Header Ads



எர்டோகானின் தலைவிதி

-Khaibarthalam-

துருக்கிய ஜனாதிபதி ரெசெப் தயிப் எர்டோகனைப் பதவியிலிருந்து தூக்கிவீசுவதற்கான கருச்சிதைக்கப்பட்ட இராணுவ ஆட்சிக்கவிழ்ப்பு சதிக்கு ஒரு வாரத்திற்குப் பின்னர், முக்கியமாக இஸ்தான்புல் மற்றும் அங்காராவை உலுக்கிய அந்த இரத்தக்களரியான சம்பவங்களில் வாஷிங்டனின் கரம் இருந்தது என்பதில் அங்கே எந்த ஐயப்பாடும் கிடையாது.

அமெரிக்கா ஐரோப்பாவில் அதன் மிக அதிகளவிலான அணுஆயுதங்களைப் பாதுகாத்து வைத்துள்ள இடமும், ஈராக் மற்றும் சிரியாவிற்கு எதிரான அதன் குண்டுவீச்சு நடவடிக்கையை நடத்துவதற்குரிய இடமாகவும் உள்ள இன்செர்லிக் விமானப் படைத்தளத்தின் தளபதி உட்பட பெண்டகன் உடன் நெருங்கிய தொடர்பு கொண்ட துருக்கிய இராணுவ தளபதிகள் அந்த முயற்சிக்கப்பட்ட சதியில் நடவடிக்கையில் நேரடியாக உடந்தையாய் இருந்துள்ளனர்.

அந்த ஆட்சிக்கவிழ்ப்பு சதிக்கு ஆதரவாக பல விமானங்கள் அமெரிக்க இராணுவ பார்வையின் கீழ் இன்செர்லிக் இல் இருந்து பறந்து சென்றன. அந்த சதி தோல்வியடைந்தமை வெளிப்படையாக ஆனதும், அந்த துருக்கிய விமானப்படை தளத்தின் தளபதி அமெரிக்காவில் தஞ்சம் கோரியிருந்தார். ஆட்சிக்கவிழ்ப்பு சதியாளர்களுக்கும், MIT என்று அறியப்படும் துருக்கியின் தேசிய உளவுத்துறை அமைப்பிற்கும் இடையிலான ரேடியோ தொலைதொடர்புகளை ஊடுருவி அனுப்பிய ரஷ்யாவிடமிருந்து உடனடியாக நடக்கவிருக்கும் ஓர் சதி குறித்த எச்சரிக்கை வந்திருந்ததாக புதனன்று தகவல்கள் வெளியானது.

எர்டோகன் விடுமுறையைக் கழித்துக் கொண்டிருந்த கடற்கரை விடுதியில் அவரை கொல்வதற்கான அல்லது சிறைபிடிப்பதற்கான ஒரு நடவடிக்கையில் சிறப்பு நடவடிக்கை படைகள் அனுப்பப்படுவதற்கு வெறும் ஓர் அரை மணி நேரத்திற்கு முன்னர் தான், உரிய நேரத்தில் அவர் தப்பிச் செல்வதற்காக துருக்கிய ஜனாதிபதிக்கு இந்த எச்சரிக்கை பகிர்ந்து கொள்ளப்பட்டிருந்தது.

சிஐஏ மற்றும் அமெரிக்க இராணுவம் அப்பிராந்தியத்தில் அவற்றின் பாரிய ஆயத்தப்பாடுகளையும் மற்றும் உலகின் மிகவும் அதிநவீன மின்னணு உளவுப்பார்ப்பு வலையமைப்பையும் அவற்றின் மேற்பார்வையில் வைத்துள்ள நிலையில், அதே தகவல் பரிவர்த்தனைகளைக் குறித்து அவை அறியாமல் இருந்திருக்கலாம் என்பது நம்பக்கூடியதாகவா இருக்கிறது?

அமெரிக்க இராணுவ மற்றும் உளவுத்துறை எந்திரம் துருக்கிய அரசாங்கத்திற்கு செய்தி அளிக்கவில்லை என்றால், அதற்கான காரணம் அவர்களும் அந்த ஆட்சிக்கவிழ்ப்பு சதிக்கு உடந்தையாய் இருந்தனர்.

