Header Ads



மன்னார் அரச காணியில் இருந்து, ஒருதொகுதி வெடிபொருட்கள் மீட்பு (படங்கள்)


மன்னார் மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவுக்குற்பட்ட இலுப்பைக்கடவை கமநல சேவைகள் நிலையத்திற்கு சொந்தமான காணியின் பின் பகுதியில் இருந்து இன்று -30- மாலை ஒரு தொகுதி வெடி பொருட்களை பொலிஸார் மீட்டுள்ளனர்.

கடந்த 2008 ஆம் ஆண்டு முதல் 2015 ஆம் ஆண்டு வரையிலான சுமார் 7 வருடங்களாக குறித்த கமநல சேவைகள் நிலையத்திற்கு சொந்தமான காணியில் இலுப்பைக்கடவை பொலிஸ் நிலையம் அமைந்திருந்தது.

இந்த நிலையில் பொலிஸ் நிலையம் சற்று தொலைவில் மாற்றப்பட்ட நிலையில் மீண்டும் கமநல சேவைகள் நிலையம் இயங்கி வந்தது.

இந்த நிலையில் குறித்த இலுப்பைக்கடவை கமநல சேவைகள் நிலையத்திற்கு சொந்தமான காணியின் பின் பகுதியில் பெருந்தொகையான ஆயுதங்கள் புதைக்கப்பட்டுள்ளதாக இலுப்பைக்கடவை பொலிஸாரினால் மன்னார் நீதவானின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டது.

இந்த நிலையில் மன்னார் நீதவான் ஏ.ஜீ.அலெக்ஸ்ராஜா முன்னிலையில், குறித்த பகுதி தோண்டுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

இந்த நிலையில் அடையாளம் காணப்பட்ட குறித்த பகுதி மன்னார் நீதவான் முன்னிலையில் தோண்டப்பட்டது. இதன் போது புதைக்கப்பட்ட நிலையில் பெருந்தொகையான வெடி பொருட்கள் காண்டுபிடிக்கப்பட்டு மீட்கப்பட்டன.

குறித்த குழியில் இருந்து எம்.ஜீ.எல்.40 மில்லி மீற்றர் குண்டுகள்-02, ஆகஸ் கைக்குண்டு-01, ரி.82 தரம் ஒன்று வகை குண்டு-02, ரி.82 வகை இரண்டு குண்டுகள்-05,ஜே.ஆர்.குண்டுகள்-02, கே.400 தர குண்டுகள்-03, சிங்கப்பூர் குண்டு-01, கிளைமோர்-06, ரங்கன் 99 தர நிலக்கண்ணி வெடிகள்-16 மற்றும் அதற்கு பயண் படுத்தப்படும் பியூஸ்கள்-16, பாக்கிஸ்தான் நிலக்கண்ணி வெடிகள்-02, அதற்கான பியூஸ்-01, மின்சார பலகை வெடி பொருள்-01,அருள் செல்கள்-03, 6 மில்லி மீற்றர் மோட்டார் செல்-01,மற்றும் தோண்டப்பட்ட பாரிய குழியில் இருந்து உக்கிய நிலையில் பாரிய இரும்பு பெட்டகம் ஒன்றும் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

மேலும் குறித்த பகுதிக்குள் வரும் மக்களுக்கு ஆபத்துக்கள் ஏற்படாத வகையில் உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் நீதவான் பொலிஸாருக்கு உத்தரவிட்டார். குறித்த ஆயுதங்கள் அகழ்வு செய்யப்பட்ட போது பொலிஸார்,கடற்படை மற்றும் இராணுவ அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வருகை தந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.



No comments

Powered by Blogger.