Header Ads



முஸ்லிம்களை மீளக்குடியமர்த்துவதில், அதிகாரிகளினால் இனத்துவப் புறக்கணிப்பு

யுத்தத்தினால் இடம்பெயர்க்கப்பட்டு மீள்குடியேறியுள்ள முஸ்லிம்களது காணி மற்றும் அடிப்படை வசதிகள் தொடர்பான பிரச்சினைகள் உடனடியாகத் தீர்க்கப்படவேண்டும் என மட்டக்களப்பு சிவில் பிரஜைகள் குழுவின் பிரதித்தலைவர் ஜுனைட் நளீமி தெரிவித்தார்.

தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ள இராணுவ வீரர்களது விசாரணைகள் விரைவுபடுத்தப்பட்டு விடுதலை செய்யப்பட வேண்டுமென இன்று இடம்பெற்ற நல்லிணக்கப் பொறிமுறைகள் பற்றிய கலந்தாலோசனைக்கான செயலணியின் மக்கள் கருத்தறியும் ஆரம்ப அமர்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

பிரதம மந்திரியின் நேரடிக் கண்காணிப்பின் கீழ் அமைக்கப்பட்டுள்ள இச்செயலணி மட்டக்களப்பு மாவட்டத்திற்கான ஆரம்ப அமர்வினை வாழைச்சேனைப் பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் ஏற்பாடு செய்திருந்தது.

இதில் தொடர்ந்தும் கருத்துத்தெரிவித்த அவர்நாட்டில் யுத்தத்திற்குப் பிந்திய சூழலில் அண்மைக்காலமாக மாவட்டத்தில் இடம்பெயர்வை மேற்கொண்டவர்களுக்கான அடிப்படை வசதிகளும் நிவாரணங்களும் வழங்கப்பட்டு வருகின்றது.

ஆனால், மிக நீண்டகாலமாக விரட்டியடிக்கப்பட்டு அகதிகளாக்கப்பட்ட முஸ்லீம் மக்கள் மீளக்குடியமர்வதில் காணி ஆவணங்கள், காணிகள் மற்றும் அடிப்படை வசதிகளைப் பெற்றுக்கொள்வதில் சில அதிகாரிகளினால் இனத்துவப் புறக்கணிப்பு மேற்கொள்ளப்படுகின்றது.

சில அதிகாரிகள் தமது இலாபங்களுக்காக இத்தகைய இனத்துவப் பார்வையை மேற்கொண்டு அப்பாவி தமிழ் முஸ்லீம் சிங்கள சமூகங்கள் மத்தியில் பிரச்சினைகளை ஏற்படுத்த முனைகின்றனர்

மிக அண்மையில் மீள்குடியேற்றப்பட்ட சகோதர இன மக்களுக்கு காணிகள், காணி ஆவணங்கள் அடிப்படை வசதிகள் வழங்கப்பட்ட போதும் சுமார் முப்பது வருடங்களுக்கு மேலாக இடம்பெயர்வு செய்யப்பட முஸ்லிம்கள் புறக்கணிப்புச் செய்யப்பட்டுள்ளனர்.

அவ்வாறே மாவட்டத்தில் விவசாயிகளும் தமது நிலங்களை இழந்தும் இழக்க வேண்டியும் உள்ளது.

உன்னிச்சை, உறுகாமம், காயன்குடா, பொத்தானை, கள்ளியங்காடு , கள்ளிச்சை, காரமுனை, ஜப்பார் திடல் போன்ற சுமார் ஐம்பதுக்கும் மேற்பட்ட முஸ்லிம் கிராம மக்கள் தீர்வின்றி வாழ்கின்றனர்.

அதே போன்று மைளந்தனை, வாகனேரி, சிப்பிமடு, புணானை போன்ற கிராமங்களைச் சேர்ந்த தமிழ் சிங்கள சகோதர இனங்களும் மீள்குடியேற்றம் தொடர்பிலான பல்வேறு அடிப்படைப் பிரச்சினைகளை எதிர்கொள்கின்றனர்.

எனவே, நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துறைப்பிரகாரம் இவர்களது பிரச்சினைகளை விரைவில் தீர்ப்பதற்கான பொறிமுறையினை மேற்கொள்ள வேண்டும்.

தடுத்துவைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகள் மற்றும் முன்னாள் போராளிகளை விரைவில் விடுவிப்பதற்கான நீதிப்பொறிமுறை ஏற்படுத்தப்பட வேண்டும்.

அவ்வாறே தடுத்து வைக்கப்பட்டுள்ள இராணுவ வீரர்கள் மீதான விசாரணைத் துரிதப்படுத்துவதற்கான விசேஷட நீதிப்பொறிமுறை ஏற்படுத்த வேண்டும்.

ஏனெனில், அவர்களும் இந்நாட்டின் பிரஜைகளே. இதன் மூலமே நிலையான நல்லிணக்கத்தை ஏற்படுத்த முடியுமெனக் அவர் மேலும் குறிப்பிட்டார்.

No comments

Powered by Blogger.