Header Ads



IS பயங்கரவாதத்தை அழிப்போம் - அசதுத்தீன் உவைசி திட்டவட்டம்

'ஐஎஸ்' அமைப்பையும் ஒழிப்போம்;
முஸ்லிம்களை 'ஐஎஸ்' இயக்கத்துடன் தொடர்பு படுத்தும் ஊடக பயங்கரவாதிகளையும் ஒழிப்போம்..!
அசதுத்தீன் உவைசி எச்சரிக்கை..!!

மதீனா நகரின் மீது தாக்குதல் நடத்த தற்கொலைப் படையை ஏவிய ஐ.எஸ். தீவிரவாதிகளை நரகத்தின் நாய்கள் என அசாதுதீன் ஒவைசி குறிப்பிட்டுள்ளார்.

ஐதராபாத் நகரில் முஸ்லிம் அமைப்புகளின் சார்பில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய இந்திய மஜ்லிஸ்-இ-இட்டெஹாதுல் முஸ்லிமீன் இயக்கத் தலைவரும், ஐதராபாத் தொகுதி எம்.பி.யுமான அசாதுதீன் ஒவைசி, ஐ.எஸ். தீவிரவாதிகள் முஸ்லிம்களுக்கு மட்டுமல்ல, ஒட்டுமொத்த மனித குலத்துக்குமே தீங்கானவர்கள் என்று குற்றம்சாட்டினார்.

இஸ்லாம் மார்க்கத்துக்கும் ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கும் எந்த தொடர்பும் இருக்க முடியாது என்று கூறிய அவர், இந்த தீவிரவாதிகளை அழிப்பது முஸ்லிம்களின் பெரிய கடமையாகும் என்றார்.

சவுதி அரேபியாவில் உள்ள புனித நகரின் மீது தாக்குதல் நடத்த தற்கொலைப் படையை ஏவிய ஐ.எஸ். தீவிரவாதிகளை நரகத்தின் நாய்கள் என குறிப்பிட்ட அசாதுதீன் ஒவைசி,  இப்படி ஒரு தாக்குதல் நடத்தும்படி ஏவிய ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்தின் தலைவன் அபு பக்ர் அல் பாக்தாதியை முஸ்லிம்கள் என்றாவது ஒருநாள் பார்க்க நேர்ந்தால் அவனை ஒரு துண்டாக அல்ல, நூறு துண்டுகளாக வெட்டிப் போடுவார்கள் என்றும் எச்சரித்தார்.

ஐ.எஸ். தீவிரவாதிகளின் மூளைச்சலவைக்கு பலியாகி விடாதீர்கள் என முஸ்லிம் இளைஞர்களை வலியுறுத்திய அவர், இஸ்லாமுக்காக நீங்கள் வாழ வேண்டுமேத்தவிர இஸ்லாமுக்காக சாகக் கூடாது என்றார்.

உங்களில் படித்தவர்கள் ஏழைவீட்டு முஸ்லிம் குழந்தைகளுக்கு இலவசமாக டியூஷன் கற்றுத்தர வேண்டும். உங்களில் செல்வந்தர்களாக இருப்பவர்கள் ஏழை குடும்பங்களை சேர்ந்த கன்னிப் பெண்களின் திருமணம் நடக்க தேவையான உதவிகளை செய்ய முன்வரவேண்டும் என்றும் ஒவைசி வேண்டுகோள் விடுத்தார்.

இந்த நிகழ்ச்சியின்போது மதீனா  தற்கொலைப்படை தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்தும், ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு எதிராகவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இஸ்லாம் மார்க்கத்தின் சித்தாந்தத்தை அடிவேரோடு தகர்த்தெறியும் ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கும் இஸ்லாமுக்கும் யாதொரு தொடர்பும் இல்லை என அந்த தீர்மானத்தில் முன்மொழியப்பட்டுள்ளது.

https://www.youtube.com/watch?v=zQhRA3dBQKM

No comments

Powered by Blogger.