அல்லாஹ் எங்களை தண்டிக்கட்டும் - பொதுபல சேனா
-விடிவெள்ளி ARA.Fareel-
'நாங்கள் முஸ்லிம்களின் அல்லாஹ்வையும் முஹம்மத் நபியையும் அவமானப்படுத்தவில்லை. இதனை எங்கும் நிரூபிக்கத் தயாராக இருக்கின்றோம்.
எமது செயலாளர் ஞானசார தேரர் அல்லாஹ்வையும் முகம்மத் நபியையும் அவமானப்படுத்தியிருந்தால் அல்லாஹ் எங்களை தண்டிக்கட்டும் என பொதுபலசேனா அமைப்பின் நிறைவேற்று பணிப்பாளர் கலாநிதி டிலன்த விதானகே தெரிவித்தார்.
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபை, ஆர்.ஆர்.ரி அமைப்பு முஸ்லிம் கவுன்ஸில் அமைச்சர் ரிசாத் பதியுதீன், அசாத்சாலி ஆகியோர் முன்வைத்துள்ள ஞானசார தேரரின் கருத்துகளுக்கு எதிரான முறைப்பாடுகள் தொடர்பில் பொதுபலசேனாவின் நிலைப்பாட்டினை அவர் விளக்கினார்.
ஞானசார தேரரின் உரையையும் வெளியிட்ட கருத்துகளையும் தவறாகப் புரிந்து கொண்டு அரசியல்வாதிகளும் முஸ்லிம் அமைப்புகளும் முஸ்லிம்களை தவறாக வழிநடாத்துவதுடன் வெறுப்புணர்வினைத் தூண்டுகின்றன என்றும் அவர் கூறினார்.
அவர் தொடர்ந்தும் விளக்கமளிக்கையில்
'அசாத்சாலி நடாத்திய பத்திரிகை மாநாட்டில் ஞானசார தேரருக்கு சவால் விட்டிருக்கிறார். சிறையில் அடைக்க வேண்டுமென்று கோரியிருக்கிறார். ஞானசார தேரரை சிறையில் அடைப்பதற்கு அசாத்சாலி யார்? ஞானசார தேரர் அல்லாஹ்வையும் முஹம்மத் நபியையும் நிந்தித்தால் தற்கொலைப் படையாக மாறி அவரை கொல்வதற்கும் தயார் என்று சவால் விட்டிருக்கிறார்.
அல்லாஹ்வையும் குர்ஆனையும் நிந்தித்தவர்களின் பெயர்பட்டியல் ஒன்று எம்மிடம் இருக்கிறது. நாம் அப்பட்டியலை அசாத் சாலிக்கு வழங்கத் தயாராக இருக்கிறோம்.
முதலில் அவர்களைக் கொன்றுவிட்டு அவர் தானும் இறக்கட்டும். அவர் நிறைவேற்றத் தயாரா? என்று கேட்கிறோம்.
ஞானசாரதேரர் தான் ஏதும் தவறாகப் பேசியிருந்தால் அல்லாஹ்விடம் போய் முறையிடுங்கள் முஹம்மத் நபியூடாக முறையிடுங்கள் என்றே சொல்லியிருக்கிறார். இதில் என்ன தவறு இருக்கிறது. யாரும் எமக்குத் தவறு செய்தால், அநியாயம் செய்தால் நாம் கடவுளிடம் தானே முறையிடவேண்டும். அல்லாஹ்விடம் தானே நீதி கேட்க வேண்டும்.
நாட்டிலுள்ள சம்பிரதாய முஸ்லிம்கள் இவ்விவகாரத்தில் குழப்பமடையத் தேவையில்லை. பொதுபலசேனா அமைப்பை அரசியல்வாதிகள் தமது சொந்த நலத்துக்காக தீவிரவாத அமைப்பாக விளம்பரப்படுத்துவதற்கு முயற்சிக்கிறார்கள். நாம் எமது நடவடிக்கைகளில் தெளிவாகவே இருக்கிறோம்.
பௌத்த மதத்தின் பாதுகாவலர்கள் என்றவகையில் பௌத்த மதத்துக்கும் பௌத்த கொடிக்கும் ஆபத்து விளைவிக்கும்போது அதனை தட்டிக் கேட்பதில் என்ன தவறு இருக்கிறது என்றார்.
Post a Comment