சிரியாவுக்குச் செல்ல பறவைகளுக்கும் தடை - துருக்கி அதிகாரிகள்
அருகிவரும் பறவை இனங்கள் சிரியாவுக்கு புலம்பெயர்வதை தடுக்க துருக்கி சுற்றுச்சூழல் அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
இவ்வாறு சிரியாவுக்குச் செல்லும் பறவைகள் மீண்டும் திரும்பாததாலேயே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 200க்கும் அதிகமான வடக்கு போல்ட் இபிசஸ் பறவைகள் தெற்கில் சிவில் யுத்தம் நீடிக்கும் சிரியாவுக்கு செல்லவிடாமல் கூண்டில் அடைக்க துருக்கி வன மற்றும் நீர் திட்டமிடல் அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.
சிரிய எல்லையை ஒட்டி இருக்கும் பிரெசிக் இனப்பெருக்க மையம் ஒன்றை சூழவே இந்த பறவைகள் வசிக்கின்றன. எனினும் கடந்த நான்கு ஆண்டுகளாக தெற்கிற்கு புலம்பெயரும் இந்த பறவைகளில் பெரும்பாலானவை மீண்டும் திரும்புவதில்லை என்று துருக்கி குறிப்பிடுகிறது. குளிர்காலத்தில் வடக்கு போல்ட் இபிசஸ் பறவை எத்தியோப்பியா போன்ற தொலைதூரம் வரை பறக்கின்றது.
முன்னர் இந்த பறவைகளின் பாதுகாப்பு குறித்த விடயத்தில் துருக்கி மற்றும் சிரியாவுக்கு இடையில் நல்லுறவு நீடித்து வந்தது. 2010இல் துருக்கி ஆறு இபிசஸ் பறவைகளை சிரியாவுக்கு இனப்பெருக்கத்திற்காக வழங்கியபோதும் வெறும் நான்கு பறவைகளாக அது குறைந்தது.
Post a Comment