இலங்கை இளைஞர், சவூதியில் கொலை - நண்பரான யெமன் பிரஜை கைது
- பீ.எம்.அன்வர் -
இலங்கை வாலிபரொருவர் சவூதி அரேபியாவின் “யன்பு” பிரதேசத்தில் வைத்து யெமன் பிரஜை ஒருவரின் கத்திக் குத்துக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார். கொலை செய்யப்பட்டவர் கெக்கிராவ –ஹோறாப்பொலையைச் சேர்ந்த சியாம் சிஹாப்தீன் (34வயது) என்ற வாலிபரென இனங்காணப்பட்டுள்ளார்.
இச் சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,
சவூதி அரேபியா – யன்பு பிரதேசத்திலுள்ள கண்ணாடித் தொழிற்சாலையொன்றில் பணிபுரிந்து வந்த நிலையில் சியாம் சிஹாப்தீன் சனிக்கிழமை நடுநிசி 12 மணியளவில் அவரது உற்ற நண்பனெனக் கூறப்படும் யெமன் நாட்டு வாலிபரொருவரின் கத்திக் குத்திற்கு இலக்காகி உயிரிழந்துள்ளார்.
சம்பவ தினம் இரவு தனது அறையில் ஏதோ ஓர் அலுவலில் சியாம் சிஹாப்தீன் ஈடுபட்டுக் கொண்டிருந்த வேளையில் அந்த அறையில் அவருடன் ஒன்றாகத் தங்கியிருக்கும் யெமன் பிரஜை சியாமுக்குப் பின்புறமாக நின்று அவரது கழுத்துப் பாகத்தில் கூரிய கத்தியினால் குத்தியிருப்பது தெரிய வந்திருப்பதாகவும் அவலக் குரல் கேட்டு அவ்விடத்திற்கு விரைந்த பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் அங்கு சூழ்ந்துள்ளனர்.
இதே சமயம் யெமன் பிரஜை தான் ஒருவரைக் குத்திக் கொலை செய்துவிட்டதாக தனது கைத்தொலைபேசி மூலம் அவனாகவே பொலிஸாருக்கு தகவல் கொடுத்துள்ளான்.
சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் குற்றுயிராய் கிடந்த சியாம் சிஹாப்தீனை வைத்தியசாலைக்கு அனுப்புவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டதுடன் குறித்த யெமன் பிரஜையைக் கைது செய்து அழைத்துச் சென்றனர்.
வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சியாம் சிஹாப்தீன் பின்னர் சிகிச்சைகள் பலனின்றி அங்கு உயிரிழந்ததாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.
மூன்று பிள்ளைகளின் தந்தையான காலஞ் சென்ற சியாம் சிஹாப்தீன் கடந்த பத்து வருடங்களாக சவூதியில் தொழில் புரிந்து வருபவரெனவும் அவ்வப்போது விடுமுறையில் இலங்கைக்கு வந்து செல்பவரெனவும் கூறப்படுகின்றது.
தனது சவூதி தொழில்களை கைவிட்டு கடந்த 6,7 மாதங்களுக்கு முன்னர் ஊருக்குத் திரும்பியிருந்த இவரை ஆறு மாதங்களுக்கு முன்னர் “விஸா” அனுப்பி மீண்டும் சியாமை சவூதிக்கு அழைத்துக் கொண்டவர் அவரைக் கத்தியால் குத்திக் கொன்றதாகக் கூறப்படும் இதே யெமன் நாட்டு வாலிபன் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இக்கொலை தொடர்பான விசாரணைகள் சவூதியில் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுவதால் சியாமின் ஜனாஸாவை இலங்கைக்கு எடுத்து வருவதில் சிக்கல்கள் காணப்படுவதாகத் தெரியவந்துள்ளது.s
Post a Comment