Header Ads



வடக்கில் முஸ்லிம்களுக்காக, விசேட செயலணி - அமைச்சரவை அங்கீகாரம்

வடக்கில் இடம்பெயர்ந்த சிங்கள, முஸ்லிம் மக்களுக்காக 21,663 வீடுகள் நிர்மாணிக்கப்படவுள்ளதோடு அரசியல் உரிமைகளுடன் அவர்களை மீள் குடியமர்த்துவதற்கு விசேட செயலணியொன்றை அமைப்பதற்கும் அமைச்சரவை அங்கீகாரம் கிடைத்துள்ளது. 

அதேவேளை மீள்குடியேற்றம் தொடர்பில் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, மீள்குடியேற்றம் மற்றும் இந்து மத அலுவல்கள் அமைச்சு நடைமுறைப்படுத்திய திட்டங்கள் தொடர்பில் அமைச்சர் சுவாமி நாதன் அமைச்சரவைக்கு முன்வைத்த தகவல்கள் குறித்தும்   அமைச்சரவை தனது கவனத்தை செலுத்தியுள்ளது. 

அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாடு நேற்று புதன்கிழமை அரசாங்க தகவல் திணைக்களத்தில் இடம்பெற்றது. இதன்போதே அமைச்சரவை இணைப் பேச்சாளரும் அமைச்சருமான கயந்த கருணாதிலக மேற்கண்ட அமைச்சரவை தீர்மானங்களை அறிவித்தார். 

இது தொடர்பில் அமைச்சர் மேலும் தகவல் தருகையில், 

1980 ஆம் ஆண்டுகளிலிருந்து மோதல்கள் காரணமாக உள்நாட்டில் தமிழ் மக்கள் மட்டுமன்றி முஸ்லிம்,  சிங்கள மக்களும் இடம்பெயர்ந்தனர். மோதல் முடிவடைந்த நிலையில் அவர்கள் மீண்டும் மீள்குடியேற்றப்பட்டாலும் தேவையான வசதிகள் வழங்கப்படவில்லை. 

நீண்ட நாட்களாக இடம்பெயர்ந்து மீள்குடியேற்றுவதற்காக காத்திருக்கும் முஸ்லிம் குடும்பங்களிற்கு 16,120 வீடகள் தேவைப்படுகின்றன. அதேபோன்று சிங்கள குடும்பங்களிற்காக 5543வீடுகள் தேவைப்படுவாதாக அடையாளம் காணப்பட்டுள்ளது. மொத்தமாக 21,663 வீடுகள் நிர்மானிக்கப்பட வேண்டியுள்ளன. 

இம் மக்கள் இடம்பெயர்ந்ததால் அவர்களது வாக்குரிமை, அரசியல் உரிமைகளுக்கு பாதிப்புக்கள் ஏற்பட்டுள்ளன. பிறப்பு, இறப்பு அத்தாட்சிப் பத்திரங்களை பெற்றுக்கொள்ளல் , பிள்ளைகளை பாடசாலைகளில் சேர்த்தல்  ஆகியவற்றிலும்  சிக்கல்களை சந்திக்க வேண்டியுள்ளதோடு, அரச சேவைகளை பெற்றுக் கொள்வதிலும் நெருக்கடிகளை எதிர்நோக்க  வேண்டியேற்பட்டுள்ளது. 

எனவே இந்த மக்களை மீள்குடியேற்றும்போது அனைத்து வசதிகளையும் பெற்றுக் கொடுப்பதற்காக அமைச்சர்களான ரிஷாத் பதியூதீன், பைஸர் முஸ்தபா ஆகியோரின் இணைத் தலைமையுடன் மாவட்ட உயர் அதிகாரிகள் உள்ளடங்கிய  செயலணியொன்றை அமைப்பதற்கும் அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. 

இதேவேளை அரச கரும மொழிக் கொள்கையை வினைத்திறனாக அமுல்படுத்த வருடாந்த கணக்கு ஒதுக்கீட்டில் விசேட ஒதுக்கீட்டை முன்னெடுக்கவும் அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. 

2020 ஆம் ஆண்டளவில் இலங்கை பிரஜைகள் விரும்பிய தேசிய மொழியில் சேவைகளை பெற்றுக் கொள்வதற்காகவும் அரச மொழிகளை நடைமுறைப்படுத்தவும், 2017 தொடக்கம் அனைத்து அமைச்சர்களுக்கும் தனியான விடயத்தின் கீழ் நிதி ஒதுக்கீடு செய்வது  தொடர்பில் அமைச்சர் மனோ கணசேன் முன்வைத்த அமைச்சரவை பத்திரத்திற்கும் அமைச்சரவை அங்கீகாரம் கிடைத்துள்ளது. 

No comments

Powered by Blogger.