நாமல் ராஜபக்ஸவுக்கு உதவிய, விமானப் பணிப்பெண் கைது
கறுப்புப் பண சுத்திகரிப்பு சட்டத்தின் கீழ் முன்னெடுக்கப்பட்ட விசாரணையொன்றில் வெளிப்பட்ட இரு வேறு சட்ட விரோத கொடுக்கல், வாங்கல்கள் தொடர்பிலான விவகாரங்கள் குறித்து விமானப் ணான நித்திய சேனாத்தி சமரநாயக்க நேற்று -16- கைது செய்யப்பட்டார். இந்த விவகாரம் குறித்து பிரதான சந்தேக நபரான அம்பாந்தோட்டை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் நாமல்
ராஜபக் ஷ கைது செய்யப்பட்டு எதிர்வரும் 22 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க கோட்டை பிரதான நீதிவானும் கொழும்பு மேலதிக நீதிவானுமாகிய லங்கா ஜயரத்ன ஏற்கனவே உத்தரவு பிறப்பித்திருந்தார் இந் நிலையிலேயே தேடப்பட்டு வந்த சந்தேக நபர்களில் ஒருவரான குறித்த விமானப் பணிப்பெண் நேற்று கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டார்.
கட்டுநாயக்க விமான நிலையத்துக்கு நேற்று காலை சென்ற நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவின் 2 ஆம் இலக்க விசாரணை அறையின் பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் மொஹம்மட் சாஜித் தலைமையிலான குழுவினரால் நித்திய சேனாதி சமரநாயக்க பணி நிமித்தம் டில்லி நோக்கி செல்ல இருந்த நிலையில் கைது செய்யப்பட்டார். இதனையடுத்து அவர் கொழும்பு மேலதிக நீதிவான் லங்கா ஜயரத்ன முன்னிலையில் நேற்று பிற்பகல் ஆஜர் செய்யப்பட்டார்.
நாமல் ராஜபக்ஷவுக்கு சொந்தமானது என கூறப்படும் ஹெலோ கோப் நிறுவனத்தின் 100 மில்லியன் ரூபா பெறுமதியான பங்குகளை கொள்வனவு செய்த விதம் தொடர்பில் இடம்பெற்ற விசாரணைகளின் போது வெளிப்படுத்தப்ப்ட்ட, குறித்த பாராளுமன்ற உறுப்பினருக்கே சொந்தமான என்.ஆர். கன்சல்டன் மற்றும் கவர்ஸ் கோப்ரேஷன் ஆகிய நிறுவனங்கள் ஊடாக கறுப்புப் பண சுத்திகரிப்பு சட்டத்தின் கீழ் புரியப்பட்டதாக கூறப்படும் குற்றச் சாட்டுக்கள் தொடர்பிலேயே அந்த சட்ட விரோத நடவடிக்கைகளுக்கு உதவி ஒத்தாசை புரிந்தார் எனும் குற்றச் சாட்டில் குறித்த விமானப் பணிப்பெண் கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்ட குறித்த விமானப் பணிப்பெண்ணான நித்தியா சமரநாயக்க என்.ஆர். கன்சல்டன் மற்றும் கவர்ஸ் கோப்ரேஷன் ஆகிய இரு நிறுவனங்களினதும் பணிப்பாளராக கடமையாற்றியவர் என நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவு நேற்று மன்றுக்கு அறிவித்தது.
நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவின் உதவி பொலிஸ் அத்தியட்சர் பவித்ர தயாரத்னவின் மேற்பார்வையில் 2 ஆம் இலக்க விசாரணை அறையின் பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் மொஹமட் சாஜித் தலைமையிலான பொலிஸ் குழுவினரால் நாமல் ராஜபக்ஷ உள்ளிட்ட அறுவருக்கு எதிரான விசாரணைகள் இடம்பெற்று வந்தன. இந் நிலையில் நேற்று முன் தினம் நாமலும் அவருக்கு கறுப்புப் பண சுத்திகரிப்புக்கு உதவியதாக கூறப்படும் சுதர்ஷன பண்டார கனேகொடவும் கைது செய்யப்பட்டு கொழும்பு மேலதிக நீதிவான் முன்னிலையில் ஆஜர் செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டனர்.
