Header Ads



"அன்று சிங்கள - கத்தோலிக்க இனவாதத்தை கிளப்பினார்கள், இன்று சிங்கள - பெளத்த இனவாதம் பாய்கிறது"

வத்தளை - ஒளியமுல்லை பிரதேச காணியில் தமிழ் பாடசாலை அமைக்க இன்று அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. இதையிட்டு நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். அதேவேளை இந்த அடிக்கல் நாட்டு நிகழ்வை குழப்ப முனைந்த இனவாதிகளையிட்டு கவலையும் அடைகிறேன். இவ்விடயம் இவ்வளவு தூரம் இழுபறிபட்டுள்ளமைக்கு முழு பொறுப்பையும் அமைச்சர் ஜோன் அமரதுங்க ஏற்றுக்கொள்ள வேண்டும். 

1977ம் வருடம் முதல் கடந்த 40 வருடங்களாக இவர் அமைச்சராகவும், எம்பியாகவும் இருக்கின்றார். ஒவ்வொரு தேர்தலிலும் வத்தளை தமிழ் மக்கள் இவருக்கு வாக்களித்துள்ளார்கள். தமிழ் வாக்குகள் கிடைத்திராவிட்டால் இவர் ஒருபோதும் வெற்றி பெறவே முடியாது. இந்நிலையில் இவர் 25 ஆண்டுகளுக்கு முன்னரே ஏழை தமிழ் பிள்ளைகளுக்கான ஒரு தனித்தமிழ் பாடசாலையை வத்தளையில் நிர்மாணித்து புண்ணியத்தை இவர் தேடி இருக்க வேண்டும். அதை அவர் செய்யவும் இல்லை. செய்ய முனைந்த எங்களை செய்ய விடவும் இல்லை. 

இந்நிலையில் எதிர்வரும் ஜனவரியில் தமிழ் பிள்ளைகள் முதலாம் வகுப்புக்கு அனுமதி பெறக்கூடியதாக புதிய தனித்தமிழ் பாடசாலை தயாராக வேண்டும். இன்றைய அடிக்கல்லை கண்டு அகமகிழ்ந்து அமைதியடைந்து மீண்டும் ஏமாற தமிழ் மக்கள் இம்முறை தயாராக இல்லை. 

நானும், அமரதுங்கவும் ஒரே அரசாங்கத்தில் அமைச்சர்களாக இருக்கின்றோம் என்பதற்காக நான் அமைதியாக இருக்க மாட்டேன். என்னைப் பற்றி ஜோன் அமரதுங்கவுக்கு மிக நன்றாக தெரியும். அன்று இவர்கள் திட்டமிட்டு, தமிழ் பாடசாலை திட்டத்துக்கு எதிராக சிங்கள - கத்தோலிக்க இனவாதத்தை கிளப்பினார்கள். இன்று சிங்கள - பெளத்த இனவாதம் இவர்கள் மீது பாய்கிறது. இதுதான் உண்மை. இது இவர்கள் விதைத்த வினை. 

நானும் அரசியல் நோக்கில் ஓளியமுல்லைக்கு வந்து, ஒரு குழியை தோண்டி, ஒரு அடிக்கல்லை நாட்டி இருக்கலாம். எனினும் நானும் முதிர்ச்சியற்ற ஒரு சிறு குழந்தையை போல் நடந்துக்கொள்ள விரும்பவில்லை. ஜோன் அமரதுங்கவைவிட எனக்கு அரசியல் முதிர்ச்சி உள்ளது. 

தமிழ் பாடசாலை வத்தளையில் வேண்டும் என்பதுவே நோக்கம் என, தேசிய சகவாழ்வு கலந்துரையாடல் மற்றும் அரசகரும மொழிகள் அமைச்சரும், ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவருமான அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். 

கொழும்பு விவேகானந்தா கல்லூரி வளவில், தனது அமைச்சினால் ஏற்பாடு செய்யப்பட்ட முதலாவது முழுநாள் நடமாடும் சேவை நிகழ்வில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவித்த வேளையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

1 comment:

Powered by Blogger.