பாராளுமன்றத்தில் கூச்சல், குழப்பம்
பாராளுமன்றத்தில் சபாநாயகரின் கட்டளையை மதிக்காமல் கூட்டு எதிர்கட்சியினர் குழப்பம் விளைவித்ததால் பாராளுமன்றம் சற்றுமுன்னர் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
வற்வரி தொடர்பாக இன்றைய பாராளுமன்ற ஒன்றுகூடல் இடம் பெற்றபோது கூட்டு எதிர்கட்சியினர் தமக்கு இந்த சட்டமூலம் தொடர்பில் ஒரு வார கால அவகாசம் வேண்டும் என்ற கோரிக்கையினை முன்வைத்தனர்.
இது தொடர்பில் ஏற்கனவே விவாதம் செய்து விட்டதாகவும் எனவே இதற்கு கால அவகாசம் வழங்கப்பட முடியாது என சபாநாயகர் கூறினார்.
இக்கருத்துக்கு கூட்டு எதிர்கட்சி உறுப்பினர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு பாராளுமன்றத்தில் எழுந்தது. விமல் மற்றும் வாசுதேவ நாணயக்கார போன்றோர் கூச்சலிட்டு தமது கடும் எதிர்ப்பை வெளியிட்டனர்.
இதே வேளை பந்துல குணவர்தன தமது இருக்கையை விட்டு பாராளுமன்றத்திற்கு நடுவில் வந்தார்.
இதனால் சபாநாயகர் “பாராளுமன்றத்தை நடத்த ஒத்துழைக்க வேண்டும், ஏற்கனவே இவ்வாறான தவறு நிகழ்ந்தது இனியும் அதற்கு இடமளிக்கப்பட மாட்டாது, பந்துல குணவர்தன அவரது இடத்திற்கு செல்ல வேண்டும்” என பல முறை எச்சரிக்கையினையும் விடுத்தார்.
கூட்டு எதிர்கட்சியினர் இதனை ஏற்றுக்கொள்ளாமல் கூச்சலிட்டதால் பாராளுமன்றம் சபாநாயகரால் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment