Header Ads



சிறிலங்கா கடற்பரப்பில், இயற்கை எரிவாயு


சிறிலங்கா கடற்பரப்பில் இயற்கை எரிவாயு அகழ்வுக்கான சாத்தியங்கள் தொடர்பாக ஆராய்வதற்கு, அடுத்தவாரம் அமைச்சரவையின் அனுமதி கோரப்படும் என்று சிறிலங்காவின் பெற்றோலிய வளங்கள் அபிவிருத்தி அமைச்சு தெரிவித்துள்ளது.

மன்னார் கடற்பரப்பில், இரண்டு துண்டங்களில் எரிவாயு ஆய்வுக்காக  அனைத்துலக அளவில் கேள்விப்பத்திரங்கள் கோரப்படவுள்ளன.

இது தொடர்பாக ஆறு அனைத்துலக நிறுவனங்களுடன் பேச்சுக்கள் நடத்தப்பட்டுள்ளதாக, சிறிலங்காவின் பெற்றோலிய வளங்கள் அமைச்சர் சந்திம வீரக்கொடி தெரிவித்தார்.

மலேசியாவின் பெற்றோனஸ், நெதர்லாந்தின் றோயல் டச் ஷெல், இந்தியாவின் எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு கூட்டுத்தாபனம், பிரான்சின் டோட்டல், அமெரிக்க பல்தேசிய நிறுவனமான எக்சோன் மொபில் கோர்ப், அமெரிக்காவின் ஹலிபோர்ட்டன் ஆகிய நிறுவனங்களுடனேயே பேச்சுக்கள் நடத்தப்பட்டுள்ளன.

வாய்ப்புகள் தொடர்பாக ஆராய்வதற்காக இந்திய நிறுவனத்தின் பிரதிநிதிகள் குழு அடுத்தவாரம் சிறிலங்கா வரவுள்ளதாகவும், அமைச்சர் சந்திம வீரக்கொடி தெரிவித்தார்.

எரிவாயு அகழ்வைத் துரிதமாக மேற்கொள்வதற்காக, ஏற்கனவே உள்ள ஆய்வுத் தரவுகள் நிறுவனங்களிடம் கையளிக்கப்படவுள்ளது.

மன்னார் கடற்படுகையில், ஹைட்ரோகார்பன் படிமங்கள் தொடர்பான தரவுகளை ஏற்கனவே கெய்ன் இந்தியா நிறுவனம், 235 மில்லியன் டொலர் செலவில் திரட்டியுள்ளது. ஆர்வமுள்ள நிறுவனங்களுக்கு இந்த தரவுகளையும் கையளிக்கத் தயார் என்று சிறிலங்கா அரசாங்கம் தெரிவித்துள்ளது.

மன்னார் கடற்படுகையின் ஒரு பகுதியில், 12 பில்லியன் டொலர் பெறுமதியான இயற்கை எரிவாயு படிமங்கள் இருப்பதாக கெய்ன் இந்தியா நிறுவனத்தின் ஆய்வுகளில் கண்டறியப்பட்டது.

சி-1, சி-2 என்று பெயரிடப்பட்ட காவிரிப் படுகையிலுள்ள இரண்டு துண்டங்களை சிங்கப்பூரைத் தளமாகக் கொண்ட நிறுவனம் ஒன்றுக்கு எரிவாயு ஆய்வுக்காக வழங்கப்படவுள்ளது. இந்த நிறுவனம் நடவடிக்கைகளை ஆரம்பிப்பதற்கு அனுமதி அளிக்கும், அமைச்சரவைப் பத்திரம் சமர்ப்பிக்கப்படவுள்ளது.

அதேவேளை கிழக்கு கடற்பரப்பில் உள்ள ஜேஎஸ்-5 மற்றும் ஜேஎஸ்-6 ஆகிய இரண்டு துண்டங்களிலும், பிரெஞ்சு பல்தேசிய நிறுவனமான டோட்டலுடன், இணைந்து கூட்டு ஆய்வை மேற்கொள்வதற்கு சிறிலங்கா அரசாங்கம் ஏற்கனவே உடன்பாடு செய்துள்ளது. இங்கு ஆய்வுப் பணிகள் வரும் வாரங்களில் ஆரம்பிக்கப்படவுள்ளன.

No comments

Powered by Blogger.