Header Ads



பிரதமர் ரணிலின் 2 தீர்மானங்கள்

அமைச்சுகளின் நடவடிக்கைகளை கண்காணிக்க தற்போது நாடாளுமன்றத்தில் அமுலில் இருக்கும் ஆலேசானை தெரிவுக்குழுவிற்கு பதிலாக அனைத்து அமைச்சுக்களுக்கும் தலா ஒரு நிறைவேற்றுச் சபையை ஏற்படுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் யோசனைக்கு அமைய ஏற்படுத்தப்பட உள்ள இந்த நிறைவேற்றுச் சபைகளில் சபாநாயகர், பிரதி சபாநாயகர், அமைச்சர்கள், பிரதியமைச்சர்கள், ஆளும் மற்றும் எதிர்க்கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் உறுப்பினர்களாக நியமிக்கப்பட உள்ளனர். 

இதற்காக அரசியலமைப்புச் சட்டத்தின் 82(2) பந்தி நீக்கப்படும் என பிரதமர் அலுவலகத்தின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். 

நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் சகல சட்டமூலங்களும் இரண்டாம் தர வசிப்புக்கு முன்னர், இந்த நிறைவேற்றுச் சபைகளில் ஆராய்ப்படும்.

நிறைவேற்றுச் சபை தொடர்பான யோசனையை பிரதமர் ரணில் விக்ரமசிங்க விரைவில் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ய உள்ளார் எனவும் அந்த அதிகாரி கூறியுள்ளார்.

நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இந்த நிறைவேற்றுச் சபை மூலம் அரச நிர்வாக நடவடிக்கைகளில் பங்கேற்க சந்தர்ப்பம் கிடைக்கும் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

2

புதிய அரசியல் யாப்பை உருவாக்குவதற்கான ஆலோசனை பெறும் செயற்பாடுகளை பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆரம்பித்துள்ளார். அரசாங்கம் ஆட்சி அமைத்து ஆறு மாதங்களுக்குள் புதிய அரசியல் யாப்பை உருவாக்குவதாக பிரதமர் கூறி இருந்தார்.

இதன் அடிப்படையில் இதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்காக புத்திஜீவிகள் மற்றும் சமுக அமைப்புக்களின் பிரதிநிதிகளிடம் ஆலோசனை கோரப்பட்டுள்ளது. இதன்படி தம்மிடமும் இது தொடர்பான ஆலோசனை கோரப்பட்டிருப்பதாக, ஜனாதிபதி சட்டத்தரணி ஜயம்பதி விக்ரமரத்ன தெரிவித்துள்ளார். 

No comments

Powered by Blogger.