எர்டோகனை ஒபாமா எச்சரிக்க விரும்பவில்லை; அவர் கொல்லப்பட வேண்டுமென விரும்பினார் என்பது தெளிவாகிறது.

பின்னர் அந்த ஆட்சிக்கவிழ்ப்பு சதி மீது வாஷிங்டனின் உண்மையான பிரதிபலிப்பு மாஸ்கோ இல் இருந்த வெளியுறவுத்துறை செயலர் ஜோன் கெர்ரியிடம் இருந்து வந்தது.

கெர்ரி "துருக்கியில் ஸ்திரத்தன்மையும் சமாதானமும் தொடர்ச்சியும்" நிலவ வேண்டுமென அமெரிக்கா நம்புவதாக கூறி தன்னைத்தானே மட்டுப்படுத்திக் கொண்டார்.

இராணுவ பதவிக்கவிழ்ப்புக்கு எதிராக ஜனநாயகரீதியில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்தைப் பாதுகாப்பது குறித்து அதில் எந்த குறிப்பும் கிடையாது, அந்நாட்டின் ஜனாதிபதி எர்டோகனின் தலைவிதி குறித்து எந்தவித கவலையும் வெளிப்படுத்தப்படவில்லை என்பதைக் கூற வேண்டியதே இல்லை.

“துருக்கியில் தொடச்சிக்கான" ஆதரவிற்கு குரல் கொடுத்து கெர்ரி துல்லியமாக என்ன குறிப்பிடுகிறார் என்பதை கடந்த 70 ஆண்டுகால அமெரிக்க-துருக்கிய உறவுகளின் உள்ளடக்கத்தில் மட்டுந்தான் புரிந்து கொள்ள முடியும்.

1947 இல், பனிப்போர் இன் ஆரம்ப கட்டத்தில், அமெரிக்கா அது சோவியத் ஆக்கிரமிப்பு என்று எதை குற்றஞ்சாட்டியதோ அதற்கு எதிராக கிரீஸ் மற்றும் துருக்கியைப் பாதுகாப்பதில் தன்னைத்தானே ஈடுபடுத்திக் கொண்டதன் மூலமாக ட்ரூமன் கோட்பாட்டை பிரகடனம் செய்தது.

கருங்கடல் மற்றும் மத்தியதரைக் கடலை இணைக்கும் ஜலசந்தி பாதையான துருக்கிய ஜலசந்தி வழியாக சுதந்திரமாக கடந்து செல்வதற்கான மாஸ்கோவின் கோரிக்கையை அது நிராகரிக்க உதவியாக, துருக்கிக்கு, அமெரிக்க உதவியும், இராணுவ ஆலோசகர்கள் மற்றும் ஒரு விமானந்தாங்கிய போர்க்கப்பல் குழுவும் விரைந்தன.

1952 இல், துருக்கி நேட்டோவிற்குள் கொண்டு வரப்பட்டது, அதற்குப் பிந்தைய நான்கு தசாப்தங்களில், அது சோவியத் ஒன்றியத்திற்கு எதிரான அமெரிக்க இராணுவ முனைவில் ஒரு முன்னணி நாடாக இருந்து வந்தது.

இந்த "தொடர்ச்சியை" பேணும் ஆர்வத்தில், வாஷிங்டன் துருக்கியில் பல தொடர்ச்சியான இராணுவ ஆட்சிக்கவிழ்ப்பு சதிகளை ஆதரித்தது, முதலில் 1960 இல் துருக்கிய பிரதம மந்திரி Adnan Menderes க்கு எதிராக நடந்தது, இவர் பொருளாதார உதவிக்காக மாஸ்கோ பக்கம் திரும்பியதும் அவரது தலைவிதி முடிக்கப்பட்டது, அவர் தூக்கிலிடப்பட்டார்.

முதலில் 2003 இல் இருந்து 2014 வரை பிரதம மந்திரியாகவும், பின்னர் ஜனாதிபதியாகவும் எர்டோகனும் அதேபோன்ற பிரச்சினைகளை முகங்கொடுத்தார். அவரது வலதுசாரி இஸ்லாமிய கட்சியான AKP இன் பிடியைப் பாதுகாக்கும் ஆர்வத்தில், அவர் ஒரு தேசியவாத கொள்கையைப் பின்பற்றியதால் அது தொடர்ந்து வாஷிங்டனை ஆத்திரமூட்டியது.

