எங்கள் மீது இந்தியா போரை திணித்தால், அந்த நாட்டை நாங்கள் அழிப்போம் - பாகிஸ்தான்
பாகிஸ்தான் ராணுவ மந்திரி கவாஜா ஆசிப், ‘சமா’ என்னும் தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்தார். அந்தப் பேட்டியில் அவர் ஆவேசத்துடன் கூறியதாவது:-
காஷ்மீர் பிரச்சினையில் இருந்து உலகத்தின் கவனத்தை திசை திருப்புவதற்காக உரி ராணுவ முகாம் தாக்குதலை இந்தியாதான் நடத்தி உள்ளது.
காஷ்மீர் தாக்குதலுக்கு பழிவாங்கும் விதத்தில் எங்கள் மீது இந்தியா போரை திணித்தால், அந்த நாட்டை நாங்கள் அழிப்போம். இந்தியாவின் எந்தவொரு தாக்குதலையும் சந்திப்பதற்கு பாகிஸ்தான் ராணுவம் முழுமையாக தயார் நிலையில் உள்ளது.
ஷோகேஸ்சில் (காட்சிப்பெட்டி) வைப்பதற்காக ஒன்றும் நாம் அணுகுண்டு தயாரித்து வைத்திருக்கவில்லை. அதைப் பயன்படுத்தும் சூழ்நிலை ஏற்பட்டால், அதை பயன்படுத்துவோம். இந்தியாவை அழிப்போம்.
பாகிஸ்தானின் வான் பிரதேசத்தில் இந்தியா அத்துமீறினால் பாகிஸ்தான் விமானப்படை சரியான பதிலடி தரும்.
காஷ்மீர் பிரச்சினையை தீர்ப்பதற்கு பாகிஸ்தானைப் போன்று இல்லாமல் இந்தியா ஆர்வம் காட்டவில்லை என்பதை தற்போது ஒட்டுமொத்த உலக நாடுகள் தெரிந்துகொண்டுள்ளன.
இவ்வாறு அவர் கூறினார்.
Post a Comment