Header Ads



"மக்கள் பிரதிநிதிகளின் பொறுப்பு, கால்களில் கொப்புளங்கள் வரும்வரை வீதிவலம் வருவதல்ல"

மக்கள் வாக்குகளின் மூலம் தெரிவான மக்கள் பிரதிநிதிகளின் பொறுப்பு கால்களில் கொப்புளங்கள் வரும் வரை வீதிவலம் வருவதன்றி நாட்டைக் கட்டியெழுப்புவதற்காக ஒன்றிணைவதாகும் என ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்தார். மக்கள் பிரதிநிதிகள்

இன்று முற்பகல் பொலன்னறுவையில் இடம்பெற்ற நாடெங்கிலும் 3100 கி.மீ பிரதேச வீதிகளை புனர்நிர்மாணம் செய்யும் நிகழ்ச்சித் திட்டத்தின் அங்குரார்ப்பண நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சித்திட்டம் இன்று பொலன்னறுவை லங்காபுர பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள வீரபுர கிராமத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.இங்கு தொடர்ந்தும் உரையாற்றிய ஜனாதிபதி,

நாட்டின் எல்லா மாவட்டங்களுக்கும் சரிசமமான அபிவிருத்தியை ஏற்படுத்திக் கொடுத்து நாட்டு மக்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு எந்தவொரு அரசாங்கமும் செய்யாத வேலைத்திட்டங்களை தமது ஆட்சிக் காலப்பகுதியில் நிறைவேற்றுவதாகக் குறிப்பிட்டார்.

ஜேர்மனி உட்பட உலகின் மிகவும் முன்னேற்றமடைந்த எல்லா நாடுகளிலும் பிரதான எதிர்கட்சிகள் ஒன்றிணைந்து ஆட்சியமைத்திருப்பதன் மூலமே அவர்களது நாட்டின் அபிவிருத்தியை ஏற்படுத்தியுள்ளார்கள் எனக் குறிப்பிட்ட ஜனாதிபதி,

அதிகாரத்திற்காக மோகம் கொள்ளும் அரசியல் கலாசாரத்திற்கு முடிவுகட்டி நாட்டைக் கட்டியெழுப்புவதற்காக எல்லா அரசியல்வாதிகளும் அரசியல் கட்சிகளும் ஒன்றிணைவது காலத்தின் தேவையாகும் என்றும் குறிப்பிட்டார்.

ஊழல் நிறைந்த ஆட்சியை தோற்கடித்து ஒரு தூய்மையான அரசாங்கத்தை உருவாக்குவதற்கு இந்நாட்டு மக்கள் உதவுவர் என தமக்கிருந்த நம்பிக்கையின் பேரிலேயே தாம் கடந்த ஆட்சியிலிருந்து விலகி அச்சமின்றி ஜனாதிபதி தேர்தலுக்கு முகம்கொடுத்ததாகக் குறிப்பிட்ட ஜனாதிபதி,

நாட்டுக்குத் தேவையான புதிய சமூக, பொருளாதார மற்றும் அரசியல் மாற்றத்தை பெற்றுக்கொடுப்பதற்கு அந்த மக்களின் ஆசீர்வாதம் தமக்கு என்றும் இருப்பதாகவும் தெரிவித்தார்.

இந்த ஒன்றிணைந்த வீதி அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்த்தின் கீழ் பொலன்னறுவை மாவட்டத்தை உள்ளடக்கிய வகையில் 170 கி.மீ பிரதேச வீதிகள் புனர்நிர்மாணம் செய்யப்படவுள்ளதுடன், இதற்காக ரூ 3890 மில்லியன் செலவிடப்படப்படவுள்ளது.

அமைச்சர் லக்ஸ்மன் கிரியெல்ல, இராஜாங்க அமைச்சர் டிலான் பெரேரா, பாராளுமன்ற உறுப்பினர்களான சிட்னி ஜயரத்ன, நாலக கொலொன்னே ஆகியோர்களும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்..

No comments

Powered by Blogger.