2003 இல், ஈராக் மீது தாக்குதல் நடத்த அதன் மண்ணை அமெரிக்கா பயன்படுத்துவதற்கு துருக்கி மறுத்தது. 2010 இல், ஈரானுக்கு எதிரான ஐ.நா. தீர்மானங்களுக்கான அமெரிக்க முனைவை அது ஆதரிக்கவில்லை.

மேலும் 2013 இல், அது சீனாவிடமிருந்து ஏவுகணை-தடுப்பு அமைப்புமுறையை வாங்கும் திட்டங்களை அறிவித்து, வாஷிங்டன் மற்றும் நேட்டோவை அது அதிர்ச்சியூட்டியது. சிரியாவில் ஆட்சிமாற்ற போர் மீது, உறவுகள் இன்னும் கூடுதலாக மோசமடைந்துள்ளன, அங்கே அல் கொய்தா உடன் பிணைந்துள்ள இஸ்லாமிய போராளிகள் குழுக்களை ஆதரிக்கும் பிரதான ஆதரிப்பாளர், துருக்கியாகும், அதேவேளையில் வாஷிங்டன் அங்காரா யாருடன் போரிட்டு வருகிறதோ அதே துருக்கிய குர்திஷ் இயக்கமான PKK உடன் அணிசேர்ந்துள்ள சிரியாவின் குர்திஷ் போராளிகள் குழுக்களுடன் அதிகரித்தளவில் உறவுகளைப் பலப்படுத்தி உள்ளது.

நவம்பர் 2015 இல் ரஷ்ய போர் விமானம் ஒன்றை வேண்டுமென்றே சுட்டுவீழ்த்தியதன் மீது மிக சமீபத்தில் எர்டோகன் மாஸ்கோவிடம் மன்னிப்பு கோரியிருந்ததுடன், விளாடிமீர் புட்டின் அரசாங்கத்துடன் சமரசத்தை நோக்கி நகர்ந்திருந்தார். அந்த ஆட்சிக்கவிழ்ப்பு சதியை அடுத்து, எர்டோகன் ஒபாமாவுடன் தொலைபேசியில் பேசுவதற்கு முன்னதாக புட்டின் உடன் பேசினார்.

மேலும் செவ்வாயன்று ஈரானிய ஜனாதிபதி ஹாசன் ரௌஹானி உடனான ஒரு உரையாடலில், எர்டோகன், “ஈரான் மற்றும் ரஷ்யா உடன் கரங்கோர்த்து பிராந்திய பிரச்சினைகளைத் தீர்க்கவும் மற்றும் இப்பிராந்தியத்தில் சமாதானம் மற்றும் ஸ்திரப்பாட்டை மீண்டும் கொண்டு வரும் எங்களது முயற்சியிலும் நாங்கள் தீர்மானகரமாக உள்ளோம்,” என்று அறிவித்தார்.

அப்பிராந்தியத்தில் அத்தகைய ஒரு மூலோபாய மறுஅணிசேர்க்கையை ஏற்றுக் கொள்வதற்கு அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு விருப்பமில்லை. ஒரு முயற்சிக்கப்பட்ட இராணுவ ஆட்சிக்கவிழ்ப்பு சதியைப் புகலிடமாக ஏற்பது ஐயத்திற்கு இடமின்றி ஒரு குற்றகரமான பொறுப்பற்ற கொள்கை தான். அது வெற்றி பெற்றிருந்தால், அனேகமான அதன் விளைவு, ஓர் உள்நாட்டு போராக இருந்திருக்கும் மற்றும் மரண எண்ணிக்கை ஒப்பீட்டளவில் எகிப்தில் நடந்த அமெரிக்க ஆதரவிலான இரத்தந்தோய்ந்த ஆட்சிக் கவிழ்ப்பு சதியையே விஞ்சியிருக்கும்.

