தம்புள்ளை பள்ளிவாசலுக்கு, சாராய கடைக்கருகில் காணி - முஸ்லிம்கள் தரப்பில் எதிர்ப்பு
-விடிவெள்ளி ARA.Fareel-
தம்புள்ளை ஹைரியா பள்ளிவாசலை புதிய இடத்தில் நிர்மாணிப்பதற்காக நகர அபிவிருத்தி அதிகார சபையினால் ஒதுக்கப்பட்ட காணி மதுபானசாலைக்கு அருகில் அமைந்துள்ளதால் பள்ளிவாசல் நிர்வாகம் இதற்கு மறுப்புத் தெரிவித்துள்ளது.
மதுபானசாலைக்கு அருகாமையில் பள்ளிவாசலை நிர்மாணிக்க முடியாதெனவும் அதனால் புதுக்காணியொன்றினை வழங்க ஏற்பாடு செய்யும் படியும் நகர அபிவிருத்தி அதிகார சபையிடமும் மாத்தளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் அலுவிகாரயிடமும் கோரிக்கை விடுத்துள்ளது.
மாத்தளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் அலுவிகாரையை தொடர்பு கொண்டு இது தொடர்பில் வினவிய போது அவர் பின்வருமாறு விளக்கமளித்தார். தம்புள்ள பள்ளிவாசல் பிரச்சினையைத் தீர்க்காமல் நகர அபிவிருத்தி அதிகார சபை அதிகாரிகளே காலதாமதப்படுத்தி வருகின்றனர். இதனாலேயே இப்பகுதியில் சிங்கள முஸ்லிம் உறவுக்கு களங்கம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இந்தப் பிரச்சினை என்றோ தீர்க்கப்பட்டிருக்க வேண்டும். இது தீர்க்கப்படாமைக்கு நகர அபிவிருத்தி அதிகார சபையே பொறுப்புக்கூற வேண்டும். பள்ளிவாசலை இடமாற்றிக் கொள்வதற்கு உகந்தவோர் இடமொன்றை இனங்காணுமாறு நகர அபிவிருத்தி அதிகாரசபை அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்திருக்கின்றேன்.
அத்தோடு தம்புள்ளையிலிருந்து ஏற்கனவே அகற்றப்பட்ட இந்துக் கோயிலுக்கும் காணி வழங்குமாறும் பள்ளிவாசல் மற்றும் கோயில் பிரதேசங்களில் வாழும் மற்றும் வாழ்ந்த குடும்பங்களுக்கு தலா 10 பேர்ச் வீதம் காணி வழங்கும் படியும் நகர அபிவிருத்தி அதிகார சபையைக் கோரியிருக்கிறேன் என்றார்.
தம்புள்ளை ஹைரியா பள்ளிவாசல் நிர்வாக சபை உறுப்பினர் எஸ்.வை.எம்.சலீம்தீனைத் தொடர்பு கொண்டு இது தொடர்பில் வினவியபோது ‘நகர அதிகார சபை ஒதுக்கியுள்ள காணி பள்ளிவாசல் நிர்மாணத்துக்கு உகந்ததாக இல்லை.
அருகில் மதுபானசாலை இருப்பதால் இதற்கு நாம் விருப்பம் தெரிவிக்கவில்லை. தற்போது ஒதுக்கப்பட்டுள்ள காணி பள்ளிவாசலிலிருந்தும் 150 மீற்றர் தூரத்திலே அமைந்துள்ளது. புதிய காணி ஒதுக்கித்தருமாறு கோரியுள்ளோம்.
தற்போதைய பள்ளிவாசல் 41 பேர்ச் நிலத்திலே அமைந்துள்ளது. எனவே பள்ளிவாசல் சகல வசதிகளுடனும் நிர்மாணித்துக் கொள்வதற்காக 2 ரூட் காணிகோரியுள்ளோம்.
கோயிலுக்கும் காணி வழங்கப்பட வேண்டுமெனவும் தற்போது பள்ளிவாசலுக்கு அருகில் வாழும் தமிழ் முஸ்லிம் சிங்கள குடும்பங்கள் 16 க்கும் காணிகள் வழங்கப்படவேண்டுமெனவும் கோரியுள்ளோம்.
பள்ளிவாசலுக்கான காணி முஸ்லிம் சமய கலாசார திணைக்களத்துக்கு வழங்கப்பட்டு திணைக்களம் ஊடாக நாம் பெற்றுக் கொள்வதற்கு ஆவன செய்யுமாறு வேண்டியுள்ளோம் என்றார்.
தம்புள்ளை பள்ளிவாசல் 2012 ஏப்ரல் மாதம் 20 ஆம் திகதி வெள்ளிக்கிழமை தம்புள்ளை ரங்கிரி ரஜமகாவிகாராதிபதி இனாமலுவே தேரரின் தலைமையிலான குழுவினரால் தாக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.
தம்புள்ளை புனித பூமியில் பள்ளிவாசல் இருக்கக்கூடாது அப்புறப்படுத்தப்பட வேண்டும் என்றே தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது.
அன்றிலிருந்து இப்பள்ளிவாசல் பிரச்சினை தொடர்ந்து கொண்டேயிருக்கிறது. பள்ளிவாசல் நிர்வாகம் பொருத்தமான காணியொன்று வழங்கப்பட்டால் இடமாறிக் கொள்வதாக உறுதியளித்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
Post a Comment