Header Ads



"இலங்கையில் நடைபெறும் ஆபத்து - 3 நாடுகளின் பிடியில் மைத்திரி - ரணில்"

தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான அமெரிக்காவின் உதவி இராஜாங்கச் செயலர் நிஷா பிஸ்வாலின்  சிறிலங்கா நோக்கிய அவசர பயணமானது எவ்வித நோக்கமுமற்றது எனக் கருத முடியாது. ஏனெனில் பிஸ்வாலின் இராஜாங்கத் திணைக்களம் மைத்திரி – ரணில் அரசாங்கம் தொடர்பாக அண்மைய சில மாதங்களாகப் பெற்றுக் கொண்ட அறிக்கைகள் பாராட்டத்தக்கவையாக இருக்கவில்லை.

குறிப்பாக, சிறிலங்காவின் மத்திய வங்கி ஆளுநர் அர்ஜூன் மகேந்திரன் விவகாரம் தொடர்பாக மைத்திரி மற்றும் ரணில் இடையில் ஏற்பட்ட பனிப்போர் தொடர்பாக அமெரிக்காவின் தெற்கு மத்திய ஆசிய விவகாரங்களுக்கான இராஜாங்கத் திணைக்களத்தால் பெற்றுக் கொள்ளப்பட்ட அறிக்கையானது சிறிலங்கா அரசாங்கம் மீது ஒபாமா அரசாங்கம் கொண்டுள்ள நம்பிக்கைக்கு குந்தகம் விளைவித்திருக்கலாம்.

சிறிலங்கா வாழ் மக்களின் வாக்குகள் மூலம் மீண்டும் ஜனநாயக ஆட்சி வெற்றி பெற்றுள்ளதானது முழு உலகிற்கும் முன்மாதிரியாகும் என அமெரிக்க அரசாங்கத்தின் இராஜாங்கத் திணைக்களம் விடுத்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது. மைத்திரி- ரணில் அரசாங்கம் ஆட்சிக்கு வந்த பின்னர் இடம்பெற்ற ஐ.நா மனித உரிமைகள் ஆணைக்குழுவின் முதலாவது கூட்டத் தொடரில் சிறிலங்கா மீது அமெரிக்கா நம்பிக்கை கொண்டுள்ளது என்பதை உலகிற்குக் காண்பிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.

இதனால் அமெரிக்காவின் தலைமையில் முன்வைக்கப்பட்ட தீர்மானத்திற்கு சிறிலங்காவும் இணைஅனுசரணை வழங்கியிருந்தது. இந்நிலையில் இவ்வாறானதொரு நம்பிக்கைக்கு ஊறுவிளைவிப்பதற்கு அமெரிக்கா தயாராகவுள்ளது என்பதை நினைத்துப் பார்ப்பது சாத்தியமற்றதாகும்.

சிறிலங்காவில் இடம்பெற்ற யுத்தத்தின் போது யுத்தக் குற்றங்கள் இழைப்பதற்குக் கட்டளையிட்ட மகிந்த, கோத்தபாய, பொன்சேகா மற்றும் இராணுவத் தளபதிகளுக்கு எதிராக அனைத்துலகக் குற்றவியல் நீதிமன்றத்தால் தண்டனை வழங்கப்பட வேண்டும் என அனைத்துலக மனித உரிமை அமைப்புக்களால் அழுத்தம் கொடுக்கப்பட்ட போது, அனைத்துலகக் குற்றவியல் நீதிமன்றின் விசாரணையிலிருந்து மைத்திரி-ரணில் அரசாங்கத்தை வெளியேற்றுவதற்கு அமெரிக்காவின் திட்டமிடலே காரணமாகும்.

அமெரிக்காவின் இத்திட்டத்தின் பெறுபேறாகவே, தமிழர் ஒருவர் சிறிலங்காவின் பிரதம நீதியரசராக நியமிக்கப்பட்டமையும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் ஆர்.சம்பந்தன் நாட்டின் எதிர்க்கட்சித் தலைவராகியமையும் மற்றும் பிறிதொரு தமிழர் ஒருவர் மத்திய வங்கி ஆளுநராக நியமிக்கப்பட்டமையும் சாத்தியமாகியது.

