளம் பதில் நீதவான் முஹம்மது இக்பால் உத்தரவிட்டுள்ளார்.

இதேவேளை சிறுவனின் கடத்தல் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டிருந்த முச்சக்கர வண்டியின் சாரதி பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

புத்தளம் வான் வீதியில் வதிக்கும் முஹம்மது {ஹசைன் என்பவரின் மகனான முஹம்மது பாதிர் என்ற இந்தச் சிறுவன்  யாசகம் கேட்டு வந்த இனந்தெரியாத பெண்மணி ஒருவரால் வெள்ளிக்கிழமை பகல் வேளையில்  கடத்தி செல்லப்பட்டதாக புத்தளம் பொலிஸார் தெரிவித்திருந்தனர்.

 இந்தக் கடத்தலையடுத்து உடன் செயற்பட்ட பொலிஸார் பொது மக்களின் ஒத்துழைப்போடு யாசகம் கேட்டு வந்த இரு பெண்களையும் அன்றைய தினமே  கைது செய்து விசாரணைக்கு உட்படுத்தியிருந்தனர். 

பின்னர்  பின்னர் சிறுவன் அன்றைய தினம் இரவு முச்சக்கர வண்டியில் அழைத்து வந்து கொண்டிருந்த போது பொலிஸாரால் மீட்கப்பட்டு முச்சக்கர வண்டியில் வந்த இந்திய பிரஜையுடன் முச்சக்கர வண்டிச் சாரதியும் கைது செய்யப்பட்டனர். 

சம்பவத்துடன் தொடர்புடைய பெண் இந்திய பிரஜையைத் திருமணம் செய்து கொண்டிருந்ததோடு அவருக்குப் பிறந்த குழந்தை ஒன்று இருப்பதாகத் தெரிவித்து இந்திய பிரஜையிடம் நீண்டகாலமாக பணம் பெற்று வந்துள்ளதாக விசாரணகளிலிருந்து தெரிய வந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.  

இந்நிலையில் இந்திய பிரஜை இலங்கை வந்துள்ளதோடு கடத்தப்பட்ட சிறுவனை தனது பிள்ளை எனக்காட்டுவதற்கே சிறுவன் கடத்தப்பட்டதாக விசாரணைகளிலிருந்து தெரிய வந்துள்ளது.

சம்பவத்துடன் தொடர்புடைய கணேசன் தேவமனோரி எனும் குறித்த பெண்ணை 14ஆம் திகதி அடையாள அணிவகுப்புக்கு உட்படுத்துமாறும் பதில் நீதிவான் உத்தரவிட்டுள்ளார். 

புத்தளம் பொலிஸார் இச்சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

No comments

Powered by Blogger.