Header Ads



அமெரிக்கப் போர்க்கப்பல், நாளை கொழும்பு வருகிறது


அமெரிக்கக் கடற்படையின் ஈரூடக போக்குவரத்துக் கப்பலான யுஎஸ்எஸ் நியூ ஒர்லியன்ஸ் நாளை -24- சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளது.

சிறிலங்கா கடற்படையுடனான இருதரப்பு உறவுகளை அதிகரிக்கவும், அமெரிக்காவின் ஆதரவு மற்றும் மனிதாபிமான உதவிகள் மற்றும் அனர்த்த மீட்பு பயிற்சிகளை அளிப்பதற்காகவுமே அமெரிக்க கடற்படைக் கப்பல் கொழும்புத் துறைமுகம் வரவுள்ளது.

இதுதொடர்பாக சிறிலங்காவில் உள்ள அமெரிக்கத் தூதரகம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “ 21 ஆம் நூற்றாண்டு, பல்வேறு வழிகளிலும் இந்தோ-பசுபிக் நூற்றாண்டாக இருப்பதாகவும், தமது மூலோபாய அமைவிடத்தின் மூலம் சிறிலங்கா நல்ல நிலையில் இருப்பதாகவும், அமெரிக்கத் தூதுவர் அதுல் கெசாப் குறிப்பிட்டுள்ளார்.

கடல்பாதுகாப்பு மற்றும் உறுதிப்பாட்டில், முக்கியமான படையான சிறிலங்கா கடற்படையுடன் இணைந்து பணியாற்ற அமெரிக்க கடற்படை எதிர்பார்த்திருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

யுஎஸ்எஸ் நியூ ஒர்லியன்ஸ் கப்பல் நாளை கொழும்பு வரும் போது, யுஸ்எய்ட் நிபுணர்கள் மற்றும் அமெரிக்க கடற்படையின் 13 ஆவது கடற்படை ஆய்வுப் பிரிவுடன், சிறிலங்கா கடற்படையின் 200 மாலுமிகள் இரண்டு நாட்கள் அனர்த்த மீட்பு மற்றும் மனிதாபிமான உதவிகள் தொடர்பான பயிற்சிகளில் ஈடுபடவுள்ளனர்.

மத்திய கிழக்கில் ஏழு மாதங்கள் கண்காணிப்பில் ஈடுபட்டிருந்த யுஎஸ்எஸ் நியூ ஒர்லியன்ஸ் அமெரிக்க கடற்படையின் பசுபிக் கட்டளைப்பீடத்தின் கீழ் இயங்கி வருகிறது.

இந்த ஆண்டு சிறிலங்காவுக்கு பயணம் மேற்கொள்ளும் இரண்டாவது அமெரிக்க கடற்படைக் கப்பல் இதுவாகும். கடந்த மார்ச் மாதம் அமெரிக்கக் கடற்படையின் யுஎஸ்எஸ் பளூரிட்ஜ் போர்க்கப்பல் கொழும்புத் துறைமுகம் வந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.