நான் பிரதமருக்கு, கட்டுப்பட்டவன் அல்ல - மைத்திரிபால
இதற்கு முன்னர் இருந்த ஜனாதிபதிகள் நடந்துகொண்டதைப் போல நடந்துகொள்ளத் தான் தயாரில்லை என வலியுறுத்திய ஜனாதிபதி, தான் ஜனநாயகத்தையும் ஒற்றுமையையும் மதிக்கும் அனைவரதும் குரல்களுக்கு செவிசாய்க்கும் ஒரு ஜனாதிபதி எனக் குறிப்பிட்டார்.
தற்போதுள்ள ஜனாதிபதி, பிரதமருக்குக் கட்டுப்பட்டவரென முன்னாள் அமைச்சர் ஒருவர் கூறியதை நினைவுகூர்ந்த ஜனாதிபதி, தான் இந்நாட்டின் பொதுமக்களுக்கு மாத்திரமே கட்டுப்படுவதாகத் தெரிவித்தார். அப்போதிருந்த ஏகாதிபத்திய ஆட்சி மக்களினால் நிராகரிக்கப்பட்டதன் காரணமாகவே தான் இந்நாட்டு ஜனாதிபதிப் பதவிக்கு நியமிக்கப்பட்டதாகக் கூறிய ஜனாதிபதி, அனைவரது குரல்களுக்கும் தான் செவிசாய்த்து நாட்டின் தேவையின் அடிப்படையிலேயே தீர்மானம் மேற்கொள்வதாகக் குறிப்பிட்டார். தாமரைத் தடாக அரங்கில் சனிக்கிழமை (02) முற்பகல் இடம்பெற்ற சர்வதேச கூட்டுறவு தின வைபவத்தில் உரையாற்றிய போதே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இதனைத் தெரிவித்தார். இந் நாட்டின் கூட்டுறவுத் துறையில் மறுமலர்ச்சியை ஏற்படுத்துவதற்காகப் புதியதொரு சட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு நடவடிக்கை மேற்கொள்வதாகவும் ஜனாதிபதி இங்கு குறிப்பிட்டார்.
அவ்வாறே கூட்டுறவுச் சங்கங்களுக்கு 2017 - 2018ஆம் ஆண்டுகளுக்காக சுங்கத்தீர்வைகளற்ற லொறி வண்டிகளை வழங்குவதற்கான பிரேரணையினை அமைச்சரவையில் சமர்ப்பிப்பதாக ஜாதிபதி குறிப்பிட்டார். வட் வரி முறைமை காரணமாக மக்களின் அன்றாட வாழ்வில் உருவாகியுள்ள பிரச்சினைகளுக்குத் தீர்வு வழங்கி தேவையான நிவாரணங்களை வழங்குவதற்கு தற்போது பிரதமர் மற்றும் அமைச்சரவையுடன் இணைந்து தெளிவான ஒரு தீர்மானத்தினை மேற்கொள்வதற்கு தான் தயாராகவுள்ளதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.
அரசு என்ற ரீதியில் ஒருபோதும் பொதுமக்கள் மீது சுமையினை சுமத்துவதற்கு தான் தயாரில்லை எனத்தெரிவித்த ஜனாதிபதி, இன்று தேசிய பொருளாதாரம் எதிர்நோக்கியுள்ள முக்கியமான பிரச்சினையான கடன்சுமையை ஈடுசெய்தல், அந்நிய செலாவணி ஒதுக்கினை பலப்படுத்துதல் மற்றும் சென்மதி ஏற்றுமதி வர்த்தக நிலுவையினைக் குறைத்தல் ஆகிய பிரச்சினைகளுக்கு முறையான திட்டமிடலினூடாக தீர்வு காணப்படுமெனத் தெரிவித்தார். நாட்டை அபிவிருத்தி செய்ததாக யார் எதைக் கூறிய போதும் கடந்த பல ஆண்டுகளாக எமது உள்நாட்டு கைத்தொழில் துறை பாரிய பின்னடைவைச் சந்திக்க வேண்டி நேரிட்டதெனக் கூறிய ஜனாதிபதி, தேசிய பொருளாதாரத்துக்கு வலுசேர்த்து நாட்டின் வருமானத்தை அதிகரிப்பதே அரசாங்கத்தின் எதிர்பார்பாகும் எனத் தெரிவித்தார்.
Post a Comment