Header Ads



முதல்நாள் சண்டையில் பொட்டம்மானும், இறுதி 45 நிமிடத்தில் பிரபாகரன் கொல்லப்பட்டனர் - ஜெனரல் கமால்


போரின் இறுதிக்கட்டத்தில் நடந்த 45 நிமிடச் சண்டையிலேயே, புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் கொல்லப்பட்டார் என்றும், அதற்கு முதல் நாள் நடந்த சண்டையில், புலிகளின் புலனாய்வுத்துறை பொறுப்பாளர் பொட்டம்மானும் கொல்லப்பட்டார் என்றும், மேஜர் ஜெனரல் கமால் குணரத்ன தெரிவித்துள்ளார்.

கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு அளித்துள்ள செவ்வியில் அவர், எனது தலைமையிலான 53 ஆவது டிவிசனே, புலிகளின் தலைவர் பிரபாகரன், கடற்புலிகளின் தளபதி சூசை, தளபதி பானு உள்ளிட்டோரை கொன்றது.

2009 மே 19ஆம் திகதி காலை 9.30 மணியளவில் தொடங்கி 45 நமிடங்கள் நீடித்த சண்டையில் தான், பிரபாகரன் 4ஆவது விஜயபா படைப்பிரிவினால் கொல்லப்பட்டார்.

நந்திக்கடலில், 2009 மே 19ஆம் திகதி பிரபாகரன் கொல்லப்படுவதற்கு முதல் நாள், பொட்டம்மான் கொல்லப்பட்டார். இதனை நான் நிச்சயமாக கூறுகிறேன்.

அவர்போன்ற ஒருவர் உயிர் தப்பி வெளிநாட்டில் தஞ்சமடைந்திருந்தால் நிச்சயம் வெளியே வந்திருப்பார்.

பிரபாகரனின் மூத்த மகன் சாள்ஸ் அன்ரனி, கெமுனுவோச் படைப்பிரிவுடனான சண்டையில், 2009 மே 18ஆம் நாள் கொல்லப்பட்டார். ஆனால், பிரபாகரனின் இரண்டாவது மகன் பாலச்சந்திரன் என்னவானார் என்பது எனக்குத் தெரியாது” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

மேஜர் ஜெனரல் கமால் குணரத்ன தலைமையிலான 53ஆவது டிவிசனிடம் சரணடைந்த நிலையிலேயே பாலச்சந்திரன் படுகொலை செய்யப்பட்டார் என்று குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.




No comments

Powered by Blogger.