கொழும்பு துறைமுகத்தில் 3 நாடுகளின் 4 போர்க் கப்பல்கள்
அமெரிக்கா, ஜப்பான் மற்றும் ஓமான் ஆகிய நாடுகளின் 4 யுத்தக் கப்பல்கள் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளன.
அமெரிக்காவின் நியூ ஓர்லின்ஸ் என்ற யுத்தக் கப்பல் நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை இலங்கையை வந்தடைந்துள்ளதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.
உத்தியோகபூர்வமாக இலங்கையை வந்தடைந்துள்ள இந்தக் கப்பல் 6 நாட்கள் இலங்கையில் நிற்குமெனவும் கடற்படையினரால் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் பல நிகழ்வுகளிலும் இவர்கள் கலந்து கொள்ளவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நியூ ஓர்லின்ஸ் கப்பலானது இலங்கைக் கடற்படையினரின் பயிற்சிக்காகவும் இந்தக் காலப் பகுதியில் பயன்படுத்தப்படவுள்ளதாகவும் கடற்படை தெரிவித்துள்ளது.
இதேவேளை, ஜப்பானிலிருந்து இனசுமா மற்றும் சுசுட்சுகி ஆகிய இரண்டு கப்பல்கள் இரண்டு நாடுகளுக்குமிடையில் சுமுக உறவை மேலும் வளப்படுத்தும் நோக்கில் கொழும்பு துறைமுகத்தை நேற்று வந்தடைந்துள்ளன.
இதற்கிடையில் ஓமான் கடற்படையிலிருந்து காசெப் என்ற கப்பலொன்றும் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.
Post a Comment