Header Ads



சம்பந்தன் கூறியிருப்பதை, ஏற்றுக்கொள்ள முடியாது - ஹரீஸ்

(அகமட் எஸ். முகைடீன், ஹாசிப் யாஸீன்)

வடக்கு கிழக்கு மாகாணங்களை இணைத்து அதன் முதலமைச்சர் பதவியினை முஸ்லிம் ஒருவருக்கு வழங்குவதற்கு நாங்கள் தயார் என்றும், முஸ்லிம்களின்  பிரச்சினைகளுக்கு தீர்வு முதலமைச்சர் பதவிதான் என எதிர்க்கட்சி தலைவர் சம்பந்தன் ஐயா கூறியிருப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவரும் விளையாட்டுத்துறை பிரதி அமைச்சருமான சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ் தெரிவித்தார்.

நேத்ரா தொலைக்காட்சியில் வெள்ளிக்கிழமை (22) நடைபெற்ற வெளிச்சம் நேரடி நிகழ்ச்சியில் விளையாட்டுத்துறை பிரதி அமைச்சர் ஹரீஸ் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டார். மேலும் அவர் இந்நிகழ்வில் கருத்து தெரிவிக்ககையில்.

தெற்கிலுள்ள பெரும்பான்மை சிங்களத் தலைமைகள் அன்று இருந்த தமிழ் தலைமைகளான ஜீ.ஜீ.பொன்னம்பலம் போன்றவர்களுக்கு மத்திய அரசில் அமைச்சுப் பதவிகளைக் கொடுத்து இதுதான் தமிழ் மக்களின் அதிகாரம் என்ற அடிப்படையில் தீர்வினை வழங்க எவ்வாறு முயற்சி எடுத்தார்களோ, அதே போன்றதொரு முயற்சியினை எதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தன் ஐயா கையில் எடுத்திருப்பது மனவேதனையை தருகின்ற விடயமாகும்.

வடக்கு கிழக்கு மாகாணங்கள் நிரந்தரமாக இணைக்கப்படுகின்றபோது ஒரு முஸ்லிமை முதலமைச்சராக வைப்பதற்கு தாங்கள் தயார் என்று அவர் பகிரங்கமாக கூறியிருக்கிறார். ஓரு அமைச்சர் அல்லது ஓரு முதலமைச்சர் என்கின்ற பதவி நிலையினை வழங்குவதன் மூலம் முஸ்லிம் சமூகத்தை திருப்திப்படுத்தலாம் என நினைப்பது  தீர்வுத்திட்டத்தில் ஒரு சமூகத்திற்கு வழங்கப்படுகின்ற தீர்வுப் பங்காக கருதமுடியாது.

இதனை நாங்கள் மாறிப் பார்த்தால், தெற்கிலுள்ள சிங்கள தலைமைகள் சம்பந்தன் ஐயாவை அல்லது செல்வம் அடைக்கல நாதன் ஐயாவை பிரதமராக்குகின்றோம் தமிழ் மக்களுக்கான சமஷ்டி தீர்வை அல்லது வடக்கு கிழக்கு இணைப்பை கைவிடுங்கள் என்று கேட்டால் எப்படி இருக்கும். நீங்கள் அப்பதவியினை ஏற்று உங்கள் கோரிக்கையினை கைவிட்டு விடுவீர்களா? எனக் கேட்க விரும்புகின்றேன்.

சேதாரம் இல்லாத விட்டுக் கொடுப்பு அவசியம் என்று அண்மையில் கரவெட்டியில் கட்சியின் தலைவர் ரவூப் ஹக்கீம் பேசிய விடயத்தை திரிவுபடுத்தி ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் வடக்கு கிழக்கு இணைப்புக்கு பச்சைக் கொடி காட்டியிருக்கின்றது என்று மெருகூட்டி கூறுகின்றனர். இவ்வாறு திரிவுபடுத்தி கூறுவது  பிழையான விடயமாகும்.

முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவர் என்றவகையில், முஸ்லிம் மக்களின் பிரச்சினை பதவிகள் அல்ல எவ்வாறு தமிழ் மக்கள் சிங்கள பெரும்பான்மை அரசின் தயவில்லாமல் தங்களை தாங்களே ஆள வேண்டும் என்ற கோரிக்கை எந்தளவு நியாயமானதோ அதேபோன்று கிழக்கு மாகாண முஸ்லிம்களுக்கு நிலத் தொடர்பற்ற ஒரு அலகை உருவாக்க வேண்டும் என்ற கோரிக்கையாகும். இதுவே எமது மறைந்த பெருந்தலைவர் அஷ்ரஃப்பின் அரசியல் எதிர்பார்ப்பாகவும் இருந்தது.

தற்போது நாட்டில் புதிய அரசியல் அமைப்பு உருவாக்கம் தொடர்பாக பேசப்படுகின்றது. இந்த சூழ்நிலையில் வடக்கு கிழக்கு இணைப்பு சம்பந்தமாக பேசுகின்ற தமிழ்த்  தலைமைகள் முஸ்லிம்களுக்கு கிழக்கு மாகாணத்தில் நிலத் தொடர்பற்ற ஒரு மாகாணத்தையும், அம்பாறை மாவட்டத்தில் தமிழ் மொழி பேசும் மக்களுக்கான ஒரு கரையார மாவட்டத்தையும் உருவாக்குவதற்கு தயார் என்ற விடயத்தை ஏன் பகிரங்கமாக பேசமுடியாது?. இவ்வாறு பேசாமல் எவ்வாறு நிரந்தர இணக்கப்பாட்டிற்கு வர முடியும்.

இவற்றை நான் முஸ்லிம்களுக்காக மாத்திரம் பேசவில்லை. கரையோர மாவட்டம் என்பது தமிழ் பேசும் சமூகத்தின் தேவையாக காணப்படுகின்றது. அம்பாறை மாவட்டத்தில் 68 வீதமான தமிழ் பேசும் மக்கள் உள்ள நிலையில் அரச இயந்திரம் அம்பாறையில் அமைந்துள்ளது. அதுமாத்திரமல்லாது அங்குள்ள சிங்கள அதிகாரிகளினால் அம்மக்களின் தேவை தொடர்பில் எதனையும் புரிந்து கொள்ள முடியாத நிலை காணப்படுகின்றது.

இவ்வாறு அங்குள்ள மக்களின் பிரச்சினைகளை புரியாத நிலையில் அரச இயந்திரம் உள்ளது. எனவே இந்த கால கட்டத்திலாவது இதனை தமிழ் தேசியக் கூட்டமைப்பு முன்வந்து அம்பாறை மாவட்டத்தில் நிலத் தொடர்பற்ற கரையோர மாவட்டத்தை ஏன் அமைக்க முடியாது?. இவ்வாறு தமிழ் தேசிய கூட்டமைப்பு முன்வராத நிலையில் முஸ்லிம் காங்கிரஸ் ஒருபோதும் வடக்கு கிழக்கு இணைப்பிற்கு துணையாக இருக்காது. இதனை மிகத் தெளிவாக நாம் கூறுகின்றோம் என பிரதி அமைச்சர் தெரிவித்தார்.

No comments

Powered by Blogger.