"மோப்ப நாயொன்றை அமைச்சரவைக்கு அனுப்பினால், கொலையாளிகள் கண்டுபிடிக்கப்படுவர்"
பிரதீப் எக்நேலிகொட மற்றும் லசந்த விக்ரமதுங்க கொலைகளுடன் தொடர்புடைய உண்மையான நபர்களை அமைச்சரவையில் வைத்திருக்கும் தற்போதைய அரசாங்கம், இந்த கொலைகள் தொடர்பில் குற்றம் சுமத்தி இராணுவ புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகள் சிலரை சிறையில் அடைத்துள்ளதாக தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ஸ தெரிவித்துள்ளார்.
கடுவலை ரன்கடு பத்தினி அம்மன் ஆலய சூழலில் நேற்று நடைபெற்ற கூட்டம் ஒன்றில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார். தொடர்ந்து உரையாற்றிய வீரவன்ஸ,
பிரதீப் எக்நேலிகொட கொலை சம்பவம் தொடர்பாக குற்றம் சுமத்தப்பட்ட புலனாய்வுப் பிரிவை சேர்ந்த 9 அதிகாரிகள் கடந்த 200 நாட்களாக வெலிக்கடை சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
அதேபோல் மில்லேனியம் சிட்டி புலனாய்வு அணியை சேர்ந்த தற்போது உயிருடன் இருக்கும் ஒரே ஒரு புலனாய்வுப் பிரிவு அதிகாரியான உதலாகம லசந்த விக்ரமதுங்க கொலை தொடர்பாக குற்றம் சுமத்தப்பட்டு அண்மையில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இவருக்கு லசந்த விக்ரமதுங்கவின் கொலைக்கும் எந்த தொடர்பும் இல்லை.
லசந்த விக்ரமதுங்க கொலையுடன் தொடர்புடையவர்களை தேட வேண்டுமாயின் பொலிஸார் அமைச்சரவைக்கு செல்ல வேண்டும். அமைச்சரவைக்கு சென்று நாய் ஒன்றிணை மோப்பம் பிடிக்க அனுப்பினால், மோப்ப நாய் உண்மையான நபரிடம் சென்று நிற்கும்.
அதேபோல் பிரதீப் எக்நேலிகொட கொலையுடன் தொடர்புடைய நபரை தேட வேண்டுமாயின் பொலிஸ் மோப்ப நாயை அமைச்சரவைக்கு அனுப்ப வேண்டும்.
இந்த இரண்டு கொலைகளுடன் தொடர்புடைய நபர்களை அரசாங்கம் அமைச்சரவைக்குள் வைத்து கொண்டு புலனாய்வுப் பிரிவு அதிகாரிகளை சிறையில் அடைத்துள்ளது.
விசாரணை நடைபெறும் போது, குற்றப் புலனாய்வுப் பிரிவினர் உதலாகம என்ற அதிகாரியை புகைப்படம் எடுத்துள்ளனர். அடையாள அணி வகுப்புக்கு வருவோருக்கு முன்கூட்டியே காட்டுவதற்காக இந்த புகைப்படம் எடுக்கப்பட்டுள்ளது. செய்யாத தவறுக்காக இராணுவ புலனாய்ப் பிரிவினர் தண்டனை அனுபவித்து வருகின்றனர்.
இந்த பாவமான பயணத்தை நாம் தொடர்ந்தும் பொருத்துக் கொள்ள வேண்டுமா?. அப்படியானால், நாம் செய்நன்றி கொண்ட மனிதர்கள் அல்ல எனவும் விமல் வீரவன்ஸ மேலும் தெரிவித்துள்ளார்
Post a Comment