அரசியல்வாதிகள் அடித்த செல்பி, குறித்து விசாரணை ஆரம்பம்
இராஜாங்க அமைச்சர் பாலித ரங்கே பண்டாரவும், விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ள பிரதி அமைச்சர் பாலித தெவரப்பெருமவும் சிறைச்சாலையில் செல்பீ எடுத்துக் கொண்டமை குறித்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
மத்துகம மீகஹாதென்ன ஆரம்பப் பாடசாலைக்கு மாணவர்களை இணைத்துக் கொள்ள வேண்டுமெனக் கோரி போராட்டம் நடத்தி பின்னர் பாடசாலைக்குள் சட்டவிரோதமாக பிரவேசித்தார் என குற்றம் சுமத்தி பாலித தெவரப்பெரும கைது செய்யப்பட்டு விளக்க மறியலில் வைக்கப்பட்டிருந்தார்.
களுத்துறை சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த பாலித தெவரப்பெருமவிற்கும், பாடசாலை மாணவ மாணவியர் ஒன்பது பேரின் பெற்றோருக்கும் நேற்று பிணை வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
பாலித தெவரப்பெரும விளக்க மறியலில் வைக்கப்பட்டிருந்த போது அவரைப் பார்வையிடச் சென்ற இராஜாங்க அமைச்சர் பாலித தெவரப்பெரும மற்றும் சட்டத்தரணி அருண தீபால் ஆகியோர் செல்பீ எடுத்துக் கொண்டிருந்தனர்.
இந்த செல்பீக்கள் மற்றும் ஏனைய புகைப்படங்கள் சமூக ஊடக வலையமைப்புக்களில் வெளியிடப்பட்டிருந்தது.
இவ்வாறு செல்பீ எடுத்துக் கொண்டமை குறித்து உடனடியாக அறிக்கை சமர்ப்பிக்குமாறு களுத்துறை சிறைச்சாலை அதிகாரிகளுக்கு சிறைச்சாலை ஆணையாளர் நாயகம் நிசான் தனசிங்க நேற்று உத்தரவிட்டுள்ளார்.
களுத்துறை சிறைச்சாலை அத்தியட்சகருக்கு இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கைதிகளை பார்வையிடச் செல்லும் நபர்கள் சிறைச்சாலைக்குள் செல்லிடப் பேசி பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, கடந்த 6ம் திகதி குறித்த இரு அமைச்சர்களும் இவ்வாறு செல்பீ எடுத்துக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment