Header Ads



சவுதி விமானத்தில், அலாரத்தை அழுத்தியதால் பரபரப்பு

சவுதி அரேபியா விமானத்தில், அவசர கால, 'அலாரத்தை' பைலட், தவறுதலாக அழுத்தியதால், பிலிப்பைன்சின் மணிலா விமான நிலையத்தில், பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

மேற்காசிய நாடான, சவுதி அரேபியாவின் ஜெட்டா நகரிலிருந்து, தென் கிழக்கு ஆசிய நாடான, பிலிப்பைன்சின் மணிலா நகருக்கு, நேற்று காலை, சவுதி அரேபிய ஏர்லைன்ஸ் விமானம் சென்றது. மணிலாவை விமானம் நெருங்கிய போது, மணிலா விமான நிலைய கட்டுப்பாட்டு அறைக்கு, சவுதி விமானத்திலிருந்து, அவசர காலத்தில் பயன்படுத்தப்படும் அலாரத்தின் சத்தம் கேட்டது. இதையடுத்து, அதிர்ச்சியடைந்த அதிகாரிகள், சவுதி விமானம் கடத்தப்பட்டுள்ளதாக அச்சம் அடைந்தனர். 

மணிலா விமான நிலையத்தில் தரையிறங்கும்போது, விமானத்தையும் பயணிகளையும் மீட்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டனர். விமான நிலையத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. மணிலா விமான நிலையத்தில், சவுதி விமானம் தரையிறங்கியது. விமானத்திலிருந்து பயணிகள் இறங்க, அதிகாரிகள் அனுமதிக்கவில்லை. 

விமானம் கடத்தப்பட்டுள்ளதா என்பதை அறிய, தீவிர விசாரணை நடத்தினர். விசாரணையில், விமானத்தில் அவசர காலத்தில் பயன்படுத்தப்படும், அலாரத்தை, பைலட், தவறுதலாக அழுத்தியது தெரிந்தது. இதனால், விமானம் கடத்தப்படவில்லை என்பதை அறிந்து, மணிலா விமான நிலைய அதிகாரிகள் பெருமூச்சு விட்டனர். இரண்டு மணி நேரத்துக்கு பின், விமானத்திலிருந்து இறங்க, பயணிகள் அனுமதிக்கப்பட்டனர்.

No comments

Powered by Blogger.