அமெரிக்க ஏகாதிபத்தியம் அதன் புவிசார் மூலோபாய நலன்களைப் பின்தொடர்வதற்காக மில்லியன் கணக்கானவர்களைக் கொன்றும் மற்றும் காயப்படுத்தியும், ஏற்கனவே ஈராக், லிபியா மற்றும் சிரியாவை நாசகரமாக ஆக்கியுள்ளதால், ஏன் துருக்கியையும் அவ்வாறு ஆக்காது?

துருக்கி உடனான பதட்டங்கள், அமெரிக்க இராணுவவாதத்தின் ஓர் உலகளாவிய வெடிப்பின் உள்ளடக்கத்தில் எழுகிறது. வார்சோவில் நடந்த ஒரு நேட்டோ உச்சி மாநாடு, ரஷ்யாவின் மேற்கு எல்லையில் இராணுவ ஆயத்தப்படுத்தல்களைப் பாரியளவில் தீவிரப்படுத்தும் திட்டங்களையும் மற்றும் மாஸ்கோ உடனான ஒரு நேரடியான மோதலுக்கு, அதாவது அணுஆயுத மோதலுக்கு தயாரிப்புகள் செய்யும் திட்டங்களை விவரித்து வெறும் ஒரு வாரத்திற்குப் பின்னர் இந்த ஆட்சிக்கவிழ்ப்பு சதி நடந்துள்ளது.

ஆசியாவில் தென் சீனக் கடலில் சீன உரிமைகோரல்களுக்கு எதிராக மத்தியஸ்தத்துக்கான ஐ.நா நிரந்தர நீதிமன்றத்தின் தீர்ப்பை, பெய்ஜிங்கிற்கு எதிரான ஒரு மிகப்பெரிய இராணுவ தீவிரப்படுத்தலுக்கான சாக்குபோக்காக பயன்படுத்த விரும்புவதை அமெரிக்க ஏகாதிபத்தியம் தெளிவுபடுத்தி உள்ளது. அதற்காக, ஒபாமா நிர்வாகம் அமெரிக்க இராணுவ பலத்தைக் கொண்டு சீனாவை அச்சுறுத்தும் ஆத்திரமூட்டும் உரைகளை வழங்கவும் மற்றும், மிகவும் குறிப்பாக, ஆஸ்திரேலியர்கள் விரும்புகிறார்களோ இல்லையோ, அவர்கள் அமெரிக்க போர் தயாரிப்புகளுக்குள் இழுக்கப்படுவார்கள் என்பதை அவர்களுக்கு எடுத்துரைக்கவும் துணை ஜனாதிபதி ஜோ பேடென் ஐ ஆஸ்திரேலியாவிற்கு அனுப்பியது.

இரண்டாம் உலக போர் முடிந்ததற்குப் பின்னர் பார்த்திராத அளவில் ஒரு இராணுவ மோதலை நோக்கி அமெரிக்கா நகர்ந்து வருகிறது. அது அதன் போர் திட்டங்களது பாதையில் வரும் எல்லா தடைகளையும் நசுக்க தீர்மானகரமாக உள்ளது.

அமெரிக்காவின் நவம்பர் மாத தேர்தல்களுக்கு முன்னரே இல்லையென்றாலும், அதை அடுத்து மிகப்பெரும் அதிர்ச்சிகள் வந்து கொண்டிருக்கின்றன.

இராணுவவாதத்தின் வளர்ச்சியும் மற்றும் உலக போருக்கான தயாரிப்புகளும் பூமியின் எந்தவொரு இடத்திலும் ஜனநாயக ஆட்சி வடிவங்களைப் பேணுவதுடன் பொருத்தமற்று உள்ளன.

போருக்கான முனைவானது ஒரு நாடு மாற்றி ஒரு நாட்டில் சர்வாதிகார முறைகளை நோக்கிய ஒரு திருப்பத்தைத் தீவிரப்படுத்தி அதிகரித்து வருகிறது, இந்தவொரு திருப்பமானது, உலக முதலாளித்துவத்தின் ஆழ்ந்த நெருக்கடி மற்றும் சமூக சமத்துவமின்மையின் கட்டுப்படுத்த முடியாத வளர்ச்சி மற்றும் 2008 நிதியியல் உருகுதலை அடுத்த வர்க்க பதட்டங்கள் ஆகியவற்றில் வேருன்றியுள்ளது.

No comments

Powered by Blogger.