துருக்கியின் 2 இராணுவ ஜெனரல்கள், துபாயில் கைது
துருக்கியில் முறியடிக்கப்பட்ட இராணுவ சதிப்புரட்சியுடன் தொடர்புபட்டு ஆப்கானில் பணியாற்றிய இரு இராணுவ ஜெனரல்கள் துபாயில் விமான நிலையத்தில் வைத்து நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஆப்கானில் இருக்கும் துருக்கி அதிரடிப் படையின் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் மஹ்மத் கஹிட் பாகிர் மற்றும் பிரகேடியர் ஜெனரல் செனெர் டொபுக் ஆகியோரே கைது செய்யப்பட்டுள்ளனர்.
துருக்கி தேசிய உளவுப் பிரிவு மற்றும் ஐக்கிய அரபு இராச்சிய நிர்வாகத்திற்கு இடையிலான ஒத்துழைப்பு அடிப்படையிலேயே இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக துருக்கி அரச ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
எனினும் துருக்கிக்கு வெளியில் சிரேஷ் இராணுவ அதிகாரி ஒருவர் கைது செய்யப்படுவது இது முதல் முறையாகும்.
மறுபுறம் இந்த இராணுவ சதிப்புரட்சி சந்தேகத்தில் இஸ்தான்பூல் முன்னாள் ஆளுநர் ஹூஜைன் அவ்னி முத்லுவும் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதுவரையில் 100 ஜெனரல்கள் உட்பட 13,000க்கும் அதிகமான இராணுவத்தினர் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
இராணுவ சதிப்புரட்சி முயற்சி தொடர்பில் மதப்போதகர்கள், அல் குர்ஆன் பயிற்றுனர்கள் உட்பட மொத்தம் 1,112 மத விவகார இயக்குனரக பணியாளர்கள் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
Post a Comment