போர்க்குற்றங்கள் தொடர்பில் சிறிலங்கா பொறுப்புக்கூற வேண்டும் என அனைத்துலக மனித உரிமை அமைப்புக்கள் அழுத்தம் கொடுத்த வேளையில், இது தொடர்பில் அமெரிக்கா கடுமையானதொரு கோட்பாட்டைப் பிரகடனப்படுத்தியது. இக்கோட்பாட்டின் மூலம் மைத்திரி – ரணில் அரசாங்கத்தை மனித உரிமை அமைப்புக்களின் அழுத்தங்களிலிருந்து அமெரிக்கா பாதுகாத்துள்ளது.

இதே அமெரிக்கா, மகிந்தவின் ஆட்சிக்காலத்தில் சிறிலங்காவிற்கு எதிராக அனைத்துலக மனித உரிமை அமைப்புக்களைத் தூண்டிவிட்டமையும் இங்கு சுட்டிக்காட்டத்தக்கதே.

மைத்திரி-ரணில் அரசாங்கத்தைப் பாதுகாப்பது தொடர்பான அமெரிக்காவின் இத்தகைய செயற்பாடானது 1987ல் இந்தியா எதிர்நோக்கிய நிகழ்விற்கு ஒப்பானதாகும். சிறிலங்காவின் முன்னாள் தலைவர் ஜே.ஆருக்கு எதிராக தமிழீழ விடுதலைப் புலிகள் உட்பட தமிழ் ஆயுதக் குழுக்களைத் தூண்டிவிட்டு இவர்களின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருந்த இந்தியா பின்னர் ஜே.ஆருடன் இணைந்து சிறிலங்கா சார்பாக புலிகள் அமைப்பு உட்பட அனைத்து தமிழ் ஆயுதக் குழுக்களையும் இல்லாதொழிப்பதற்காக இந்திய – இலங்கை ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டது. இந்தியா கடைப்பிடித்த நிலைப்பாட்டையே தற்போது அமெரிக்காவும் கடைப்பிடிக்கின்றது.

அமெரிக்கக் கோட்பாட்டில் ஏற்பட்டுள்ள மாற்றம்:

தமிழர் ஒருவரை மத்திய வங்கியின் ஆளுநராக நியமிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் அர்ஜூன் மகேந்திரன் விடயத்திலும் அமெரிக்கா தலையீடு செய்தது. அர்ஜூன் மகேந்திரன், சிறிலங்காவின் மத்திய வங்கி ஆளுநராக இருந்த வேளையில் மைத்திரி- ரணில் அரசாங்கம் நிதிப்பிரச்சினைகளிலிருந்து விடுபடுவதற்கு உதவியாக இருந்தார்.

இந்நிலையில் பிஸ்வாலின் சிறிலங்காவிற்கான பயணம் அரசாங்கத்தைப் பலப்படுத்துவதை நோக்காகக் கொண்டதாகும். சிறிலங்காவில் நிரந்தர சமாதானம் ஏற்படுத்தப்பட்டால், இதனுடைய பொருளாதாரமும் மேலும் கட்டியெழுப்பப்பட வேண்டும் எனவும் பிஸ்வால் சுட்டிக்காட்டியிருந்தார். பிஸ்வாலின் இந்த நிலைப்பாடானது அமெரிக்காவின் கோட்பாட்டு மாற்றத்தையே சுட்டிக்காட்டுகிறது.

சிறிலங்காவில் போர் முடிவடைந்த பின்னர் அமெரிக்காவின் அரசியல் நிகழ்ச்சி நிரலில் மனித உரிமை விவகாரம் முன்னுரிமைப்படுத்தப்பட்ட போதிலும், இந்த முன்னுரிமையானது தற்போது பொருளாதார நிகழ்ச்சி நிரலாக மாற்றமடைந்துள்ளது. நிஷா பிஸ்வால் இந்தத் தகவலைப் பரிமாறிக் கொள்வதற்காக சிறிலங்காவிற்கு அவசர பயணம் மேற்கொண்ட போது, சீன வெளிவிவகார அமைச்சர் ஏற்கனவே சிறிலங்காவிற்கான பயணத்தை முடித்திருந்தார்.

