சிறைசாலை வாழ்க்கையில், பல அனுபவங்களை பெற்றேன் - ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ
தனது 25 வருட அரசியல் வாழ்க்கையில் சிறைச்சாலை அனுபவத்தை வழங்கியமை தொடர்பில் நல்லாட்சிக்கு எனது நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன் என முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ தெரிவித்துள்ளார்.
பிணை மூலம் விடுதலையாகிய பின்னர் ஊடகவியலாளர்களை சந்தித்து கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
செய்யாத தவறுக்கு என்னை விளக்கமறியலுக்கு அனுப்பினார்கள். நாட்டின் இன்றைய நிலைமையை பார்க்கும் போது மிகவும் மன வேதனையடைகிறேன்.
வன சட்டத்தை அமுலாக்குவதாக மகிந்த ராஜபக்ச ஆட்சியில் தெரிவிக்கப்பட்டது. ஆனால் அக்காலத்தில் வன சட்டம் அமுலாக்கப்படவில்லை. அக்காலத்தில் மகிந்த சிறந்த முறையில் சட்டங்களை நடைமுறைபடுத்தினார்.
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச ஆட்சியில் 10, 11 மணிவரை நீதிமன்றத்தை திறந்து வைத்து எதிரிகளை சிறைச்சாலைக்கு அனுப்பவில்லை. ஆனால் இன்று நாட்டில் வன சட்டமே அமுலாக்கப்படுகின்றது. இன்று முழுமையாக சட்டமற்றவர்கள் அரசராகியுள்ளனர்.
எனது 25 வருட அரசியல் வாழ்க்கையினுள் முதல் தடவையாக நான் சிறையில் வைக்கப்பட்டேன். எனினும் இதன்மூலம் வாழ்க்கையில் பல்வேறு அனுபவங்களை நான் பெற்றேன். சிறைச்சாலை வாழ்க்கையில் நல்ல ஒரு புரிந்துணர்வை பெற்றுக்கொண்டேன்.
இது தொடர்பான அனைத்து விசாரணைகளுக்கும் முகம் கொடுக்க நான் தயாராகவே உள்ளேன். எனது பெயர் கூட இல்லாத ஒரு சம்பவத்திற்கு என்னை விளக்கமறியல் படுத்தியமை குறித்து நான் வருத்தமடைகிறேன்.
நான் விளக்கமறியல் சென்ற நாள் முதல் இன்று வரை என்னை வெளியே கொண்டு வருவதற்கு கஷ்டப்பட்ட அனைத்து சட்டத்தரணிகளுக்கும் எனது மனமார்ந்த நன்றியினை தெரிவித்துக்கொள்கிறேன்.
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச, எனது நெருக்கமான அரசியல் பிரதிநிதிகளுக்கும், எனது அருமை வாக்காளர்கள் உட்பட அனைவருக்கும் விசேடமாக ஊடக நண்பர்களுக்கு எனது நன்றியினை தெரிவித்துக்கொள்கின்றேன்.
இதேவேளை என்னை விளக்கமறியலில் பாதுகாப்பாக பார்த்துக்கொண்டவர்கள் மீதும் நான் மிகுந்த மதிப்பு வைத்திருக்கின்றேன். உண்மையில் வெளியில் இருந்ததை விட விளக்கமறியலில் பாதுகாப்பாக பார்த்துக்கொண்டார்கள்.
விளக்கமறியல் அதிகாரிகள் என்னை கவனித்துக்கொண்டதனை நான் ஒரு போதும் மறக்கமாட்டேன் என முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பிராணான்டோ மேலும் தெரிவித்துள்ளார்.
Post a Comment