Header Ads



மஹிந்த ராஜபக்ஷ எந்த அடிப்படையில், எதிர்க்கின்றார் என்பது தெரியாது - மைத்திரி

நாட்டுக்கு புதிய அரசியலமைப்பு தேவையென்றும் தனது தேர்தல் விஞ்ஞாபனத்தில் வலியுறுத்திய மஹிந்த ராஜபக்ஷ இன்று புதிய அரசியலமைப்பை எதிர்பை எதிர்ப்பது எந்த அடிப்படையில் என கேள்வி எழுப்பிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன,சர்வதேசத்திற்கு நாட்டை காட்டிக் கொடுக்கவில்லையென்றும் எனக்கு சர்வதேசத்துடன் எந்தவிதமான தனிப்பட்ட நிகழ்ச்சி நிரலும் கிடையாது என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் முன்னாள் தவிசாளரும், அமைச்சருமான மறைந்த தர்மசிறி சேனாநாயகவின் 16 ஆவது வருடாந்த நினைவு தின நிகழ்வு வரகாபொல நகர சபை மண்டபத்தில் நடைபெற்றது. இதில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு கூறினார்.

ஜனாதிபதி இங்கு தொடர்ந்தும் உரையாற்றுகையில்,

சர்வதேச ஆதரவினை இலங்கைக்கு பெற்றுக் கொள்வதற்காக நாட்டை காட்டி கொடுப்பதாக சிலர் குற்றம் சாட்டுகின்றனர். நான் ஒருபோதும் நாட்டை காட்டிக் கொடுக்கவில்லை. மாறாக எஸ்.டபிள்யூ.ஆர்.டி. பண்டாரநாயக்கவின் அரசியல் சிந்தனையும் அவர் முன்னெடுத்த வெளிநாட்டுக் கொள்கையையே முன்னெடுக்கின்றேன். அதனை விடுத்து சர்வதேசத்துடன் எனக்கு தனிப்பட்ட ரீதியில் எதுவிதமான நிகழ்ச்சி நிரலும் கிடையாது.

2015 ஆம் ஆண்டு ஜனவரி 8 ஆம் திகதி இந்த நாட்டில் 65 இலட்சத்து 50 ஆயிரம் மக்கள் என் மீது நம்பிக்கை வைத்து இந்த நாட்டின் ஜனாதிபதியாக என்னை தெரிவு செய்து, நாட்டை என்னிடம் ஒப்படைத்தனர். எனவே எனது பொறுப்பை சரியான முறையில் நிறைவேற்றுவேன். எனது பொறுப்பை நிறைவேற்றுவதில் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் ஒரு அடி முன்னேக்கிச் செல்வேன் தவிர பின்னோக்கிச் செல்ல மாட்டேன்.

அனைவரும் இணைந்து நாட்டுக்கும் மக்களுக்கும் நன்மை பயக்கும் அரசியலமைப்பை உருவாக்க வேண்டும். புதிய அரசியலமைப்பு மரணப் பொறி என விமர்சிப்போர் புதிய அரசியலமைப்பை உருவாக்க பாராளுன்ற தெரிவிக்குழுவில் உறுப்பினர்காளாக அங்கம் வகிக்கின்றனர்.

1978 ஆம் ஆண்டு அரசியலமைப்பை பாராளுமன்றத்தில் நிறைவேற்றியபோது அதனை எதிர்த்து நாட்டுக்கு புதிய அரசியலமைப்பு அவசியம் என்பதை வலியுறுத்தியவர் சிறிமாவோ பண்டாரநாயகா தலைமையிலான ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியாகும். அதன் பின்னர் சந்திரிகா பண்டாரநாயக தனது தேர்தல் விஞ்ஞாபனத்தில் இரண்டு தடவைகள் இதனை வலியுறுத்தினார்.

மஹிந்த ராஜபக்ஷ தனது இரண்டு தேர்தல்களிலும் நாட்டுக்கு புதிய அரசியலமைப்பு தேவை என்பதை தனது தேர்தல் விஞ்ஞாபனத்தில் வலியுறுத்தினார். ஆனால் இன்று இதனை எந்த அடிப்படையில் எதிர்க்கின்றார் என்பது தெரியாது.

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் கொள்கைகளையே நான் முன்னெடுத்துச் செயல்படுகிறேன். இன்று இணக்கப்பாட்டு ஆட்சிக்குள் அனைவரும் இணைந்து செயற்படுவதே தேவைப்படுகின்றது என்பதையும் ஜனாதிபதி வலியுறுத்தினார். 

No comments

Powered by Blogger.