சீன வெளிவிவகார அமைச்சரின் சிறிலங்காவிற்கான பயணம் தொடர்பில் இரகசியம் பேணப்பட்டிருந்தது. இவரது இந்தப் பயணம் தொடர்பாக சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் கூட அறிந்திருக்கவில்லை. ரணில் சீனா தொடர்பான தீர்மானங்களை இயற்றும் போது அவை தொடர்பாக வெளிவிவகார அமைச்சருக்குத் தெரியப்படுத்துவதில்லை. ஏனெனில் சிறிலங்காவின் வெளிவிவகார அமைச்சில் மகிந்த விசுவாசிகள் அதிகளவில் பணியாற்றுகின்றனர். இந்த அடிப்படையில், ரணில் சீனாவிற்கான தனது பயணம் தொடர்பாக வெளிவிவகார அமைச்சின் தலையீடின்றி அலரி மாளிகையில் வைத்தே திட்டமிட்டிருந்தார்.

அம்பாந்தோட்டைத் துறைமுகம், கொழும்புத் துறைமுகம், மத்தல விமான நிலையத் திட்டங்களை சீனாவிடம் கையளிப்பது தொடர்பான ஏற்பாடுகள் வெளிவிவகார அமைச்சிற்கு அறிவிக்கப்படாது இரகசியமாகவே மேற்கொள்ளப்பட்டது. ரணிலின் இரகசியமான சீன-சிறிலங்கா திட்டமிடலின் ஊடாகவே சீன வெளிவிவகார அமைச்சரின் சிறிலங்கா பயணமும் அமைந்தது.

மைத்திரி-ரணில் அரசாங்கமானது ஆரம்பத்தில் சீனாவின் அம்பாந்தோட்டைத் துறைமுகத் திட்டத்தை நிறுத்தி வைத்தபோது சீனா ஆத்திரமுற்ற போதிலும், சீன வெளிவிவகார அமைச்சரின் சிறிலங்காவிற்கான அண்மைய பயணமானது சிறிலங்காவுடன் சீனா நட்புறவைத் தொடர்ந்தும் கட்டியெழுப்புவதில் ஆர்வமாக உள்ளது என்பதற்கான ஒரு சமிக்கையாகும்.

சிறிலங்காவிற்கான பொருளாதார நிகழ்ச்சி நிரல் தொடர்பாக பிஸ்வால் அறிவிப்பதற்கு சற்று முன்னரே, சீன வெளிவிவகார அமைச்சர் சிறிலங்காவிற்குப் பயணம் மேற்கொண்டதுடன், சீனா தற்போதும் சிறிலங்காவின் பிரதான பொருளாதாரப் பங்காளியாக இருப்பதாகத் தெரிவித்திருந்தார்.

பிஸ்வாலின் சிறிலங்கா பயணத்தை இந்தியா அறிந்திருந்தது. ஆனால் சீன வெளிவிவகார அமைச்சரின் பயணம் தொடர்பில் இரகசியம் பேணப்பட்டமை இந்தியாவிற்கு விசனத்தை உண்டுபண்ணியது. Krrish Co நிறுவனத்துடன் தொடர்புபட்ட நில ஊழல் விவகாரம் தொடர்பான தகவல்களை சிறிலங்காவிற்கு இந்தியாவே வழங்கியிருந்தது. இந்த விடயத்தில் இந்தியா தலையீடு செய்து தகவலைப் பெற்றுக் கொடுக்காவிட்டிருந்தால், சிறிலங்காவால் நாமல் ராஜபக்சவைக் கைதுசெய்திருக்க முடியாது.

ஆகவே இந்த நிறுவனத்திடமிருந்து பெற்றுக்கொள்ளப்பட்ட ஊழல் விவகாரத் தகவலானது உண்மையில் மைத்திரி-ரணில் அரசாங்கத்திற்குக் கிடைத்த வெற்றியாகும். இத்தகவலைப் பெற்றுக் கொடுப்பதில் இந்திய உதவிய போதிலும் சிறிலங்கா சீனாவிடம் நெருங்கிப் பழகுவதானது இந்தியாவிற்குக் கவலை அளித்துள்ளது.

இந்தியா மற்றும் சீனாவுடன் சமமான உறவைப் பேணுவதே சிறிலங்கா அரசாங்கத்தின் இலக்காக இருக்க வேண்டும்.

ஆங்கிலத்தில் – உபுல் ஜோசப் பெர்னான்டோ, வழிமூலம்    – சிலோன் ருடே, மொழியாக்கம் – நித்தியபாரதி

No comments

Powered by Blogger.