Header Ads



காலி மேதினக் கூட்டத்தில், இப்படியும் நடைபெற்றது


காலியில் நடைபெற்ற சுதந்திரக் கட்சியின் மேதினக் கூட்டத்தின் வரவேற்பு உரையை நிகழ்த்திய பியசேன கமகே, மைத்திரிக்குப் பதிலாக மஹிந்தவை வரவேற்றுள்ள சுவாரசிய சம்பவம் நடைபெற்றுள்ளது.

காலியில் இன்று நடைபெற்ற சுதந்திரக் கட்சியின் மேதினக் கூட்டத்தின் போது வரவேற்பு உரை நிகழ்த்தும் பொறுப்பு முன்னாள் அமைச்சர் பியசேன கமகேவுக்கு வழங்கப்பட்டிருந்தது.

அவர் தனது வரவேற்பு உரையின்போது, ஜனாதிபதியை வரவேற்கும் கட்டத்தில் மேதகு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச அவர்களே என்று விளித்து வரவேற்றுள்ளார்.

எனினும் அவரது தவறை யாரும் திருத்த முற்படவும் இல்லை. சில நிமிடங்களில் தனது தவறை உணர்ந்து கொண்ட பியசேன கமகே, அவராகவே தனது தவறைத் திருத்தி மேதகு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களே என்று விளித்து வரவேற்பு உரையைத் தொடர்ந்துள்ளார்.

சுதந்திரக் கட்சியின் காலி மேதினக் கூட்டத்தில் பாரிய சனத்திரள் நிரம்பி வழிந்ததுடன், மழையையும் பொருட்படுத்தாமல் சுதந்திரக் கட்சி ஆதரவாளர்கள் மேதினக் கூட்டத்தில் கலந்து கொண்டிருந்தார்கள்.

எனினும் சஜின் வாஸின் அம்பலாங்கொடைத் தொகுதி, கண்டி தேர்தல் தொகுதி ஆகியவற்றிலிருந்து விரல் விட்டு எண்ணக் கூடிய ஆதரவாளர்களே மேதினக் கூட்டத்தில் கலந்து கொண்டிருந்தனர்.

விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகர, சுதந்திரக் கட்சியின் மேதினக் கூட்டத்துக்கு அதிகளவான ஆதரவாளர்களை அழைத்து வந்து சாதனை படைத்திருந்தார்.

No comments

Powered by Blogger.