Header Ads



மட்டக்களப்பு - கொழும்பு நெடுஞ்சாலையில் விபத்து - 2 பேர் வபாத்

மட்டக்களப்பு - கொழும்பு நெடுஞ்சாலையில், மோட்டார் சைக்கிள்கள் இரண்டு நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் மோட்டார் சைக்கிளைச் செலுத்திச் மாணவரொருவரும் மற்றோர் இளைஞனும் பலியாகியதுடன், மோட்டார் சைக்கிளில் பின்புறம் அமர்ந்து சென்ற ஒரு மாணவனும் இன்னுமொரு இளைஞனும் படுகாயமுற்றுள்ளதாக வாழைச்சேனைப் பொலிஸார் தெரிவித்தனர். 

இச்சம்பவம் மட்டக்களப்பு - பொலன்னறுவை மாவட்டங்களின் எல்லைக் கிராமமான வாழைச்சேனைப் பொலிஸ் பிரிவிலுள்ள ஜெயந்தியாயவில், இன்று புதன்கிழமை மாலை (29) 6.20 மணியளவில் இடம்பெற்றுள்ளது. 

ஜெயந்தியாய கிராமத்தைச் சேர்ந்த 10ஆம் தரத்தில் கல்வி கற்கும் கரீம் ஹஸ்மிர் (வயது 16) மற்றும் கூலித் தொழிலாளியான அதே கிராமத்தைச் சேர்ந்த நிஸ்தார் மிஸ்பாக் (வயது 20) ஆகியோரே உயரிழந்துள்ளனர். மரணமான இருவரின் சடலங்களும் வெலிக்கந்தை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளன. 

மேலும் மோட்டார் சைக்கிள்களின் பின்னால் அமர்ந்து சென்ற ஓட்டமாவடி மத்திய கல்லூரி மாணவனான சனூஸ் இம்தாத் (வயது 16) மற்றும் முஹம்மத் ஷியாம் (வயது 30) ஆகியோர் படுகாயங்களக்குள்ளான நிலையில் பொலன்னறுவை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்த பொலிஸார், இது தொடர்பான மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர். 

ஏ.எச்.ஏ. ஹுஸைன்

No comments

Powered by Blogger.