'ஊழல் ஒழிப்பு குரல் ' அமைப்பின் தலைவர் வசந்த சமரசிங்க கடந்த 2015.07.28 ஆம் திகதி நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவில் செய்த முறைப்பாட்டுக்கு அமைவாக ஆரம்பிக்கப்பட்ட விசாரணை தொடர்பிலேயே பிரதான சந்தேக நபராக நாமல் ராஜபக்ஷ அடையாளம் காணப்பட்டு சட்ட மா அதிபரின் ஆலோசனைக்கு அமைய கைதுசெய்யப்பட்டார்.
நேற்று முன்தினம் காலை ஹலோ கோப்ஸ் விவகாரம் தொடர்பிலான விசாரணைகளுக்காக கோட்டையில் உள்ள நிதிக் குற்றப் புலனயவுப் பிரிவு முன்னிலையில் ஆஜராகுமாறு விடுக்கப்பட்ட உத்தரவுக்கு அமைய நாமல் ராஜபக்ஷவும் சுதர்ஷன பண்டார கனேகொடவும் அங்கு ஆஜராகினர். இதன்போதே அவர்கள் கைது செய்யப்பட்டனர். அத்துடன் விசாரணைக்கு அழைக்கப்பட்டிருந்த மேலும் இரு சந்தேக நபர்களான நித்தியா சேனாதி சமரநாயக்க என்ற விமானப் பணிப்பெண், சுஜானி போகல்லாகம என்ற பெண் ஆகியோர் நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவில் ஆஜராகவில்லை. சுஜானி போகொல்லாகம கொழும்பின் பிரபல தனியார் வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வரும் நிலையில் வீட்டிலிருந்து பணிக்கு சென்ற விமானப் பணிப் பெண்ணான நித்தியா நேற்று கட்டுநாயக்கவில் வைத்து கைதானார்.
இந் நிலையில் கைதான சந்தேக நபரை மன்றில் நேற்று பொலிஸார் ஆஜர் செய்த போது அவர் சார்பில் சிரேஷ்ட சட்டத்தரணி சம்பத் மெண்டிஸ், ஆஜரானார்.
நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவின் பொலிஸ் பரிசோதகர் மொஹமட் சாஜித் விசாரணையாளர்கள் சார்பில் ஆஜரானார்.
இது குறித்த விசாரணைகள் நீதிவானின் உத்தியோகபூர்வ அறையிலேயே இடம்பெற்ற நிலையில், சந்தேக நபரை ஆஜர் படுத்தி, நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவின் பொலிஸ் பரிசோதகர் மொஹம்மட் சாஜித் பின்வருமாறு நீதிவானின் கவனத்துக்கு கொண்டு வந்தார்.
' நாமல் ராஜபக்ஷ ஹலோகோப்ஸ் நிறுவனத்தைன் பங்குகளை கொள்வனவு செய்ய சட்ட விரோதமாக உழைத்ததாக கூறப்படும் தொகையானது அவருக்கு சொந்தமான இரு நிறுவனங்களை விற்பனை செய்யப்பட்டு பெறப்பட்டது . அந்த நிறுவனங்கள் ஊடாகவே கறுப்புப் பண சுத்திகரிப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளமை தொடர்பிலும் வெளிப்படுத்தப்பட்டது. இந் நிலையில் குறித்த இரு நிறுனங்கள் தொடர்பில் தேடிய போது அவை நாமல் ராஜபக்ஷவுக்கு சொந்தமான என்.ஆர். கன்சல்டன் மற்றும் கவர்ஸ் கோப்ரேஷன் என தெரியவந்தது. இந் நிறுவனங்கள் அனைத்தினதும் பங்குகள் நாமல் ராஜபக்ஷவுக்கு சொந்தமானவை. இவிரண்டு நிறுவனங்களும் தமது கறுப்புப் பணத்தை ரொஹான் ஹிரியாகொல்ல என்பவர் தலைமை தாங்கும் பொஸ்டன் எனும் நிறுவனத்தின் ஊடாக சுத்திகரித்துள்ளனர். இது தொடர்பில் கொடுக்கல் வாங்கல் பத்திரங்களையும் வங்கிக்கணக்குகளையும் மையப்படுத்திய விசாரணைகளில் உறுதியானது.
