Header Ads



ஜாகீர் நாயக்கின் அலுவலகத்தில், பொலிஸார் குவிப்பு

வங்கதேச தலைநகர் டாக்காவில் உள்ள ஓட்டலில் கடந்த 1-ம் தேதி தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதில் 22 பேர் கொல்லப் பட்டனர். தாக்குதல் நடத்திய தீவிரவாதிகள் 6 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். தாக்குதல் நடத்திய தீவிரவாதிகளில் ஒருவனான ‘அவாமி லீக்’ தலைவரின் மகன் ரோஹன் இம்தியாஸ், இந்திய இஸ்லாமிய மதபோதகர் ஜாகீர் நாயக்கின் பேச்சுகளால் ஈர்க்கப்பட்டு தீவிர வாதத்துக்கு மாறி உள்ளதாக தகவல் வெளியானது. இது குறித்து நாயக்கின் பேச்சுகளை மேற்கோள் காட்டி பல கருத்துகளை முகநூலில் ரோஹன் வெளியிட்டுள்ளான்.

‘‘ஜாகீர் நாயக்கின் பேச்சுகள் மிகவும் கவலை அளிக்கின்றன. அவர் மீது நடவடிக்கை எடுக்கப் படும்’’ என்று மத்திய உள்துறை இணை அமைச்சர் கிரண் ரிஜுஜு நேற்றுமுன்தினம் கூறியிருந்தார். இதுகுறித்து மும்பை போலீஸ் அதிகாரிகள் கூறுகையில், ‘‘மத்திய, மாநில அரசுகளிடம் இருந்து எங்களுக்கு தனிப்பட்ட முறையில் எந்த அறிவுறுத்தலும் வரவில்லை. சட்டம் ஒழுங்கை நிலைநிறுத்தும் பொறுப்பு போலிஸுக்கு உள்ளதால், நாயக்கின் நடவடிக்கைகளை உன்னிப்பாக கண்காணித்து வருகிறோம்’’ என்றனர்.

மும்பையை சேர்ந்த மதபோதகர் ஜாகீர் நாயக், தீவிரவாதத்தை தூண்டும் வகையில் பேசி வருவதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்நிலையில், கடந்த 2012-ம் ஆண்டு ஒரு நிகழ்ச்சியில் ஜாகீர் நாயக்குடன் காங்கிரஸ் மூத்த தலைவர் திக்விஜய் சிங் பங்கேற்ற வீடியோ வெளியாகி உள்ளது. அந்த நிகழ்ச்சியில் திக்விஜய் சிங் பேசிய விவரம் முழுவதும் வீடியோவில் பதிவாகி உள்ளது.

அதில், ‘‘ஜாகீர் நாயக்குக்கு எதிரான ஆதாரங்கள் இருந்தால் அவர் மீது இந்தியாவும், வங்கதேசமும் நடவடிக்கை எடுக்கட்டும். நான் மதநல்லிணக்கத்தை வலியுறுத்துகிறேன். மத அடிப்படைவாதத்தையும் தீவிரவாதத்தையும் எதிர்க்கிறேன். அவர்கள் இந்துக்களாக இருந்தாலும் முஸ்லிம்களாக இருந்தாலும் எதிர்க்கிறேன்’’ என்று திக்விஜய் சிங் பேசியுள்ளார்.

ஜாகீர் நாயக்கின் அலுவலகத்தில், பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் கூறியுள்ளன.


No comments

Powered by Blogger.