Header Ads



ஜனாதிபதி நினைத்தால் 15 நிமிடத்திற்குள், எனது மகளை கண்டுபிடிக்க முடியும்..!

இறுதி யுத்தத்தின் போது காணாமல் போன எனது மகள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் புகைப்படத்தில் நிற்கின்றார்.

அவளை எனக்கு இதுவரை காட்டாதவர்கள் எப்படி நீதியை பெற்றுத்தரப்போகிறார்கள்.

எமக்கு இந்த அரசாங்கத்திலும் நம்பிக்கை இல்லை என தாயார் மு.ஜெயவனிதா தெரிவித்துள்ளார்.

வவுனியா வடக்கு பிரதேச செயலகத்தில் இடம் பெற்ற நல்லிணக்க பொறிமுறை தொடர்பிலான கருத்தறியும் செயலணியிடமே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்தும் தெரிவிக்கையில்:

எனது மகள் இறுதி யுத்தத்தின் போது காணாமல் போயிருந்தார். நான் அவளை தேடி வந்த நிலையில் கடந்த வருடம் இடம்பெற்ற ஜனாதிபதி தேர்தலின் போது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு அருகில் நிற்பதை துண்டுப் பிரசுரம் ஒன்றில் கண்டேன்.

இது தொடர்பில் நான் பலரிடமும் முறையிட்டேன். இறுதியாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கூட நேரடியாக தெரிவித்தேன். ஆனால் பல மாதங்கள் கடந்தும் அதற்கு பதில் இல்லை.

ஜனாதிபதியுடன் நிற்கும் புகைப்படத்தையும் அதிகாரிகளிடம் நான் கையளித்தேன்.

ஜனாதிபதி நினைத்தால் 15 நிமிடத்திற்குள் எனது மகளை கண்டு பிடிக்க முடியும். ஆனால் இதுவரை பதில் இல்லை.

ஜனாதிபதியுடன் எனது மகள் நிற்கும் புகைப்படத்தை கொடுத்த எனக்கு தீர்வு கிடைத்தால் தான் ஏனையவர்களுக்கும் நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கை ஏற்படும் எனவும் அந்த தாயார் தெரிவித்தார்.

No comments

Powered by Blogger.