இதன்படி என்.ஆர். கன்சல்டன் நிறுவனம் 15 மில்லியன் ரூபாவையும் கவர்ஸ் கோப்ரேஷன் நிறுவனம் 30 மில்லியன் ரூபாவையும் பொஸ்டன் நிறுவனத்தில் இட்டு பின்னர் மீள தமது கணக்குகளுக்குள் அவற்றை உள்ளீர்த்துள்ளன.
என்.ஆர். கன்சல்டனின், கவர்ஷ் கோப்ரஷனின் பணிப்பாளராக நித்தியா சேனாதி சமரநாயக்க எனும் இந்த சந்தேக நபர் செயற்பட்டுள்ளார்.
என்.ஆர். கன்சல்டன் குறித்து 25 கொடுக்கல் பத்திரங்களும் கவர்ஸ் கோப்ரேஷன் தொடர்பில் 14 கொடுக்கல் வாங்கல் ஆராயப்ப்ட்டுள்ளதுடன் அவை மன்றுக்குக்கும் சமர்பிக்கப்பட்டுள்ளன. இவையனைத்தும் பணிப்பாளரின் ஆலோசனைக்கு அமையவே நடை பெற்றுள்ளன என்பது விசாரணையில் உறுதியானது.
நாமல் உள்ளிட்ட சந்தேக நபர்களை மன்றில் ஆஜர் செய்த போது கூறிய அனைத்து விடயங்களும் இந்த சந்தேக நபர் தொடர்பிலும் பொருத்தமானது. இது குறித்த விசாரணைகள் இன்னும் நிறைவடையவில்லை. ஆகவே சந்தேக நபரான இப்பெண்ணை விளக்கமறியலில் வைக்க வேண்டும். எனக் கோரிக்கை முன்வைத்தார்.'
இதன்போது மன்ரில் கருத்துக்களை முன்வைத்த சந்தேக நபரின் சட்டத்தரணி சம்பத் மெண்டிஸ், தமது சேவை பெறுநர் பெயரளவு பணிப்பாளராகவே இருந்ததாகவும் அவருக்கு குறித்த இரு நிருவன்னக்கள் ஊடாகவும் எவ்வித கொடுப்பணவுகளும் கூட கிடைக்கப் பெறாத நிலையில் அவருக்கு பினை வழங்க வேண்டும் என வாதிட்டார்.
இதன்போது நீதிவான் லங்கா ஜயரத்ன நிதிக் குற்றப் புல்னய்வுப் பிரிவினரிடம் அது குறித்து விசாரித்தார்.
அவர் பெயரளவு பணிப்பாளராக இருந்தாலும், ஏதோ பிரதிபலனுக்காகவே இந் நடவடிக்கைகளை செய்துள்ளதாகவும் பணப் பெற்றிருக்கலாம் என தமக்கு சாதாரண சந்தேகம் இருப்பதாகவும் அது குறித்தும் விசாரணை செய்வதாகவும் பொலிஸ் பரிசோதகர் சாஜித் இதன்போது நீதிவானுக்கு பதிலளித்தர்.
இதன்போது இரு தரப்பு விடயங்களையும் ஆராய்ந்த நீதிவான் லங்கா ஜயரத்ன, சந்தேக நபர் குறித்த குற்ற சாட்டுடன் சில தொடர்புகளைக் கொண்டுள்ளமை தெளிவாவதால் விசாரணை நிறைவடையவில்லை என்பதை மையப்படுத்தி சாட்சிகளுக்கு பாதிப்பு ஏற்படலாம் என்பதைக் கருத்தில் கொன்டு எதிர்வரும் 22 ஆம் திகதி வரை அவரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார்.
Post a Comment